21 முதல் 30 வரை
 
மனையாளில்லாத மனை


21.  இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை
    இல்லாளும் இல்லாளே யாமாயின்-இல்லாள்
    வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
    புலிகிடந்த தூறாய் விடும்.

(பதவுரை) இல்லாள் அகத்து இருக்க - (நற்குண நற்செய்கைகளையுடைய) மனையாள் வீட்டில் இருக்கின், இல்லாதது ஒன்று இல்லை - (அவ் வீட்டில்) இல்லாத பொருள் ஒன்றுமில்லை, இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின் - மனையாள் இல்லாமற் போயினும், இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல் - மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்லினும், அவ் வில் புலி கிடந்த தூறு ஆய் விடும் - அவ் வீடு புலி தங்கிய புதர்போல் ஆய்விடும்.

ஆம்: அசை.

நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு; அஃதல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடேயாகும் எ - ம். (21)

   
ஊழின் வலிமை


22.  எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
    கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க்
    கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல்
    முற்பவத்திற் செய்த வினை.

(பதவுரை) இரங்கும் மடம் நெஞ்சே - வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு - (நல்ல பயனைப் பெறலாமென்று) நினைத்துப் போய்க் கற்பகத்தருவை அடைந்தவர்க்கு, காஞ்சிரங்காய் ஈந்ததேல் - (அது) எட்டிக்காயைக் கொடுத்ததாயின், முற்பவத்தில் செய்த வினை - (அதற்குக் காரணம் அவர்) முற்பிறப்பிற் செய்த தீவினையாகும்; கருமம் கருதியவாறு ஆமோ - செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ, எழுதியவாறே காண் - (கடவுள்) விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக.

செய்தொழில்கள் ஊழின்படி யன்றி அவரவர் நினைத்தபடி முடியா எ - ம். (22)

   
நல்லார் சினமும் பொல்லார் சினமும்


23.  கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
    பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து
    நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே [பிடித்து
    சீரொழுகு சான்றோர் சினம்.

(பதவுரை) கயவர் - கீழோர், கடுஞ்சினத்து-கடுங்கோபத்தால் வேறுபட்டால், கல் பிளவோடு ஒப்பர் - கல்லின் பிளவு போல் திரும்பக்கூடார்; பொன்பிளவோடு ஒப்பாரும் போல்வார் - (அப்படி வேறுபட்டபோது) பொன்னின் பிளவோடு ஒப்பாவாரும் ஒப்பாவர்; [ஒருவர் கூட்டக் கூடுவர்.] சீர் ஒழுகு சான்றோர் சினம் - சிறப்பு மிக்க பெரியோருடைய கோபம்; வில்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறும்-வில்லைப் பிடித்து (அம்பினாலே) நீர் பிளக்க எய்த பிளவுபோல (அப்போதே) நீங்கும்.

ஏ இரண்டும் அசை.

கோபத்தினால் வேறுபட்டவிடத்துக் கடையாயார் எக்காலத்துங் கூடார்; இடையாயார் ஒருவர் கூட்டக் கூடுவர்; தலையாயார் பிரிந்த அப்பொழுதே கூடுவர் எ - ம். (23)

   
குணமும் தொடர்பும்


24.  நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா [போல்
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
    காக்கை உகக்கும் பிணம்.

(பதவுரை) கயத்தின் - குளத்தில் உள்ள, நல் தாமரை - நல்ல தாமரைப்பூவை, நல் அன்னம் சேர்ந்தாற்போல் - நல்ல அன்னப் பறவை சேர்ந்தாற்போல, கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கல்வி யுடையோரைக் கல்வி யுடையோரே விரும்பிச் (சேர்வர்); முதுகாட்டில் - புறங்காட்டில் உள்ள, பிணம் - பிணத்தை, காக்கை உகக்கும் - காக்கை விரும்பும்; (அதுபோல்) கற்பு இலா மூர்க்கரை - கல்வியில்லாத மூடரை, மூர்க்கர் - மூடரே, முகப்பர் - விரும்புவர்.

கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும் நட்புச் செய்வர் எ - ம். (24)

   
கரவுடையவர் ஒளிந்தே நிற்பர


25.  நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்
    அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சிற்
    கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
    கரவிலா நெஞ்சத் தவர்.

(பதவுரை) நாகம் - விடப்பாம்பானது, தான் நஞ்சு உடைமை அறிந்து - தான் விடம் உடையதாயிருத்தலை அறிந்து, கரந்து உறையும் - மறைந்து வசிக்கும்; நீர்ப்பாம்பு - (விடமில்லாத) தண்ணீர்ப் பாம்பானது, அஞ்சா புறம் கிடக்கும் - அஞ்சாமல் வெளியே கிடக்கும்; (அவைபோல்) நெஞ்சில் கரவு உடையார் - மனத்தில் வஞ்சனையை உடையவர், தம்மைக் கரப்பர் - தம்மைத் தாமே மறைத்துக்கொள்வர்; கரவு இலா நெஞ்சத்தவர் - வஞ்சனையில்லாத மனத்தை உடையவர், கரவார் - தம்மை மறைத்துக்கொள்ளார்.

வஞ்சனையுடையவர் மறைந்தொழுகுவர்; வஞ்சனையில்லாதவர் வெளிப்பட்டொழுகுவர் எ - ம். (25)

   
அரசனும் அறிஞனும்


26.  மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
    மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்
    தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
    சென்றஇட மெல்லாம் சிறப்பு.

(பதவுரை) மன்னனும் - அரசனையும், மாசு அறக் கற்றோனும் - கசடறக் கற்ற புலவனையும், சீர்தூக்கின் - ஆராய்ந்து பார்த்தால், மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - அரசனைக் காட்டிலும் புலவனே சிறப்புடையனாவன்; மன்னற்கு - அரசனுக்கு, தன் தேசம் அல்லால் - தன் நாட்டிலல்லாமல் (பிற நாடுகளில்), சிறப்பு இல்லை - சிறப்பில்லையாகும்; கற்றோற்கு - புலவனுக்கோ எனில், சென்ற இடம் எல்லாம் சிறப்பு - அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டாகும்.

அரசனிலும் புலவனே சிறப்புடையவன் எ - ம். (26)

   
பல்வகைக் கூற்றங்கள்


27.  கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்
    அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய
    வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே
    இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.

(பதவுரை) கல்லாத மாந்தர்க்கு - கல்வியறிவில்லாத மாக்களுக்கு, கற்று உணர்ந்தார் சொல்-கற்றறிந்தவருடைய உறுதிமொழி, கூற்றம் - இயமனாம்; (துன்பஞ் செய்யும் என்றபடி); அல்லாத மாந்தர்க்கு - (தருமத்தில் விருப்பமுடையர்) அல்லாத மனிதர்க்கு, அறம் - தருமமே, கூற்றம் - இயமனாகும், மெல்லிய வாழைக்கு - மெல்லிய வாழைமரத்துக்கு, தான் ஈன்ற காய் கூற்றம் - அஃது ஈன்ற காயே இயமனாம்; (அதுபோல) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் - இல்வாழ்க்கைக்குப் பொருந்தி நடவாத மனைவி, கூற்றம் - (கணவனுக்கு) இயமனாவள்.

கற்றறிந்தவருடைய உறுதிமொழியினாலே கல்லாதவருக்கும், தருமத்தினாலே பாவிகளுக்கும், பொருத்தமில்லாத மனையாளாலே கணவனுக்கும் துன்பம் விளையும் எ - ம். (27)

   
கெட்டாலும் மனவிரிவு குறையார்


28.  சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்துங்
    கந்தங் குறைபடா தாதலால்-தந்தந்
    தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கேட்டால்
    மனஞ்சிறிய ராவரோ மற்று. 

(பதவுரை) மெல் சந்தனக் குறடு - மென்மையாகிய சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்த காலத்தும் - தான் தேய்ந்து போன காலத்திலும், கந்தம் குறைபடாது - மணம் குறையாது; ஆதலால் - ஆதலினாலே, தார் வேந்தர் - மாலையை அணிந்த அரசர்கள், தம்தம் தனம் சிறியர் ஆயினும் - தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்தவரானாலும், கேட்டால் - அவ்வறுமையினாலே, மனம் சிறியர் ஆவரோ - மனஞ் சுருங்கினவராவாரோ (ஆகார்).

தார் - சேனை; மனம் - மன வலிமை என்று பொருள் கூறுதலும் ஆம்.

அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மன விரிவு (தளராத் தன்மை) குன்றார் எ - ம். (28)

   
நிலையில்லாத வாழ்வு


29.  மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
    உருவும் உயர்குலமு மெல்லாம்-திருமடந்தை
    ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து
    போம்போ தவளொடு போம்.

(பதவுரை) மருவு இனிய சுற்றமும் - தழுவிய இனிய உறவும், வான் பொருளும் - மேலாகிய பொருளும், நல்ல உருவும் - நல்ல அழகும், உயர்குலமும் எல்லாம் - உயர்வாகிய குலமும் என்னும் இவையெல்லாம், திருமடந்தை ஆம் போது - சீதேவி வந்து கூடும்பொழுது, அவளோடும் ஆகும் - அவளுடனே வந்து கூடும்; அவள் பிரிந்து போம்போது - அவள் நீங்கிப் போம்பொழுது, அவளொடு போம் - அவளுடனே நீங்கிப் போகும்.

திருமடந்தை - இலக்குமி, ஆகும் போகும் என்பன ஆம் போம் என்றும், பொழுது என்பது போது என்றும் விகாரப்பட்டன.

சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையுடையனவல்ல எ - ம். (29)

   
அறவோர் அருள் உள்ளம்


30.  சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
    ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
    குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
    மறைக்குமாங் கண்டீர் மரம்.

(பதவுரை) மரம் - மரங்களானவை, மாந்தர் குறைக்கும் தனையும் - (தம்மை) மனிதர் வெட்டுமளவும், குளிர்நிழலைத் தந்து மறைக்கும் - (அவருக்குங்) குளிர்ச்சியாகிய நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும் (அதுபோல), அறிவு உடையோர் - அறிவுடையவர்; சாம்தனையும் - (தாம்) இறந்து போமளவும், தீயனவே செய்திடினும் - (பிறர் தமக்குத்) தீங்குகளையே செய்தாராயினும், தாம் அவரை ஆம் தனையும் காப்பர். தாம் அவரையும் தம்மாலே ஆகுமளவும் காப்பார்.

ஆம்: அசை. கண்டீர்: முன்னிலையசை.

அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார் எ - ம். (30)


              மூதுரை மூலமும் உரையும்முற்றிற்று.