பக்கம் எண் :

28மலரும் உள்ளம்

பொம்மைக் கல்யாணம்

பொம்மைக்கும் பொம்மைக்கும் கல்யாணம்.
புறப்படப் போகுதாம் ஊர்கோலம்.

தெருவில் எங்கும் தடபுடலாம்.
சிறுவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்தனராம்.

கிட்டு தலைமேல் மாப்பிள்ளை.
கீதா தலைமேல் மணப்பெண்ணாம்.

தகரக் குவளை தவுலாகும்.
சங்கரன் அடிப்பான் டும்டும்டும்.

ஓலைச் சுருளே நாகசுரம்.
உத்தமன் ஊதுவான் பிப்பீப்பீ.

உப்பிய கன்னம் இரண்டுடனே.
ஒத்தூ திடுவான் முத்தையா.

ஃ ஃ ஃ

மாப்பிள்ளைப் பையன் ஊர்எதுவோ?
மணப்பெண் ஊரும் தெரிந்திடுமோ?

திருப்பதிப் பொம்மை மாப்பிள்ளையாம்.
சீரங்கப் பொம்மை மணப்பெண்ணாம்.

அழைப்பில் லாமல் நடக்கிறதே
ஆஹா, அற்புதக் கல்யாணம்!