7. கடுவெளிச் சித்தர் பாடல் கடுவெளி என்பது ‘வெட்டவெளி’ அதாவது பிரமம். இந்தச் சித்தர் பிரபஞ்சத்தை வெட்ட வெளியாகக் கண்டு தம் ஆத்மானுபவத்தைப் பிறரும் அறிந்து நலம் பெறுவதற்காகப் பாடிய பாடல்கள் கடுவெளிச் சித்தர் பாடல்களாக நமக்கு அறிமுகமாகின்றன. இவரது இயற்பெயரோ வரலாறோ தெரியாத நிலையில் இவரது ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்ற செய்தியை மட்டும் போகர் தெரிவிக்கின்றார். வானென்ற கடுவெளிச் சித்தர்தானும் வளமான திருக்காஞ்சிப் பதியிலாச்சு இந்த ‘திருக்காஞ்சிப்பதி’ என்ற ஊரைப் புதுச்சேரிக் கருகிலுள்ள ‘திருக்காஞ்சி’ என்ற ஊராகக் கருதி அங்குள்ள காசி விசுவநாதர் ஆலயம் தான் அவர் ஜீவசமாதி கொண்ட தலம் என்று சுட்டுவாருளர். இது ஆய்வுக்குரியது. இந்த சித்தரைப் பற்றி அறியாத நிலையில் இவர் பாடிய ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் தமிழகமெங்கும் வெகுபிரசித்தம். “நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி” |