பிற
நாடுகள்
‘பெல்ஜியம்’ நாட்டிற்கு வாழ்த்து
|
அறத்தினால் வீழ்ந்து விட்டாய்;
அன்னியன் வலிய னாகி
மறத்தினால் வந்து செய்த
வன்மையைப் பொறுத்தல் செய்யாய்
முறத்தினால் புலியைக் தாக்கும்
மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினால் எளியை யாகிச்
செய்கையால் உயர்ந்து நின்றாய். |
1 |
வண்மையால் வீழ்ந்து விட்டாய்;
வாரிபோற் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில்
சிந்தனை மெலித லின்றி
ஒண்மைசேர் புகழே மேலென்று
உளத்திலே உறுதி கொண்டாய்
உண்மைதேர் கோல நாட்டார்
உரிமையைக் காத்து நின்றாய். |
2 |
மானத்தால் வீழ்ந்து விட்டாய்;
மதிப்பிலாப் பகைவர் வேந்தன்
வானத்தாற் பெருமை கொண்ட
வலிமைதான் உடைய னேனும்
ஊனத்தால் உள்ள மஞ்சி
ஒதுங்கிட மனமொவ் வாமல்
ஆனத்தைச் செய்வோ மென்றே
அவன்வழி யெதிர்த்து நின்றாய். |
3 |
வீரத்தால் வீழ்ந்து விட்டாய்;
மேல்வரை யுருளுங் காலை
ஓரத்தே ஒதுங்கித் தன்னை
ஒளித்திட மனமொவ் வாமல்
பாரத்தை எளிதாக் கொண்டாய்,
பாம்பினைப் புழுவே யென்றாய்
நேரத்தே பகைவன் தன்னை
‘நில்’லென முனைந்து நின்றாய். |
4 |
துணிவினால் வீழ்ந்து விட்டாய்;
தொகையிலாப் படைக ளோடும்
பிணிவளர் செருக்கி னோடும்
பெரும்பகை எதிர்த்தபோது
பணிவது கருத மாட்டாய்,
பதுங்குதல் பயனென் றெண்ணாய்.
தணிவதை நினைக்க மாட்டாய்,
‘நில்’லெனத் தடுத்தல் செய்தாய். |
5 |
வெருளுத லறிவென் றெண்ணாய்;
விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய்;
சுருளலை வெள்ளம் போலத்
தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன்
வலிமையாற் புகுந்த வேளை
“உருளுக தலைகள், மானம்
ஓங்குகெ”ன் றெதிர்த்து நின்றாய். |
6 |
யாருக்கே பகையென் றாலும்
யார்மிசை இவன் சென்றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி
உத்தர வெண்ணிடாமல்
போருக்குக் கோலம் பூண்டு
புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கும் இடமில் லாமல்
வெட்டுவேன் என்று நின்றாய். |
7 |
வேள்வியில் வீழ்வ தெல்லாம்
வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண் டுலகிற் கென்றே
வேதங்கள் விதிக்கும் என்பர்
ஆள்வினை செய்யும் போதில்
அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண் டுடனே மீளக்
கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல். |
8 |
விளக்கொளி மழுங்கிப் போக
வெயிலொளி தோன்றும் மட்டும்
களக்கமாரிருளின் மூழ்குங்
கனகமா ளிகையு முண்டாம்
அளக்கருந் தீதுற் றாலும்
அச்சமே யுளத்துக் கொள்ளார்
துளக்கற ஓங்கி நிற்பர்
துயருண்டோ துணிவுள் ளோர்க்கே? |
9 |