பக்கம் எண் :

மலரும் உள்ளம்123

எட்டவே பறந்து குண்டை
   எறிந்துநா டெறியச் செய்யும்
துட்டர்கள் இடையே அன்பைச் 
   சுரந்தனர் காந்தி அண்ணல்.

பண்டையக் கற்கா லத்தார்
   பார்த்திடின் நகைக்கும் வண்ணம்
சண்டைமேல் சண்டை யிட்டு
   மக்களைச் சாம்ப லாக்கக்
குண்டுமேல் குண்டு வீசும்
   கொடியவர் வாழும் நாளில்
அன்புதான் உலகை வெல்லும்
   ஆயுதம் என்றே சொன்னார்.

வீடுகள் மனைவி மக்கள்
   விளைநிலம் எல்லாம் நீத்துக்
காடுகள் மலைகள் சென்றே
   கடுந்தவம் செய்தி டாமல்
நாடெலாம் சுற்றிச் சுற்றி
   நலிந்தவர் துயரம் தீர்த்தார்
ஏடெலாம் ஏத்தும் இந்த 
   ஈடிலா அன்பு வள்ளல்.