பக்கம் எண் :

490

             வாரானைப் பருவம்

    விளக்கம் : மதி பொதுவாக எல்லா மக்களுக்கும் உவகை செய்யவல்லதாயினும், காதலர் பிரிந்திருக்கையில் அவர்கட்கு அஃது உவகை ஊட்டுவதில்லை.  இதனைச் சேக்கிழார் பெருமானாரே தடுத்தாட்கொண்ட புராணத்தில், “சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி” என்றும், “ நிலவு உமிழும் தழல் ஆற்றாள் (ஈண்டு நிலவினைத் தழல் எனக் கூறியதைக் காணவும்) என்றும் பாடினர்.  சொக்கநாதப் புலவர்,

    ஊரைச் சுடுமோ உலகம்தனைச் சுடுமோ
    ஆரைச் சுடுமோ அறியேன்-நேரே
    பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த
    நெருப்புவட்ட மான நிலா

என்றும், புகழேந்தியார் “திங்கள் சுடர்பட்டுக் கொப்புளங்கொண்ட குளிர்வானை” என்றும் பாடியுள்ளனர்.  “அத்திக் காய், ஆலங்காய் வெண்மதியே” என்று ஒரு புலவர் சந்திரனை வெறுத்துக் கூறினர். ஆகவே, இத்தருணத்தில் நிலவுவிரி மதி உவவா ஆயிற்று.  பனி எவர்க்கும் உவப்பைத் தராது என்று கூற வேண்டுவதில்லை.  “பனிக்கு ஆலம் மிக நல்லது” என்று திரு பிள்ளை அவர்களே, தாமும் தம் நண்பர் திரு ஆறுமுக நாவலரும் மார்கழித் திங்களில் வைகறையில் நீராடுகையில் கூறியுள்ளார்.  தாமரைகட்கு மதியும், பனியும் உவகை செய்யா என்பதை ஈண்டு நினைவுகொள்ளல் வேண்டும்.  சேக்கிழார் பெருமானாரும் பனியின் கொடுமையினை,

        அளிக்குலங்கள் சுளித்தகல
            அரவிந்தம் முகம்புலரப்
        பளிக்குமணி மரகதவல்
            லியிற்கோத்த பான்மைஎனத்
        துளித்தலைமெல் அருகுபனி
            தொடுத்தசையச் சூழ்பனியால்
        குளிர்க்குடைந்து வெண்படாம்
            போர்த்தனைய குன்றுகளும்