பக்கம் எண் :

ஏர

132

             காப்புப் பருவம்

    ஏரால்எண் திசைவளர்க்கும் புகழ்வே ளாளர்
        ஏரடிக்கும் சிறுகோலால் தரணி ஆளச்
    சீராரும் முடிஅரசர் இருந்து செங்கோல்
        செலுத்துவர்வே ளர்புகழ் செப்ப லாமோ

என்றும் பாடிச் சிறப்பித்தல் காண்க.

    கம்பரது நூலாகிய, ஏர் எழுபதிலும் வேளாளர் மேம்பாட்டை நன்கு காணலாம்.  அவற்றைப் பின்வரும் பருவங்களில் எடுத்துக் காட்டுவோமாக.  இன்னோரன்ன காரணங்களால் “ மேம்பட்ட வேளாண்குலம் “ எனப்பட்டது.  இத்தகைய குடியில் தோன்றியவர் சேக்கிழார் ஆதலின்  ‘ வேளாண் குலக் கதிர் ‘ எனப்பட்டார்.

    ஒரு சிலர் சேக்கிழார்மீது குற்றம் சாற்ற முற்படுகின்றனர்.  அவர் காட்டும் குற்றம் பெரிய புராணத்துள் இறைவர் பிராமணராகவே வருகின்றார், வேறு மரபினராக வந்திலரே என்பது.  அவர்கள் பெரிய புராணத்தை முற்றிலும் ஐயம் திரிபர அறியாத குற்றமே ஆகும்.  திருநீலகண்டர் இல்லத்திற்கு  “ அருட்சிவ யோகியாகி “  வந்தார் என்றும், இளையான்குடி மாறர் இல்லத்திற்கு  “ நற்றவத்தர் வேடமே கொடு “  வந்தார் என்றும், திருக்குறிப்புத் தொண்டரிடம் வந்தபோது  “ மாதவ வேடம் தாங்கி “  வந்தார் என்றும், சிறுத்தொண்டர் இல்லத்திற்குச்  “ சித்தம் மகிழ்வயிரவராய் “  வந்தார் என்றும் இவ்வாறு பாடியுள்ளதையும் அவர்தம் நூலில் காண்பாராக.  ஆகவே, அவர் “விமலர்“ என்பதில் ஐயம் உண்டோ? மேலும், இயற்பகையார் இல்லம் போந்தவர் உளத்தின் நிலை இன்னது என அறியாத நிலையில்,  வந்தவர் வேதியராயினும் தூர்த்த வேதியராய், (காமுகராகிய வேதியராய்) வந்தார் என்பதை எவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளார் ! 

    ஆய நுண்பொருள் ஆகியும் வெளியே
        அம்ப லத்துள்நின் ஆடுவார் உம்பர்
    நாய கிக்கும்அது தெரியவோ பிரியா
        நங்கை தான் அறி யாமையோ அறியோம்