பக்கம் எண் :

கள

410

       சப்பாணிப் பருவம்

 

    களிறுகண் டழூஉம் அழாஅல் மறந்த
    புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
    விருந்தில் புன்கண்நோ உடையர்
    கேட்டனை ஆயின் வேட்டது செய்ம்மே

என்று பாடி அவர்கள் உய்யச் செய்தனர்.

    மற்றொரு முறை சோழன் நலம் கிள்ளி உழைநின்று, உறையூர் புகுந்த இளந்தத்தர் என்னும் புலவரைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்றுவந்தார் என்று அவரை கொல்லப் புக்குழிக் கோவூர்கிழார்,

    பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
    ஓம்பா துண்டு கூம்பாது வீசி
    வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
    பிறர்க்குத் தீதுஅறிந் தன்றோ இன்றே திறம்பட
    நண்ணார் நாண அண்ணாந் தேகி
    ஆங்கினி தொழுகின் அல்ல தோங்குபுகழ்
    மண்ணாள் செல்வம் எய்திய
    நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே

என்று பாடி அவரை உய்யக் கொண்டனர்.

    இன்னோரன்ன நிகழ்ச்சிகள் வேளாளர்களாம் சேவையர்களின் வெற்றிச் சிறப்பைக் காட்டுகின்றன அல்லவோ? ஆகவே, திரு பிள்ளையவர்கள் வேளாளர்களை, “கொற்றச்சேவையர்” என்றே குறிப்பிட்டுப் பாடினார்.  இத்தகையோர்களில் சேக்கிழார் தலைமையானவர் ஆதலின், “கொற்றச் சேவையர் காவல” எனப்பட்டார்        

(41)