பக்கம் எண் :

மணிமேகலை வெண்பா

மாண்டானா மைந்தன்!

மாண்டானா மைந்தவனவன் மற்றென்பின் மாநிலத்தை
ஆண்டனா அஃதும் இலையேஎன்-றீண்டிய
கண்ணீர் உகுத்துக் கதறினான் ஆங்கும்ஓர்
எண்ணத்துள் ஆழ்ந்தான் இறை.

காஞ்சனன் தூயவன்

இப்படியோர் போற்றும் அறத்தின் இளையாளை
அப்படியா செய்திறந்தான் அன்புமகன்-எப்படிநாம்
கண்டாலும் காஞ்சனன் நெஞ்சாலும் கைவாளின்
தொண்டாலும் தூயனே ஆம்!

( 5 )

உரிய தண்டனையை உதயன் பெற்றான்

வழிவந்த கன்றைத்தேர் வாட்டியதால் மன்னன்
வழிவந்த சேயை மடித்தான்-வழிவந்த
யான்பெற்ற மைந்தனவன் காமத்தால் காஞ்சனனால்
தான்பெற்ற தண்டம் தகும்.


( 10 )

மணிமேகலையைச் சிறையில் இடுக
மகனுடலுக்கு இறுதிக் கடன் நடக்க

துறவோர் அருளிய தொல்லறநூற் சீர்த்தி
இறவாது காத்தல் எனது-மறவாக்
கடன்! மேகலைசிறை காண்கவே மைந்தன்
உடன்மேவ உற்ற கடன்.



( 15 )

அம்மா உன்னையும் சிறையிட வந்தோம்

மன்னனை வாழ்த்தியே மாமுனிவர் சென்றனர்
அன்னம் நிகர்த்தானை அங்கிருந்தோர்-தன்னம்
தனிக்கண்டு சாற்றுவார், அன்னாய் சிறைக்கே
உனைக்கொண்டு போவதும் உண்டு.




( 20 )

சிறையில் உனக்கென்ன குறைச்சல்?

இறையும் உனக்கீந்த இன்னல் மிகுந்த
சிறையும் திருக்கோயி லாகும்-நிறையும்
படியாரை அச்சிறையில் பார்ப்பின்எம் அம்மைக்
கடியார் அலால்மற்றி யார்?




ஊண் இட்ட உண்மை மறப்பாரோ?

மாணிட்ட மாதர்க் கரசேஇவ் வையத்தார்க்
கூணிட்ட உன்னை மறந்தவர்கள்-காணின்
இறந்தவர்கள் என்க அருள்சேர்ந்த நின்தாள்
பிறந்தார் பெறத்தக்க பேறு.

( 25 )


அரசுக்கு எதிர்ப்பு

என்றார் மணிமே கலையைச் சிறைக்கழைத்துச்
சென்றார் இதையறிந்தோர் சீறியே-ஒன்றாய்
விடிவீரெம் தாயையே காவலரே நின்றால்
படுவீரென் றார்கள் பரிந்து.


( 30 )

மணிமேகலை மக்களுக்கு அறங் கூறினாள்

ஏவலரென் றெண்ணீரோ என்னைச் சிறைப்படுத்தல்
காவலரின் கண்ணளையாம் காணீரோ-தீவழியே
நண்ணலும் ஏற்குமோ மக்காள் நலிவுசெய
எண்ணமும் ஏற்காதென் றாள்.



( 35 )

மணிமேகலை சிறையில் சேர்க்கப்பட்டாள்

ஊர்ச்சா வடியைச் சிறையாக்கி ஒன்றவே
நீர்ச்சாலும் கூழ்க்கலமும் நேர்வைத்துக்-கூர்ச்சுடர் வேல்
வைத்தாரை வைத்துமணி மேகலையை உள்ளடைத்து
வைத்தார்கை யோடுகொண்டு வந்து.




( 40 )

சிறையிலும் மக்கள் சீற்றம்

காவிரிப்பூம் பட்டினத்துக் கண்ணகியின் பெண்ணாளை
நீவிரித்துன் பப்படுத்தல் நேர்த்திஎன்று-தாவிச்
சிறைகாப்போர் வேலும் சிதைத்தும்மை வைத்து
முறைகாப்போர் எங்கென்றார் மொய்த்து.




கூறினோருக்கு மணிமேகலையின் ஆறுல்

வம்பிட்ட மக்களின் முன்வந்து மாதரசி
கும்பிட்டுக் குற்றம் இதுவென்றாள்-வெம்புற்றே
அம்மாநின் றாவதென்ன அம்மன்னன் தீயனென்றே
சும்மாநின் றார்மெய் துடித்து.

( 45 )


மணிமேகலைக்குச் சாப்பாடு வந்தது

நின்றிருந்தார் மக்கள் நினைவு பலிக்கவில்லை
என்றிருந்தார் மாதின் எதிர்வணங்கிச்-சென்றிருந்தார்
ஈப்பாடு தாரோனின் ஏற்பாட்டாற் சிற்சிலர்
சாப்பாடுதாம் கொணர்ந்தார் தாய்க்கு.


( 50 )

சிறைப் பணியாளர் கூற்று

கேழ்வரகின் கூழ்கொடுக்கச் சொன்னார்; கெடுவார்கள்!
வாழ்வரசுக் கீய மனம்வருமா-தாழ்விலராய்
வாழையிலும் யாம்உனக்கு முப்பழம் பாற்சோறும்
வாழையிலை போட்டிட்டோம் வந்து.



( 55 )

இனி வேண்டாம் கூழே போதும்

என்று சிறைப்பணி யாளர் இயம்பினார்
ஒன்று மணிமே கலையுரைப்பாள்-இன்று
கொடுத்தீர்! இனிஎனக்குக் கூழ்போதும் என்றாள்
வடுத்தீர்ந்த மங்கைநல் லாள்.




( 60 )

தெருவார் தருவார்

பாலடிசில் நெய்யடிசில் பத்துக் கறியோடும்
காலையிலும் மாலையிலும் கன்னிக்கே-சாலத்
தெருவார் தருவார் சிறையாளர் கொண்டு
தருவார் திருவார் தமிழ்க்கு.




சிறை பணியாளரைச் சீர்த்தி கேட்டாள்

இறைவிநற் சீர்த்திதான் ஏவலரைக் கூவிச்
சிறையினில் மேகலையின் செய்தி-அறைகென்னக்
கேழ்வரகை ஒன்றிரண் டாக்கிக் கிளரிய
கூழ்தருவோம் கொள்வாள்என் றார்.

( 65 )


சிறையில் மணிமேகலையைப் பார்த்தாள் சீர்த்தி

ஒருநாள் சிறைகாணல் உற்றனள் சீர்த்தி
திருநாள் திருக்கச்சிக் கோயில்-இருநாளும்
உண்டாலும் தீரா உளுத்தவடை உண்டாள்கற்
கண்டு மணிமே கலை.


( 70 )

சீர்த்தி மன்னனிடம் ஓடினாள்

நிறைந்திருந்த நெஞ்சின் மணிமே கலையை
மறைந்திருந்து கண்டஅம் மன்னி-பறந்தோடி
மங்கட்டும் என்னேல் மணாளா அவள்என்பால்
தங்கட்டும் என்றாள் தனித்து.



( 75 )

உன்சார்பில் மணிமேகலை இருக்கட்டும்

சிக்கிச் சிறைவலையில் தீங்குபடும் அப்பசுங்கி
ளிக்கிச் சிறைநீக்கம் தக்கதே-புக்கில்
இருந்தால் இருக்கட்டும் என்றான்தன் காதல்
மருந்தால் பிழைக்கின்ற மன்.




( 80 )

கொடியவளுக்குக் கூழும் கொடாதீர்

அரண்மனையில் ஓர்பால் அடைத்தாள் சிறையில்
திலண்முகில் கூந்தல் திருவைப்-புரண்டழவே
கூழும் கொட தீர் கொடியவட்கென் றாள்தன்கீழ்
வாழும் பலர்க்கரசி மற்று.




ஒன்றும் மணிமேகலைக்குக் கொடோம் என்றவர்கள்
எல்லாம் கொடுத்து வந்தார்கள்

ஒன்றும் கொடோமென் றொரு தட்டில் பண்ணியங்கள்
அன்றும் கொடுத்தார் அதன்பின்னும்-என்றும்
குளநீரும் சோறும் குறையாது தந்தார்
இளநீரும் வேளைக் கிரண்டு.

( 85 )


'மணிமேகலை செத்து விட்டாளா?' என்று சீர்ச்சி
கேட்டாள்!

இட்டினியும் காக்க இருப்பாரை மன்னிதான்
பட்டினியாற் செத்தாளா பாவை? என்று-கிட்டி
வினாவினாள் உள்ளாள்என் றோதலும் சிங்கக்
கனாவினாள் உள்அஞ்சி னாள்.


( 90 )

பணிப்பெண்களின் மேல் ஐயப்பட்ட சீர்த்தி
தன்மனமொத்த பாங்கிமாரிடம் சொன்னாள்

மனமொத்த தன்பாங்கி மாரை அவள்சாவை
இனமொத்துக் காப்பீர்கள் என்றாள் புனலற்ற
நாவுக்குத் தேன்வார்க்கும் நல்லமணி மேகலையின்
சாவுக்குத் தாளா துலகு.



( 95 )

பாங்கிமார் மடியில் கட்டிவந்து கொடுப்பார்கள்

நொடியும் மறவாமல் நூறு கறிகள்
மடியும் தெரியாமல் மாதர்-அடிசிலொடு
கொல்லையால் வந்து கொடுப்பார் அரசியிடம்
இல்லையே என்பார் இனிது.




( 100 )

சாவாள் என்று எண்ணினேன்!
அவள் மணலிற் பிடுங்கிய வள்ளிக் கிழங்கு

உணற்கிழந்து சாவாள்என் றெண்ணினேன் ஓங்கும்
மணற்கிழங்கு போலும்அவள் வாழ்ந்தாள்-தணற்பிழம்பில்
பொற்பைக்காண் பேன்எனில் வையம் பெறாதிவள்
கற்பைக்காண் பேன்என்றாள் காய்ந்து.




பூக்காரி மகனை அழைத்து
மணிமேகலையின் கற்பைக் கெடுத்துவிடு
என்றாள் சீர்த்தி! அவன் பட்டாடை கேட்டான்

பூக்காரி பெற்றஒரு பொன்னனைக் கற்பழிக்கும்
தீக்காரி யத்தில்நீ செல்லென்றாள்-நாக்குநீர்ச்
சொட்டோடு தூயசீர் மன்னியே வேண்டுமே
பட்டாடை என்றான் பணிந்து.

( 105 )


கடுக்கன் வேண்டும் என்றாள்

காதுக்கும் கல்லிழைத்த நல்ல கடுக்கன்இப்
போதுக்குத் தந்திட்டாற் போதும் என்றான்-மாது
மணிமே கலையின் மனம்பறிக்கச் சீர்த்தி
அணிஎன் றளி்தாள் அவை.


( 110 )

பொன்னன் உடுத்துக் கொண்டு எழுந்தான்; விழுந்தான்

காலுக்குத் தோற்செருப்புக் கையில் விரித்தகுடை
மேலுக்குக் காண விளக்கொருகை-ஏல
எழுந்தான் இரவிலே வேட்டி தடுக்க
விழுந்தான் விலைபோகா மாடு.



( 115 )

மணிமேகலை இல்லை, பிச்சைக்காரனைப் பார்த்தான்
பொன்னன்

ஆசைவைத்தேன் உன்மேலென் றேநுழைந்த அப்பொன்னன்
மீசைவைத்த ஓராளை உட்கண்டான்-ஓசையின்றிச்
சீர்த்தியிடம் ஓடிவந்தான் செய்தி தெரிவித்தான்
பார்த்ததுபொய்; பார்போய்என் றாள்.




( 120 )

ஆண் பிள்ளை தான் என்று பொன்னன் ஓடி வந்தான்

காட்டுக்குப் பாய்கின்ற கால்வாய் நிகர்பொன்னன்
வீட்டுக்குள் ஓடி விடலைகண்டே-ஓட்டம்
பிடித்தான் பிடித்தால் பிடிகாணாப் பையன்!
கடித்தாள் அரசிதன் கை.




அரசிக்குப் பெண்ணாகப் பொன்னனுக்குப்
ஆணாகத் தோற்றமளித்தாள் மணிமேகலை

தான்கண்டாள் தையலையே அவ்வறைக்குள்! பொன்னனவன்
தான்கண்டான் ஆடவனைக்! கண்டிருவர்-மேனடந்தார்
கண்டுமலைத் தேன் என்றான் காட்டுப்பூக் காரிமகன்
கண்டுமலைத் தேன்என்றாள் காம்பு.

( 125 )


எனக்கு அமிழ்து மணிமேகலையே!

உண்ணாமல் வாழ்கின்றாள்! உற்றொருவன் கற்பழியப்
பண்ணாமல் மாற்றுருவம் பற்றுகின்றாள்-தண்ணார்
தமிழன்றோ சாருநெறி தன்னலமே எண்ணாள்
அமிழ்தன்றோ அன்னாள் எனக்கு.


( 130 )

என் மகனை மணிமேகலை கொல்லவில்லை!

என்மகனைக் கொன்றாள் இவளென்றால் அம்முனிவர்
நன்மகளைக் கொண்டாட நாணுவரே-தன்மகனாய்த்
தன்மகளாய்த் தந்தையாய் இவ்வுலகைக் காணுகின்ற
பொன்மகளே என்றன் புகல்.



( 135 )

மணிமேகலையைக் கொல்லுவது அறமா?

பண்டு துறந்தார் குறைபாடு பட்டவரைக்
கண்டு நிறைபாடு காண்பார்போல்-தொண்டுதவம்
என்பாளை வீழ்த்தல் இளநீர்க்காய் ஈன்தென்னை
மென்பாளை வீழ்த்தல்என் றாள்.




( 140 )

சீர்த்தி வாய்மை கண்டாள்!

அறமா மணிமே கலையை அழித்தல்
அறமா அதுமா நிலமாள்-திறமா
எனஅறி வைந்திலும் எய்தினாள் ஆறாம்
மனஅறிவில் வாய்மை கண்டாள்.




பூவை விலக்கி மணிமேகலையின் பொன்னடியைப் பூணேனா?

சாவை விலக்கித் தமிழ்த்தொண்டு செய்யேனா
பூவை விலக்கியவன் பொன்னடியைத்-தேவைஎனப்
பூணேனா என்தலையில் பூவாய் பொழியும் அறம்
காணேனா பற்றுக் கடந்து.

( 145 )


மணிமேகலை எதிரில் சீர்த்தி

கலையுணர்ந்த மேலோரும் காணற் கரிய
நிலையுணர்ந்த சீர்த்தி நிறைபால்-முலையாவின்
கன்றேபோல் சென்று மணிமே கலையின்முன்
நின்றே அழுதாள் நெடிது.


( 150 )

சீர்த்தியின் விண்ணப்பம்

ஒறுத்தோம் சிறையினில் உய்த்தோம் இடவும்
மறுத்தோம் இடரெலாம் வைத்தோம்-பொறுத்தருள்க
தீயைச் சிறுவீடு சேரினும் தீவைத்த
சேயைத் தழுவும்தாய் கை.



( 155 )

நான்தான் தவறு செய்தேன் என்றாள் மேகலை

முந்தா தடங்கி மொழிந்திட்ட சீர்த்திக்குச்
செந்தா மரைவாய் திறந்தாள்முன்-வந்தது
நான்செய் தவறு பொறுத்ததாம் நல்லோய்நீ
தான்செய்த தென்ன தவறு.




( 160 )

மகன் செத்தது உனக்குத் துன்பம்!
என்னைச் சிறையில் வைத்தது எனக்கு மகிழ்ச்சி

உன்னழகைப் பாரில் உரித்துக்கொண் டேபிறந்த
பின்னழகும் முன்னழகும் பெற்றமகன்-என்னழகால்
செத்தது துன்பம் உனக்குச்! சிறையில்எனை
வைத்தது மாமகிழ்ச்சி எற்கு.




அரசனிடம் அரசி

இலவை இதழ்என்னும் மன்னி மறுவில்
நிலவைச் சிறைவைத்தல் நேர்மை-அலவென்று
காவலன்பால் சொன்னாள் கடிது கருங்குயிலின்
கூவலன்பால் ஒப்பினான் கோன்.

( 165 )


மணிமேகலையை விடுதலை செய்தார்கள்

அணங்கின் அடிமலர் மன்னவன் மன்னி
வணங்கி அரண்மனை வாயில்-பிணங்கி
இருந்த தமிழருக் கீந்தார் சிறையில்
இருந்த தமிழை எடுத்து.


( 170 )

சிறைமீண்ட செல்விக்கு வரவேற்பு

நீர்கும் உணவுக்கும் கையேந்தி நிற்கின்றார்
யார்க்கும் தமிழ்வேண்டும் என்றேற்றார்-வேர்க்கே
அறவொன்று வேண்டும் அதற்குத் தமிழின்
நெறிஒன்று வேண்டுமென் றார்.



( 175 )

தமிழில்லார் அறிவில்லார்!

அத்தமிழ் இல்லார் அறிவில்லார் அன்னவர்க்குத்
குந்தக் குடிசை குடிக்கக்கூழ்-கந்தை
அடையவிடாரே அறிவின் இடையார்
அடைவிப்பார் முற்றுணர்ந் தார்.




( 180 )

தமிழிலக்கியம் கண்டவர்க்கே உணர்வு வரும்

கடையர் அறிவிலார் இடையர் சிறிதே
உடையர்; தலையார் உணர்ந்தார்-தடையின்றி
வெள்ளத் தமிழின் இலக்கியம் வேண்டினோர்க்
குள்ளத் துணர்வு வரும்




இல்லாரை எள்ளுவர்
(இன்னிசை வெண்பா)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்ற நேயத்து
வள்ளுவர் வாய்மையை உள்ளுக உள்ளாரை
எள்ளுவர் இல்லாதார் என்று.

( 185 )


மணிமேகலை உலக அறவிக்குச் சென்றிருந்தாள்

என்று கலத்தோடும் ஏற்ற உணவோடும்
நன்று மணிமே கலைநடந்து-சென்றிருந்தாள்
தாம்புகார் ஆயின் தழைவிலைஎன் றன்றோர்வாழ்
பூம்புகார் மன்றம் புனைந்து.


( 190 )

மேகலை காஞ்சி சென்றாள்

அறவணரும் அன்னம் சுதமதியும் காஞ்சி
உறஇருக்கும் செய்தி உணர்ந்த-அறமா
மணிமே கலைதான் மணிக்கல மென்னும்
அணிமேவச் சென்றிட்டாள் அங்கு,



( 195 )

மன்னனின் விண்ணப்பம்

அரசனும் மற்றும் அலுவலர் தாமும்
வரிசையின் வந்து வணங்கித்-திருவார்
அறவணரே அம்மையே காஞ்சியின் அல்லல்
அறவருள வேண்டுமென்றார் ஆங்கு.




( 200 )

மற்றும் வேண்டுகோள்

மழையில்லை கஞ்சி வளமில்லை எம்மேற்
பிழையில்லை எங்கும் பெரிதும்-தழைந்துள்ள
பஞ்சம் அகற்ற அருட்பஞ்சமா என்றுரைத்தான்
நெஞ்சு துடித்தரசன் நின்று.




அறவணர் ஆறுதல்

மன்னர் நிறைகொற்றம் வாழ்கவே காஞ்சிதான்
நன்னர் நலமடைதல் திண்ணமே-என்னும்
நிலைக்கும் நினைப்புடையோம் மாது மணிமே
கலைக்கும் நினைப்புண்டு காண்.

( 205 )


மேலும் அறவணர்

சாற்று கவிகை அரசர்மனத் தாழ்வெல்லாம்
மற்றும் மணிமே கலைஎன்று-போற்றும்
அடிகள் உரைத்தார்! அவளும் உரைத்தாள்
மிடிகள் விலகிடும் என்று.


( 210 )

மேலும் மணிமேகலை சொன்னாள்

மேலும் விளம்புவாள்; வேந்தேநீ வாழ்கநின்
கோலும் கிடப்பக் கொடியோர்க்கு- மேவம்
கிடப்ப்க் கிடைநெல் ஒருபால் குவிந்து
கிடப்பதேன் என்றாள் கிளி.



( 215 )

மற்றும் மணிமேகலை

உள்ளார் இசைவேண்டி இல்லார்க் குதவுவர்
உள்ளார் கடனென் றிலார்க்குதவ-உள்ளுக!
உள்ளார் உடைமைஎனல் இல்லார் இழந்ததே
பள்ளநீர் பாய்ந்தநீ ராம்.




மேலும் மணிமேகலை

இனமென எண்ணி இடுக! இடாரேல்
மனமெனும் மங்கை தனது-தனிமை
பொறாது மறுபுலம் போதலும் உண்டு
உறாதார்க் குதவலும் உண்டு.

  மணிமேகலை காஞ்சியிலே அடிவைத்தால் பஞ்சம் பறந்தது!    

கல்லார்க்குக் கலவி அருளும் புலவரைப்போல்
இல்லார்க்குச் சோறுகறி இட்டாள்மேல்-செலிவிக்கே
ஆரும் புகழ்வைத் தளித்ததே காஞ்சிக்குத்
தேரும் திருவிழா வும்.

( 220 )








( 225 )

காஞ்சிக்குத் தேரும் திருவாழாவும்

கல்லார்க்குக் கல்வி அருளும் புலவரைப்போல்
இல்லார்க்குச் சோறுகறி இட்டாள்மேல்-செல்விக்கே
ஆரும் புகழ்வைத் தளித்ததே காஞ்சிக்குத்
தேரும் திருவிழா வும்.



( 230 )

மணிமேகலையே சோறுகறியாக்கத் தொடங்கிவிட்டாள்!

ஈயப் பெரும்பானை இட்டுச்சோ றாக்குவோர்
ஒயப் பொருள்கள் உதவுவார்-தூயமணி
மேகலையும் சோறாக்கி வெஞ்சனம்செய் வாள்பிஞ்சுப்
பாகலையும் சென்று பறித்து்




தனக்கு வரும் புகழையும் மற்றவர்க்குப்
பயன்படுத்தும் செய்கை அரியது!

உள்ளவர் தத்தமக் குள்ளது போகமற்
றுள்ளதை இல்லார்க் குதவுகின்ற-உள்ளம்
அரிதன்று; பெற்றபுகழ் மற்றவர்க் காக்கல்
அரிதென் றறவணர் சொன் னார்.




மழை பெய்த்து காஞ்சியில்

அழையாது வந்தஎம் அம்மைகால் வைக்கப்
பிழையாது யாமும் பிழைத்தோம்-மழையா
மழையும் மழைத்தது வாழ்கின்றோம் என்றார்
தழையாது காஞ்சியார் தாம்.

( 240 )


காஞ்சி மன்னன் வணங்கி வழியனுப்பினான்

அறவணர் ஆய்ந்த சுதமதி யோடும்
உறவண மேகலை ஓவம்-புறவணம்
கால்வைத்தாள் அக்கால் தலைவைத்தான் நன்றி என்றான்
கோல்வைத்த காஞ்சியின் கோ


( 245 )

மணிமேகலை போகக்கண்ட மங்கைமார் வாழ்த்தினார்கள்

முன்னாலே சோறின்றி முட்டுண்டோம் அம்மையே
உன்னாலே உள்ளோம் என்றேவாழ்த்திப்-பொன்னாலே
பூணிட்ட செவ்வுலக்கைப் பாட்டுப் புதுக்கினார்
நாணிட்டு நங்கையினைக் கண்டு.



( 250 )

உழவர் வாழ்த்தினார்கள்

பல்வாளை மேயும் பழனத்தைத் தாண்டியே
செல்வாளை எங்கள் சிறுமையினைக்-கொல்வாள்
நினையாமை வாழ்வோமா என்றார்கள் நீரார்
சினையாமைச் செய்யுழவர் சேர்ந்து.




( 255 )

தையலார் சாப்பிட்டுப்போகக் கெஞ்சினார்கள்

மின்னுக்கும் நல்லறத்து வேளுக்கும் முன்நடக்கும்
பொன்னுக்குப் பூவெடுத்தார் போலெடுத்த-முன்கைகள்
கூப்பிட்டு வாழ்த்திய கோதைமார் கெஞ்சினார்
சாப்பிட்டுப் போம்படியோ தாழ்ந்து.




மற்றும் பலர் வாழ்த்தினார்கள்

கல்லாமை நீக்கிக் கடும்பசிக்கு நீர்ச்சோறும்
இல்லாமை நீக்கினீர் என்றுரைத்துப்- பல்லோர்தம்
போரடித்த நெல்லைஎலாம் பொன்னாக்கிப் போகவரத்
தேரடித்துக் கொண்டிருந்தார் சென்று.

( 260 )


மற்றும் மக்கள் வாழ்த்து

கண்பொங்கக் கையெடுத்தால் காலெடுக்கும் செல்வரிடம்
வெண்பொங்கல் வாங்கி விலாப்புடைக்க-உண்கென்றாய்
உள்ளளவும் ஊருக் குழைத்தவளே வாழ்கென்றார்
எள்ளளவும் யாம்மறவோம் என்று.


( 265 )

மற்றும் பலர்

என்றும் அறியா எமைஈன்ற தாய்போலும்
ஒன்றும் எதிர்பாரா தூர்க்.குழைத்தாய்-இன்றே
எமைவிட் டகன்றாலும் எம்முள்நீ உள்ள
சுமைவிட் டகலாதென் றார்.



( 270 )