New Page 1
வெள்வீத் தாழை திரைஅலை
நாள்என் கங்குலும்
கேட்கும் நின்குரலே
என்று இயம்புகிறது.
கடலில் அமுதம் தோன்றியது
என்ற புராண வரலாறு இருத்தலின், கடல் அமுதம் என்றனர். குழல் இனிது, யாழ் இனிது என்று வள்ளுவர்
அறிவித்தலின் “அவாங் குழல், வீணை” என்றனர்.
ஆவின்பால், தேன்,
சர்க்கரை, கற்கண்டு, பலா, மா, வாழைக் கனிகள், முந்திரிப்பழம், தேவாமுதம், குழல் இசை,
வீணையின் இசை ஆகிய இவற்றின் சுவைகள் எல்லாம் கலந்த போது அச்சுவை எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு
இனிக்கும் கவிகளைப் பாடியவர் சேக்கிழார் என்பதைப் பிள்ளையவர்கள் இங்குக் குறிப்பிட்டுள்ளனர்.
சுவையின் மிகுதியினை மிகுதிப் படுத்த இவ்வாறு சுவைமிக்க பொருள்களைக் கூட்டி உரைத்தல் அன்பு முதிர்ந்த
பெரும் புலவர்களிடத்தில் உண்டு. இராமலிங்க சுவாமிகளும் இறைவனது இன்பச் சுவையினை இயம்பும்போது,
தனித்தனிமுக் கனிபிழிந்து
வடித்துஒன்றாக் கூட்டிச்
சர்க்கரையும் கற்கண்டின்
பொடியும்மிகக் கலந்தே
தனித்தநறும் தேன்பெய்து
பசும்பாலும் தெங்கின்
தனிப்பாலும் சேர்த்தொருதீம்
பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்அளைந்தே
இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும்
இனித்திடுமதெள் அமுதே
அனித்தம்அறத் திருப்பொதுவில்
விளங்குநடத் தரசே
அடிமலர்க்கென்
சொல்அணியாம் அலங்கல்அணிந்தருளே
என்று இனிது பாடியிருத்தலை
உணரலாம்.
கனியி னும்கட்டி பட்ட
கரும்பினும்
பனிம லர்க்குழல்
பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளும்
அரசினும்
இனியன் தன்அடைந்
தார்க்கிடை மருதனே”
என்ற அப்பரது அரும்பாடலையும்
நினைவு கூர்தல் நலமாகும்.
|