பக்கம் எண் :

பூ

676

             சிறுபறைப் பருவம்

    பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
        புதியமதி நதிஇதழி பொருந்த வைத்த
    சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்
        செப்பியஅப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே

என்ற செய்யுளில் காணவும்.  ஆகவே, “பற்பலவராய அடியவர்” என்றனர்

    திருவருள் முழக்கம் எம்முழக்கத்திற்கும் ஒப்பாகாது உயர்ந்து விளங்கலின், “இணை இலதாய இனிய திருவருள் முழக்கம்” என்றனர்.  சிவானுபோகம் எய்துதற்கரியது.  சிவானு போகம் என்பது சிவபெருமானது திருவடிப் பேற்றைத் துய்த்து இன்புறும் இன்பம்.  இது கிடைத்தற்கு அரிதாதலின், “இரும்பெரு முழக்கு” என அதன் பெருமையினை உணர்த்தினர்.  மேலும் மும்முறை கூறுவதன் கருத்து கலத்தலாகிய சாயுச்சிய நிலை அடைதற்குச் சாலோக, சாமீப சாரூப நிலைகளாம் பதமுத்தி மூன்றைக் கடத்தலை அறிவித்தற்கு என்க.  புண்ணியம் தேவை.  இறைவனது திருவருள் தேவை.  “தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி” என்னும் இவ்வருமைப் பாட்டை மணி மொழியாரும் அறிவுறுத்தினர்.  சிவஞான சித்தியாரில்.

        வாழ்வெனும் மையல்விட்டு
            வறுமையாம் சிறுமை தப்பித்
        தாழ்வெனும் தன்மையோடும்
            சைவமாம் சமயம் சாரும்
        ஊழ்பெறல் அரிது சால
            உயர்சிவ ஞானத் தாலே
        போழிள மதியி னானைப்
            போற்றுவார் அருள்பெற் றாரே

என்று உணர்த்தியுள்ளதையும் உணரலாம்.

    முதல்பாதி செய்யுளின் ஆழ்ந்த கருத்து, சிவ புண்ணியங்களால் ஆன்மாவுக்கு இருவினை ஒப்புத்தோன்ற, அதனால்