பக்கம் எண் :

தமிழச்சியின் கத்தி

சுதரிசன் மயக்கம்

அறுசீர் விருத்தம்
      

     

சுதரிசன் தொலைத்தான்! அன்னோன்
       கூத்திமார் இரண்டு பேரும்
'எதற்கும்நீ அஞ்ச வேண்டாம்'
       என்றுபக் கத்தில் குந்தி
சுதரிசன் புகழை யெல்லாம்
       சொல்லிடத் தொடங்கினார்கள்.
புதுத்தொல்லை யதனில் மங்கை
       புழுவாகத் துடிக்கலானாள்.

அழகுள்ள ஆளாம் எங்கும்
       அவன்போலே அகப்ப டாதாம்!
ஒழுக்கமுள் ளவனாம் சொத்தும்
       ஒருநூறா யிரமும் உண்டாம்
ஒழுகுமாம் காதில் தேனாய்
       ஒருபாட்டுப் பாடி விட்டால்!
எழுதினால் ஓவியத்தை
       எல்லாரும் மயங்குவாராம்!

நடுப்பகல் உணவாயிற்று!
       நங்கைக்குக் கதை யுரைக்க
எடுத்தனர் பேச்சை நங்கை
       'தப்புவ தெவ்வா' ரென்று
துடித்தனள். 'எனக்குக் தூக்கம்
       வருகின்ற' தென்று கூறிப்
படுத்தனள்; கண்கள் மூடிப்
       பகற்போதைக் கழித்து விட்டாள்.

'பகலெல்லாம் கணவருக்குப்
       பலபல வேலை யுண்டு
முகங்காட்டிப் போவ தற்கும்
       முடியாதா இரவில்' என்று
நகம்பார்த்துத் தலைகுனிந்து
       நங்கையாள் நலிவாள்! அந்த
அகம்கெட்ட மாதர் வந்தே
       'சாப்பிட அழைக்க லானார்!'

உணவுண்டாள் நங்கை, அங்கே
       ஒருபுறம் உட்கார்ந் திட்டாள்!
முணுமுணு என்று பேசி
       இருந்திட்ட இருமாதர்கள்
அணுகினார் நங்கையண்டை!
       அதனையும் பொறுத்திருந்தாள்!
தணல்நிகர் சுதரிசன்சிங்க்
       தலைகண்டாள்; தளர்வு கொண்டாள்

எதிரினில் சுதரி சன்சிங்க்
       உட்கார்ந்தான்; 'என்ன சேதி?
புதுமலர் முகமேன் வாடிப்
       போனது? சுப்பம்மா, சொல்!
குதித்தாடும் பெண்நீ சோர்ந்து
       குந்திக்கொண் டிருக்கின் றாயே?
அதை உரை' என்றான், நங்கை
       'அவர்எங்கே' என்று கேட்டாள்.

'திம்மனைச் சிங்கம் வந்தா
       விழுங்கிடும்? அச்சம் நீக்கிச்
செம்மையாய் இருப்பாய்' என்றான்
       இதற்குள்ளே தெருவை நோக்கி
அம்மங்கை முருகி சென்றாள்
       அவள்பின்னே குப்பும் போனாள்
'உம்' என்றாள்; திகைத்தாள் நங்கை!
       சுதரிசன் உளமகிழ்ந்தே.

'நங்கையே இதனைக் கேட்பாய்
       நானுன்றன் கணவனுக்கே
இங்குநல் உத்தியோகம்
       ஏற்பாடு் செய்து தந்தேன்;
பொங்கிடும் என்னாசைக்குப்
       புகலிடம் நீதான்; என்னைச்
செங்கையால் தொடு; மறுத்தால்
       செத்துப்போ வதுமெய்' என்றான்.

'நான்எதிர் பார்த்த வண்ணம்
       நடந்தது; நங்கைமாரும்
யான்இங்குத் தனித்திருக்க
       ஏற்பாடு செய்து போனார்
ஏன்என்று கேட்பாரில்லை
       இருக்கட்டும என்று வஞ்சி
தேன்ஒத்த மொழியால் அந்தத்
       தீயன்பால் கூறுகின்றாள்;

"கொண்டவர்க் குத்தி யோகம்
       கோட்டையில் வாங்கித் தந்தீர்
அண்டமே புரண்டிட் டாலும்
       அதனையான் மறக்க மாட்டேன்.
அண்டையில் வந்துட் கார்ந்தீர்;
       அடுக்காத நினைவு கொண்டீர்;
வண்கையால் "தொடு" மறுத்தால்
       சாவது மெய்யே என்றீர்.

"உலகில்நான் விரும்பும் பண்டம்
       ஒன்றுதான்; அந்தச் செம்மல்
தலைமிசை ஆணை யிட்டுச்
       சாற்றுவேன் எனது கற்பு
நிலைகெட்ட பின்னர் இந்த
       நீணில வாழ்வை வேண்டேன்
மலையும் தூளாகும் நல்ல
        மானிகள் உளந்துடித்தால்!

''கொண்டஎண் ணத்தை மாற்றிக்
       கொள்ளுவீர்; நரியும், யானைக்
கண்டத்தை விரும்பும்; கைக்கு
       வாரவிடில் மறந்து வாழும்;
கண்டஒவ் வொன்றும் நெஞ்சைக்
       கவர்ந்திடும், அந்நெஞ் சத்தைக்
கொண்டொரு நிலையிற் சேர்ப்பார்;
       குறைவிலா அறிவு வாய்ந்தோர்''


என்றனள், சதரி சன்சிங்க்,
       ஏதொன்றும் சொல்லானாகி
`நன்றுநீ சொன்னாய் பெண்ணே
       நான்உன்றன் உளம்சோதித்தேன்
இன்றிங்கு நடந்தவற்றைத்
       திம்மன்பால் இயம்ப வேண்டாம்'
என்றனன், கொஞ்சி னான்; 'போய்
       வருகின்றேன்' என்றெழுந்தான்.

இருளினில் நடந்து போனான்
       எரிமலைப் பெருமூச் சோடு!
இருளினை உளமாய்க் கொண்ட
       இருமாதர் உள்ளே வந்தார்
அருளினால் கூறுகின்றாள்
       சுப்பம்மா அம்மா தர்க்கே.''
ஒருபோதும் இனிநீர் இந்த
       உயர்விலாச் செயல்செய்யாதீர்

ஆயிரம் வந்திட் டாலும்
       அடாதது செயாதீர்; ஆவி
போயினும் தீயார் நட்பிற்
       பொருந்துதல் வேண்டாம்; உம்மைத்
தாயினும் நல்லார் என்று
       நான்நினைத் திருந்தேன். தாழ்வை
வாயினால் சொல்லிக் காட்ட
       வரவில்லை என்னே என்னை!

கண்ணகி என்னும் இந்தக்
       தமிழ்நாட்டின் கண்ணே போன்ற
பெண்கதை கேட்டிருப்பீர்;
       அப்பெண்ணைப் பெற்ற நாட்டுப்
பெண்களே நீரும்! அந்தப்
       பெரும்பண்பே உமக்கும் வேண்டும்
எண்ணமேன் இவ்வாறானீர்?
       திருந்துங்கள்! என்று சொன்னாள்.

''யாம்என்ன செய்து விட்டோம்?
       எம்மிடம் நீதான் என்ன
தீமையைக் கண்டு விட்டாய்!
       தெரிவிப்பாய் தெருவிற் சென்றோம்
சாமிக்குத் தெரியும் எங்கள்
        தன்மைநீ அறிய மாட்டாய்
ஏமுருகியே இதென்ன
       வெட்கக்கே டெ'ன்றாள் குப்பு.


'சிங்க்இங்கே இருந்தார்; நாங்கள்
       தெருவிற்குச் சென்றால் என்ன?
பங்கமோ இதுதான்? மேலும்
       பயந்துவிட்டாயா? சிங்கு
தங்கமாயிற்றே! சிங்கு
       தறுதலை அல்ல பெண்ணே
எங்களை இகழ்ந்த தென்ன'
       என்றனள் முருகி என்பாள்.





( 5 )




( 10 )




( 15 )



( 20 )




( 25 )




( 30 )




( 35 )




( 40 )




( 45 )





( 50 )



( 55 )




( 60 )




( 65 )




( 70 )




( 75 )




( 80 )





( 85 )




( 90 )



( 95 )






( 100 )



( 105 )





( 110 )




( 115 )




( 120 )




( 125 )




( 130 )




( 135 )





( 140 )




( 145 )




( 150 )





( 155 )



                  சுப்பம்மா நிலை

                  அறுசீர் விருத்தம்


                 


               விடிந்தது சுப்பம் மாவும்
              விழித்தனள், திம்மனில்லை;
              வடிந்தது கண்ணிர்! மெய்யும்
              வாடிற்று! நண்ணிடைதான்
                ஒடிந்தது! தேனி தழ்தான்
              உலர்ந்தது! தூளாய் உள்ளம்
              இடிந்தது! 'செய்வதென்ன'
              என்றெண்ணி இருந்தாள் மங்கை!

காலையில் உணவை உண்டார்
         அனைவரும்! முருகி சொன்னாள்;
'மாலையில் வருவோம் நாங்கள்
         மைத்துனர் வீடு சென்று!
மூலையில் தூங்கிடாதே;
         முன்கதவை மூடிக்கொள்;
வேலை யைப்பார்; சமைத்துக்
         கொள்என்றாள். வெளிச்சென்றார்கள்.

தனிமையில் இருந்தாள் அந்தக்
         தனிமையில்! கணவன் என்ற
இனிமையில் தோய்வாள் அந்த
         எழில்மயில்! மீண்டும் 'தீயன்
நனிமையல் பெருக்கால் என்ன
         நடந்திட இருக்கின்றானோ?
இனிமெய்யாய் இங்கிருத்தல்
         சரியல்ல!' எனநினைத்தாள்





( 160 )





( 165 )




( 170 )





( 175)




( 180 )

                  திம்மன் நிலை

              எண்சீர் விருத்தம்



கோட்டையிலே அடைபட்டுக் கிடந்தான் வீட்டில்
          கோழிஅடை பட்டதுபோல் அந்தத் திம்மன்!
ஓட்டையிலே ஒழுகுவது போலே நீரை
          ஒழுகிவிடும் இருவிழியும், உடைந்த நெஞ்சும்,
வாட்டமுறும் முகமுமாய் இருந்தான்! என்றன்
          மனைவிநிலை எப்படியோ? இங்கு வைத்து
வாட்டுகின்றார்! கவாத்தெங்கே! வீணில் தூங்க
          வலுக்கட்டா யம்செய்யும் வகைதான் என்னே!

ஏதோஓர் சூழ்ச்சிஇதில் இருக்கக் கூடும்
          இல்லைஎனில் ஏனக்கிந்த நிலை எதற்கு?
மாதுதனை எனைவிட்டுப் பிரிப்ப தற்கே
          வம்பன்இது செய்தானோ! சுப்பம் மாவும்
தீதேதோ கண்டதால் அன்றோ. அன்று
          செப்பினாள் 'அவனைநான் நம்பேன்' என்று!
'தாதுசிங்கைக் கேட்கிறேன்; வீடு செல்லத்
           தக்கவழி கூறுவான்' என்று சென்றே

எதற்கிங்கே நான்பத்தொன்பதுநாள் தங்கி
          இருப்பதென்று வினவினான். அந்தச் சிப்பாய்
அதற்கென்ன காரணமோ அறியேன்; அந்த
          அதிகாரி வைத்ததுதான் சட்டம் என்றான்.
மிதக்கின்ற பாய்க்கப்பல் மூழ்கிப் போக
          வெறுங் கட்டை அதுவுங்கை விட்டதைப் போல்
கொதிக்கின்ற மனத்தோடு கோட்டைக் குள்ளே
          குந்தினான் கண்ணீரைச் சிந்தினானே!

கோட்டைக்குள் இவ்விருளாம் கரிய பாம்பு
          கொடியவால் காட்டியெனை அஞ்ச வைத்தால்
காட்டைநிகர் சேரியிலே அந்தப் பாம்பு
          கண்விழித்தால் சுப்பம்மா நிலைஎன் ஆகும்!
'தோட்டமுண்டு; வயலுண்டு; போகவேண்டாம்
          தொல்லை' என்று சொன்னானே கேட்டேனாநான்!
கேட்டேனா கிளிக்குச்சொல் வதுபோல் சொன்னாள்
          கெட்டேனே' என்றலறிக் கிடந்தான் திம்மன்!


( 185 )



( 190 )





( 195 )




( 200 )




( 205 )





( 210 )




( 215 )

                சுதரிசன் நிலை

          ( தென்பாங்கு -- கண்ணிகள் )

மாவடு வொத்த விழிக்கும் -- அவள்
மாம்பழம் போன்ற மொழிக்கும்
காவடிப் பிச்சை என்றேனே -- அந்தக்
கள்ளி மறுத்துவிட்டாளே!

தூவடி என்உடல் மீதில் -- உன்
தூயதோர் கைமலர் தன்னை
ஆவி நிலைத்திடும் என்றேன் -- அவள்
அட்டி உரைத்துவிட்டாளே!

என்று சுதரிசன் எண்ணி -- எண்ணி
ஏங்கி இருந்தனன்! பின்பு;
ஒன்று நினைத்தனன் சூழ்ச்சி! -- மிக
ஊக்கம் மிகுந்தது நெஞ்சில்!
பின்புறக் கோட்டையை நாடிச் -- சில
பேச்சுக்கள் பேசிட ஓடித்
தன்துணைவர்களைக் கண்டான் -- கண்டு
தன்கருத்துக்களைச் சொன்னான்.

கோட்டையில் வேறொரு பக்கம் -- வந்து
குப்பு, முருகியைக் கண்டான்.
நாட்டம் அனைத்தும் உரைத்தான் -- அவர்
நன்றென்று கூறி நடந்தார்
'பாட்டு நிகர் மொழியாளை -- என்
பக்கம் திருப்பிடச் செய்வேன்
காட்டுவேன் வேடிக்கை' என்றே -- சிங்கன்
கையினை வீசி நடந்தான்.


( 220 )





( 225 )





( 230 )





( 235 )




( 240 )

                  இங்கே செல்லாது

              ( தென்பாங்கு -- கண்ணிகள் )

தூங்கும் குயிலினை நோக்கி ஓராயிரம்
துப்பாக்கி சூழ்ந்தது போல, -- துயர்
தாங்கருங் கிள்ளையை நோக்கிக் கவண்பலர்
தாங்கி நடந்தது போல,
ஏங்கும் விளக்கினை நோக்கிப் பெரும்புயல்
ஏற்பட்டு வந்ததுபோல், -- நொடி
ஆங்கிருக் கும்சுப்பம் மாவின் குடிசையை
ஆட்கள் பலர் சூழ்ந்தார்!

தீய முருகியுங் குப்பும் இருந்தனர்
சேயிழை பக்கத் திலே -- வீட்டு
வாயிற் கதவினைத் தட்டிய தட்டோடு
வந்தது பேச்சுக் குரல்!
'ஆயிரம் ஆயிரம் ஆக வராகன்
அடித்துக் கொண்டோடி வந்தீர் -- நீர்
தூயவர் போலிந்த வீட்டில் இருந்திடும்
சூழ்ச்சி தெரியாதோ'.

என்று வெளியினில் கேட்ட குரலினை
இவ்விரு மாதர்களும் -- உயிர்
கொன்று பொருள்களைக் கொள்ளை யடிப்போர்
குரலிது வென்று ரைத்தார்.
புன்மை நடையுள்ள அவ்விரு மாதரும்
பொத்தெனவே எழுந்தார்; -- அவர்
சின்ன விளக்கை அவித்துக் கதவைத்
திறந்தனர்; ஓடி விட்டார்!

மங்கை இருந்தனள் வீட்டினுள் ளேஇருள்
வாய்த்த இடத்தினிலே, -- பின்னர்
அங்கும் இங்கும்பல ஆட்களின் கூச்சல்
அலைவந்து மோது கையில்
மங்கையின்மேல்ஒரு கைவந்து பட்டது.
*வாள்பட்ட தால்விட்டது -- அட
இங்குச் செல்லாதென்று மங்கை சொன்னாள்! வந்த
இழிஞர்கள் பேச வில்லை.

மேலும் நடப்பது யாதென்று மங்கை
விழிப்புடன் காத்திருந்தாள் -- அந்த
ஓலைக் குடிசைக்குத் தீயிட்ட தாக
உணர்ந்தது நெஞ்சந் துடித்தாள்!
மூலைக்கு மூலை வழிபார்த்தாள்புகை
மொய்த்த இருட்டிலே -- அவள்
ஏலுமட்டும்இரு தாழைத் திறந்திட
என்னென்னவோ புரிந்தாள்.

கூரை எரிந்தது! கொள்ளிகள் வீழ்ந்தன!
கூட்டத்தி லேஒருவன் -- 'சொல்
ஆரங்கே' என்றனன்; தாழைத் திறந்தனன்
'அன்னமே' என்றழைத்தான்.
கூரை எரிந்தது! கொள்ளி எரிந்தது
கொல்புகை நீங்கிய தால் -- 'முன்
ஆரங்கே' என்றவன் சுதரிசன் என்பதை
அன்னம் அறிந்தவளாய்

கத்தியை நீட்டினாள்; 'தீஎன்னை வாட்டினும்
கையைத் தொடாதேயடா -- இந்த
முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி
மூச்சுப் பெரிதில்லை காண்!'
குத்தும் குறிப்பும் கொதித்திடும் பார்வையும்
கொண்டிது கூறிநின்றாள் -- வந்த
தொத்தல் பறந்தது! சூழ இருந்தவர்
கூடத் தொலைந்து விட்டார்.

*சுப்பம்மாமேல் ஒரு கைப்பட்டது உடனே சுப்பம்மாவின்
வாள் அக்கையின் மேல் பட்டவுடன் அக்கை எடுபட்டது.


( 245 )




( 250 )





( 255 )




( 260 )




( 265 )





( 270 )




( 275 )





( 280 )





( 285 )




( 290 )





( 295 )





( 300 )