பக்கம் எண் :

2

 

       வாரானைப் பருவம்

489

2.     நிலவுவிரி மதியும்ஒண் பனியும்உவ வாஎனினும்
           நெஞ்சம்எப் பொழுதும்நெக்கு
       நெக்குருகு வார்மதியும் அத்தகையர் கண்பனியும்
           நேரேஉ வத்தல்செய்வ
       கலவுசெம் மையும்மணமும் உடைமைக் கிணங்கஎவர்
           கடையின்அவை உள்ளவேனும்
       காமுறுவ அளிவிரா வுறமலர்வ ஆயகோ
           கனகநறு மலர்இரண்டும்
       உலவுதலின் அன்புசெறி யுந்தலைப் பெயராமை
           உள்ளவே னும்பெயர்த்தே    
       உவகையெங் கட்குவர மறுசம யருக்கெலாம்
           உட்குவர முறுவலித்துக்
       குலவுபுக ழேபோர்வை யாக்கொண்ட சேவையார்
           குலசிகா மணிவருகவே
       கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு
           குன்றைப் பிரான்வருகவே

    [ அ. சொ. ]  நிலவு-ஒளி, மதியம்-சந்திரனும், உவவா-விரும்பா, மகிழமாட்டா, மதியும்-அறிவும், அத்தகையர்-அத்தன்மையர், அன்பர்கள், கண்பனியும்-பனிபோல் ஒழுகும் கண்ணீரும், உவத்தல்-மகிழ்தலை, எவர்கடையும்-எவரிடத்தும், அவை-செம்மையும் மணமும், காமுறுவ-விரும்புவன, அளி-வண்டு, விராவுற-கலப்பதனால், கோகனகம்-தாமரை, (திருவடித் தாமரை) உலவுதல்-மாறுதல், செறியும்-நிரம்ப நெருங்கியுள்ள, தலை-இடத்தை விட்டு, பெயராமை-நீங்காமை, நறுமலர்-நல்ல மணமுள்ள மலர், செறி-நிறைந்த, உவகை-மகிழ்ச்சி, மறு-மற்றைய, உட்கு-அச்சம், முறுவலித்து-நகைத்து, சேவையார்-தெண்டராம் வேளாளர், சடை அடவியர்-சடைக்காட்டை யுடையவராம் சிவபெருமானார், (சடாடவியர்) மன்றை-பொற்சபையை, பராவி-போற்றி.