31 முதல் 40 வரை
|
|
-
31. இழுக்குடைய பாட்டிற்கு
இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின்
நன்று-வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய்
பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று
தனி.
(பதவுரை) இழுக்கு உடைய பாட்டிற்கு இசை
நன்று - இலக்கண வழுக்களையுடைய செய்யுளினும் (அஃதில்லாத) வழக்கு நல்லது,
உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று - உயர் குலத்தினும்
(அஃதில்லாத) மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது; வழுக்கு உடைய வீரத்தின்
விடா நோய் நன்று - தவறுதலையுடைய வீரத்தினும் தீராப்பிணி நல்லது ;
பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று - பழிச் சொல்லுக்கு
அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது.
இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க
மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய
இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும் எ - ம். இசை - உலக வழக்காகிய
சொற்றொடர். (31) |
|
|
|
|
செல்வநிலையாமையறிந்து
உதவுக |
-
32. ஆறிடும் மேடும்
மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும்
மாநிலத்தீர்-சோறிடுந் தண்ணீரும் வாரும் தருமமே
சார்பாக உண்ணீர்மை வீறும்
உயர்ந்து.
(பதவுரை) மா நிலத்தீர் -
பெரிய பூமியுலுள்ளவர்களே, ஆறு இடும் மேடும் மடுவும் போல் - ஆற்று
வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மேடும் பள்ளமும்போல. செல்வம் ஏறிடும்
மாறிடும்-செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும்; (ஆதலினால்)
சோறு இடும் - (இரப்பவருக்கு உண்ண) அன்னத்தை இடுங்கள்;
தண்ணீரும் வாரும் - (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வாருங்கள்;
தருமமே சார்பு ஆக - (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத்
தருமமே துணையாக, உள்நீர்மை உயர்ந்து வீறும்-உள்ளத்திலே தூயதன்மை
ஓங்கி விளங்கும். ஆம்: அசை.
நிலையில்லாத செல்வம் உள்ளபொழுதே
இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளித்தால் மனம் தூய்மையுற்று விளங்கும் எ - ம்.
(32) |
|
|
|
|
-
33. வெட்டனவை
மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங்
கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப்
பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு
விடும்.
(பதவுரை) வேழத்தில்பட்டு உருவும் கோல்
பஞ்சில் பாயாது - (வலிய) யானையின் மேலே பட்டுருவும் அம்பானது (மெல்லிய)
பஞ்சின்மேலே பாயாது; நெடு இருப்புப்பாரைக்கு நெக்கு விடாப்பாறை -
நெடுமையாகிய இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது, பசுமரத்தின் வேருக்கு
நெக்கு விடும் பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோம்; (அவ்வாறே)
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் - வன்சொற்கள் இன்சொற்களை
வெல்ல மாட்டாவாகும்; (இன் சொற்களே வெல்லும்)
வன் சொல் தோற்கும்; இன்சொல் செல்லும் எ
- ம். (33) |
|
|
|
|
பொருளிலார்க்கு இவ்வுலகம்
இல்லை |
-
34. கல்லானே
யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கு
எதிர்கொள்வர்-இல்லானை இல்லாளும் வேண்டாள்மற்று
ஈன்றெடுத்த தாய்வேணடாள் செல்லாது அவன்வாயிற்
சொல்.
(பதவுரை) கல்லானே ஆனாலும் கைப்பொருள்
ஒன்று உண்டாயின் - (ஒருவன்) படியாதவனேயாயினும் (அவன்) கையிலே பொருள்
மாத்திரம் இருந்தால், எல்லோரும் சென்று எதிர்கொள்வர் -
(அவனை) யாவரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர்; இல்லானை இல்லாளும்
வேண்டாள் - (படித்தவனே யாயினும் பொருளே) இல்லாதவனை (அவன்) மனைவியும்
விரும்பாள்; ஈன்று எடுத்த தாய் வேண்டாள் - (அவனைப்) பெற்று
வளர்த்த அன்னையும் விரும்பாள் ; அவன் வாயில் சொல் செல்லாது -
அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது பயன்படாது. அங்கு, மற்று: அசை.
கல்லாதவனே யாயினும் பொருளுடையவனை.
எல்லாரும் மதிப்பர்; கற்றவனே யாயினும் பொருளில்லாதவனை ஒருவரும் மதியார் எ - ம்.
(34) |
|
|
|
|
-
35. பூவாதே
காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார்
தாமுளரே-தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே
பேதைக்கு உரைத்தாலுந் தோன்றா
துணர்வு.
(பதவுரை) பூவாதே காய்க்கும் மரமும்
உள - பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு; (அதுபோல)
மக்களுளும்ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் - மனிதர்களுள்ளும்,
ஏவாமலே இருந்து தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு ; தூவா விரைத்தாலும்
நன்று ஆகா வித்து என - தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல,
பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது-மூடனுக்கு (எடுத்து விளங்கச்)
சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்து) உண்டாகாது.
குறிப்பறிந்து
செய்வாரே அறிவுடையோர் ; அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர்
மூடர் எ - ம்.
(35) |
|
|
|
|
-
36. நண்டுசிப்பி
வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங்
கொள்கைபோல்-ஒண்டொடீ போதந் தனங்கல்வி
பொன்றவருங் காலம்அயல் மாதர்மேல் வைப்பார்
மனம்.
(பதவுரை) ஒள் தொடீ - ஒள்ளிய
வளையலை அணிந்தவளே, நண்டு சிப்பி வேய் கதலி-நண்டும் சிப்பியும்
மூங்கிலும் வாழையும் ; நாசம் உறும் காலத்தில் - தாம் அழிவை
அடையுங் காலத்திலே ; கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் -
(முறையே தாம்) கொண்ட (குஞ்சும் முத்தும் அரிசியும் காய்க்குலையும் ஆகிய) கருக்களை
ஈனுந்தன்மைபோல, (மனிதர்கள்) போதம் தனம் கல்வி பொன்ற வரும்
காலம்-ஞானமும் செல்வமும் வித்தையும் அழிய வருங் காலத்திலே, அயல்
மாதர்மேல் மனம் வைப்பார் - பிறமகளிர் மேல் மனம்
வைப்பார்கள்.
ஒருவன் மனைவியையன்றிப் பிற மகளிரை
இச்சிக்கின், அஃது அவனிடத்துள்ள ஞானம் செல்வம் கல்வி என்னும் மூன்றுங் கெடுதற்கு
அறிகுறியாகும் எ - ம். (36) |
|
|
|
|
-
37. வினைப்பயனை
வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும்
இல்லை-நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல்
நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை
விதி.
(பதவுரை) வினைப்பயனை
வெல்வதற்கு - இருவினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்), வேதமுதலாம் அனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை - வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதன்
கண்ணும் இல்லை, (எனினும்) நெஞ்சே - மனமே, கவலைப்படேல்
- கவலையுறாதே, மெய் விண் உறுவார்க்கு - மெய்யாகிய
வீட்டு நெறியில் நிற்பவர்க்கு, நினைப்பது எனக் கண்உறுவது அல்லால்
- (அவர்) நினைப்பதுபோலத் தோன்றுவது அல்லாமல், விதி இல்லை-ஊழ்
இல்லையாம்.
முத்தி நெறியாகிய தியான சமாதிகளினாலன்றி
நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க வொண்ணாது எ - ம்.
விண் - பரவெளியும் ஆம் ; இப்பாட்டிற்கு வேறு
வகையாகப் பொருள் கூறுவாரும் உளர்.
(37) |
|
|
|
|
-
38 நன்றென்றும்
தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும்
ஆகாதே-நின்றநிலை தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார்
யாக்கைக்குப் போனவா தேடும்
பொருள்.
(பதவுரை) நன்று என்றும் - (இது)
நல்லது என்றும், தீது என்றும் - (இது) தீயது என்றும், நான்
என்றும் - (இது செய்தவன்) நான் என்றும், தான் என்றும்
- (இது செய்தவன்) அவன் என்றும், அன்று என்றும்-(இது) அன்று
என்றும், ஆம் என்றும்-(இது) ஆகும் என்றும், ஆகாதே நின்ற
நிலை - பேதஞ் செய்யாமல் (இரண்டறக்கலந்து) நின்ற நிலையே, தான்
அது ஆம் தத்துவம் ஆம் - ஆன்மாவாகிய தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை
நிலையாகும் ; தேடும் பொருள் - தன்னின் வேறாக மெய்ப்பொருளாகிய
கடவுளைத் தேடுவது, சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா - சம்பை
அறுத்தவர் (அதனைக் கட்டுதற்கு அதுவே அமையுமென்று அறியாமல்) கயிறு தேடிப் போனது
போலும்.
உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு பேதமின்றிக் கலந்து நிற்கும்
நிலையே உண்மை நிலை எ - ம். சம்பு-ஓர் வகைப் புல்.
(38) |
|
|
|
|
முப்பது ஆண்டிற்குள் முதல்வனை
யறி |
-
39. முப்பதாம்
ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள்
பெறானாயின்-செப்புங் கலையளவே ஆகுமாம் காரிகையார்
தங்கள் முலையளவே ஆகுமாம்
மூப்பு.
(பதவுரை) முப்பது ஆம் ஆண்டு
அளவில் - முப்பது வயதினளவிலே, மூன்று அற்று-முக்குற்றமும்
ஒழியப்பெற்று, ஒரு பொருளை - கேவலப்பொருளாகிய கடவுளை,
தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் - (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே
(அனுபவ உணர்வால்) அடையானாயின், காரிகையார் தங்கள் மூப்பு முலை அளவே
ஆகுமாம் - அழகிய மாதர்கள் முதுமையில் (பதியுடன் கூடி இன்பம் நுகர்தலின்றி)
முலையினை யுடையராதல் மாத்திரமே போல, செப்பும் கலை அளவே
ஆகும்-(அவன் முதுமையில் பதியுடன் கூடி இன்பம் நுகரப் பெறாமல்) கற்கும்
கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன்.
மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று
மெய்ப்பொருளையடைந்தின்புற முயலல் வேணடும் எ - ம். முக்குற்றம் காம வெகுளி
மயக்கங்கள். ஆணவம் கன்மம் மாயை ஆகிய பாசம் மூன்றும் என்னலும் ஆம். இப்பாட்டிற்கு
யாம் கூறிய பொருளே பொருத்தமுடைத்தாலை ஓர்ந்துணர்க.
(39) |
|
|
|
|
ஒத்த கருத்தமை ஒண்தமிழ்
நூல்கள் |
-
40. தேவர் குறளும்
திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும்
முனிமொழியும்-கோவை திருவா சகமும் திருமூலர்
சொல்லும் ஒருவா சகமென்
றுணர்.
(பதவுரை) தேவர் குறளும் -
திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திரு நான்மறை முடிவும் -
சிறப்புப் பொருந்தியநான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர்
தமிழும்-(திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார்,
சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும்,
முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர்
மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் - திருக்கோவையார்
திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய
திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே
குறிப்பனவென்று அறிவாயாக.
திருக்குறள் முதலிய இவையெல்லாம் பொருண் முடிவு
வேறு படாத மெய்ந்நூல்கள் எ - ம். 'முனிமொழியும்' என்பதற்கு 'வியாச முனிவருடைய
வேதாந்த சூத்திரம், என்றும் பொருள் கூறுவர். (40)
நல்வழி
மூலமும் உரையும்முற்றிற்று |
|
|
|
|