பக்கம் எண் :

என  

438

       முத்தப் பருவம்

என்று பாடிக் குற்றம் இல்லை என்பதை விளக்கிக் காட்டினர்.

மற்றும் ஒரு சிலர் “தாதையின் தாளை தனயன் வெட்டுதல் ஒண்ணுமோ? அது குற்றம்தானே” என்று சண்டேசுரர் மீதும் குற்றம் கூறுபவர் உள்ளம் கொள்ளும் வகையில் தந்தையார் செய்தது தவறு என்பதையும், அடியார்கள் செய்கை யாவும் தவச் செய்கையே அன்றி, அவச் செய்கை அன்று என்பதையும் விளக்குபவராய்,

        வந்து மிகைசெய் தாதைதாள்
            மழுவால் துணித்த மறைச்சிறுவர்
        அந்த உடம்பு தன்னுடனே
            அரனார் மகனார் ஆயினார்
        இந்த நிலைமை அறிந்தாரார்
            ஈறி லாதார் தமக்கன்பு
        தந்த அடியார் செய்தனவே
            தவமாம் அன்றோ சாற்றுங்கால்

என்று பாடிக் காட்டினர்.

    இறைவர், அடியார் செய்தனவற்றையும் தவமாக்குவர் என்ற கருத்தை நம் சேக்கிழார் பெருமானார், திருவாசகம் பயின்ற பயிற்சியினால்தான் அறிந்தார் ஆதலின். இங்ஙனம் பாடினார்.  இந்த உண்மையினை,

    புத்தன் முதலாய புல்அறிவில் பலசமயம்
    தத்தம் மதங்களிலும் கட்டுளுப்புப் பட்டுநிற்கச்
    சித்தம் சிவம்ஆக்கிச் செய்தனவே தவம்ஆக்கும்
    அத்தன் கருணையினால் தோள்நோக்கம் ஆடாமோ

    தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
    சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
    சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
    பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

என்னும் திருவாசகப் பாடல்கள் கொண்டு நன்கு தெரியலாம்.