பக்கம் எண் :

98

             காப்புப் பருவம்

எவையும் கழறுவனவற்றை அறிந்து (கூறுவனவற்றைத் தெரிந்து) அக் குறைகளை நீக்கும் முறையில் அரசு புரியும் வன்மைதந்தால் அரசை ஏற்பேன்” என்று வேண்ட, “அவ்வாறே ஆகுக” என்ற திருவருள் பிறக்க அரசை ஏற்றார்.  இதனால் இவர் கழறிற்று அறிவார் நாயனார் எனப்பட்டார். இவர் திருநீற்றின்பால் பெருமதிப்பு வைத்தவர்.  ஒரு நாள் வண்ணான் உழமண் சுமையுடன் வரும்போது, அம்மண் அவன்மீது வெளுத்துக்காண அத் தோற்றத்தினைச் சிவவேடப் பொலிவாகக் கொண்டு யானைமீது வந்த சேரர் கீழ் இறங்கி வண்ணானை வணங்கி,  “திருநீற்றின் வாரவேடம் நினைப்பித்தீர் வருந்தா தேகும்” என்று மொழிந்தவர்.  தில்லை நடராசனைப் பூசித்து, அப் பூசை முடிவில் திருச் சிலம் பொலியினைக் கேட்டு மகிழ்ந்தவர்.  சிவபெருமான் பாணபத்திரர்  என்பார்க்குப் பொருளைத் தரும்படி திருமுகப் பாசுரம் எழுதி அனுப்ப, அதன்படி அவர்க்கும் பெரும் பொருள் தந்தவர்.  சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் பேர் அன்பு கொண்டவர்,  சுந்தரருடன் தல யாத்திரை செய்தவர்.

    கழறிற்றறிவாரும் சுந்தரரும் திருக்கையிலைக்கு ஒருங்கே எய்தினர்.  இவர் சிதம்பரத்தைத் தரிசித்தபோது பொன் வண்ணத் தந்தாதியையும், திருவாரூரை அடைந்து தரிசித்தபோது திருவாரூர் மும்மணிக் கோவையையும் பாடினார்.  திருமறைக் காட்டை அடைந்து தரிசித்தபோது அத்தலத்தின் மீது ஒரு திருவந்தாதி பாடினார்.  திருவந்தாதி பாடினார் என்பது,

        நிறைந்த மறைகள் அர்ச்சித்த
            நீடு மறைக்காட் டருமணியை
        இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து
            போற்றி யாழைப் பழித்தென்னும்
        அறைந்த பதிகத் தமிழ்மாலை
            நம்பி சாத்த அருட்சேரர்
        சிறந்த அந்தா தியில்திறப்பித்
            தனவே ஓதித் திளைத்தெழுந்தார்

என்று பாடி யிருப்பதால் அறிய வருகிறது.