பக்கம் எண் :

188

       காப்புப் பருவம்

 

காமல், தொழுது ஏத்தெடுத்தல் செய்வாம் என்று பாடி இருப்பதைக் காணவும்.

    சேக்கிழார் ஒவ்வோர் அடியார்களின் திருவடிகளையும் வணங்கிக் கூறும் இயல்பினர்.  ஆனால், தொகையடியார்களில் திருவடிகளை வணங்கிப் பாடும் முறையினைக் கைக்கொண்டிலர்.   “ பத்தராய்ப் பணிவார்தம் பரிசினைப் பகருவாம் “  என்றும், “ பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவாம் “  என்றும், (சித்தத்தைத் சிவன்பாலே வைத்தார் புராணத்தில் இக்குறிப்பும் இல்லை.) திருவாரூர்ப் பிறந்தார்களைப் பற்றிச் செப்புகையில்  “ சிறியேனால் உரைக்கலாம் தகைமையதோ “  என்றும், முப்போதும் திருமேனி தீண்டுவார்களைப் பற்றிக் கூறுகையில்  “ அப்பெருந்தகையார் குலப்பெருமையாம் புகழும் பெற்றியதோ “ என்றும், (முழுநீறு பூசிய முனிவர் பற்றி இத்தகைய குறிப்புக் காணப்பட்டிலது.) ஆனால், அப்பாலும் அடிச்சார்ந்தார்களைப் பற்றிக் கூறும்போது மட்டும், “ முடியாப் பேறு பெற்றவர்தம் கழல்பரவ அடியேன் முன்னைப் பிறவியினில் செய்த தவம் பெரியவாமே “  என்று பாடிப் பரவியுள்ளார்.

    சேக்கிழார் இவ்வாறு அப்பாலும் அடிச்சார்ந்தார் திருவடிகட்கு மட்டும் வணக்கம் கூறி, ஏனையவர்கட்கு இவ்வாறு கூறிற்றிலரே எனில், இதற்குரிய காரணத்தையும் ஈண்டே பகருவாம்.   “ அப்பாலும் அடிச்சார்ந்தார் சைவ உலக அடியார்கள் மட்டும் அல்லர்.  எல்லா உலக அடியார்களும் ஆவார்.  ஆகவே, அவர்கள் சைவ மக்களுக்குப் புறம்பானவர்கள்.  அதனால்தான் சேக்கிழார் வணங்கிற்றிலர், “  என்று உலகம் கூறவும் கூடும் என்று நினைந்து தம் பெருந்தகைமை தோன்றவே  “ பெற்றார்தம் கழல்பரவ அடியேன் முன்னைப் பிறவியினில் செய்ததவம் பெரியவாமே “  என்று பாடிக் காட்டினர்.  ஏனைய தொகையடியார்களின் திருவடியைப் போற்றுதலைக் கூறாமல் போனதற்குக் காரணம், தொகையடியார்கள் பலர் ஆதலின், அவர்களின் பெருமையில் திளைத்து நின்றமையின் தம்மை மறந்த நிலையில் சென்று விட்டனர் என்க.              

(10)