பக்கம் எண் :

New Page 1

 

       தாலப் பருவம்

327

    முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
    நுவலும் காலை முறைசிறந் தனவே
    பாடலுள் பயின்றவை நாடும் காலை

என்று கூறுகிறது.

    இவற்றுள் முதல் பொருள் என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நிலங்களும், பெரும்பொழுது, சிறு பொழுதுகளும் ஆகும்.  இதனை,

        முதல் எனப்படுவது நிலம்பொழு திரண்டின்
        இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே

என வரும் நூற்பாவில் காண்க.

    நிலங்கள் இன்ன என்பதை,

    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

என்ற தொல்காப்பிய நூற்பாவால் காணலாம்.  இந் நூற்பாவில் பாலை என்னும் நிலத்தையும் இணைத்துப் பேசிற்றிலர் தொல்காப்பியர் எனினும்,

    நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
    முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே

என்ற நூற்பாவின் மூலம் தொல்காப்பியனார் பாலை நில உண்மையையும் உணர்த்தினமை காண்க.  நடுவுநிலைத் திணையே பாலைத்திணையாகும்.  வெம்மையின் கொடுமையால், முல்லையும் குறிஞ்சியும் திரியுமானால் பாலையாகும். இதனைச் சிலம்பு “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்துபாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்று நன்கு தெளிவு படுத்தி உள்ளது.

    ‘காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
     கூதிர் யாமம் யென்மனார் புலவர்’