இசையமுது
(முதல்
தொகுதி)
சிறுவர்
பகுதி
இன்பம்
|
பசி என்று வந்தால் ஒருபிடி சோறு
புசி என்று தந்துபார் அப்பா!
பசி என்று வந்தால்...
பசையற்ற உன்நெஞ்சில் இன்பம் உண்டாகும்
பாருக் குழைப்பதே மேலான போகம்!
பசி என்று வந்தால்...
அறத்தால் வருவதே இன்பம்-அப்பா,
அதுவலால் பிறவெலாம் துன்பம்!
திறத்தால் அறிந்திடுக அறம்இன்ன தென்று
செப்புநூல் அந்தந்த நாளுக்கு நன்று!
பசி என்று வந்தால்...
மனுவின்மொழி அறமான தொருநாள்-அதை
மாற்று நாளே தமிழர் திருநாள்
சினம், அவா, சாதி, மதம் புலை நாறும் யாகம்
தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்!
பசி என்று வந்தால்...
|
( 5 )
( 10 )
( 15 )
|
இன்று குழந்தைகள் நீங்கள்-எனினும்
இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்!
இன்று குழந்தைகள் நீங்கள்!
நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகாள்!
ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்!
இன்று குழந்தைகள் நீங்கள்!
குன்றினைப்போல் உடல்வன்மை வேண்டும்!
கொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்!
தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்
அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்!
இன்று குழந்தைகள் நீங்கள்!
பல்கலை ஆய்ந்து தொழில்பல கற்றும்
பாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும்
அல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்!
அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்!
இன்று குழந்தைகள் நீங்கள்!
|
( 20 )
( 25 )
( 30 ) |
தூய்மை சேரடா தம்பி-என்
சொல்லை நீ பெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!
வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும் மேலும்!
தூய்மை சேரடா தம்பி!
உடையினில் தூய்மை-உண்ணும்
உணவினில் தூய்மை-வாழ்வின்
நடையினில் தூய்மை-உன்றன்
நல்லுடற் றூய்மை-சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும் நாள் ஆகும்நீ என்றும்
தூய்மை சேரடா தம்பி!
உதுகளிலா நெஞ்சில்-சாதி
துளிப்பதும் இல்லை-சமயப்
புகைச்சலும் இல்லை-மற்றும்
புன்செயல் இல்லை!-தம்பி!
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
தூய்மை சேரடா தம்பி!
|
( 35 )
( 40 )
( 45 )
( 50 ) |
அன்பை வளர்திடுவாய்-மெய்
அன்பை வளர்திடுவாய்!
கூடப்பிறந்த குழந்தை யிடத்தினில்
கொஞ்சுதல் அன்பாலே! உற
வாடி அம்மாவை மகிழ்ந்த மகிழ்ச்சியும்
அன்பின் திறத்தாலே!
தேடிய அப்பத்தில் கொஞ்சத்தை இன்னொரு
சின்னவனுக்குத் தர-நீ
ஓடுவ துண்டெனில் கண்டிருப்பாய் உன்
உள்ளத் திருந்த அன்பை!
கன்றையும் ஆவையும் ஒன்றாய் இணைத்தது
கருதில் அன்பன்றோ?
உன்னையும் உன்னரும் தோழர்கள் தம்மையும்
ஒட்டியது அன்பன்றோ?
சென்னையினின்றொரு பேர்வழி வந்ததும்
சிட்டுப் பறந்ததுபோல்-நீ
முன்னுற ஓடஉன் உள்ளம் பறந்ததும்
முற்றிலும் அன்பன்றோ?
|
( 55 )
( 60 )
( 65 )
( 70 ) |
மெய் சொல்லல் நல்லதப்பா, தம்பி!
மெய் சொல்லல் நல்லதப்பா!
கண்டதைச் சொல்லென்று சொன்னாலும்-நீ
உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,
மண்டை உடைத்திட வந்தாலும்-பொருள்
கொண்டுவந்து உன்னிடம் தந்தாலும்
மெய் சொல்லல் நல்லதப்பா!
பின்னவன் கெஞ்சியும் நின்றாலும், அன்றி
முன்னவன் அஞ்சிட நின்றாலும்,
மன்னவரே எதிர் நின்றாலும்-புலி
தின்னவரே னென்று சொன்னாலும்-நீ
மெய் சொல்லல் நல்லதப்பா!
பொறுமை தான் உன்றன் உடைமை! அதைப்
போற்றலே கடமை!
பொறுமையாற் கழியும் நாளிலே
புதுவன்மை சேருமுன் தோளிலே!
பொறுமைதான் உன்றன் உடைமை!
பொறுமையுடைய ஏழையே கொடையன்!
பொறுமையிலாதவன் கடையன்!
இறைவனே எனினும் பிழை செய்தோன்,
ஏதுமற்றவனாகி நைவான்!
பொறுமைதான் உன்றன் உடைமை!
பலமுறை பொறுப்பாய் வேறு
பழுதும் நேருமெனில் சீறு!
நிலைமை மிஞ்சும்கையில் பகைவனை
நீறாக்கலே பொறுமையின் பயன்
பொறுமைதான் உன்றன் உடைமை!
|
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 ) |
சினத்தை யடக்குதல் வேண்டும், சினம்
உனக்கே கெடுதியைத் தூண்டும்!
சினத்தினை அடக்கிட முடியும்? என்று
செப்புகின்றாய் எனில் கேள் இதை நன்று!
வலிவுள்ளவன் என்று கண்டு...சினம்
வாராமலே யடக்கல் உண்டு;
வலிவிலானமேல் அன்புகொண்டு-அதை
மாற்றாதான் பெரிய மண்டு!
நலியும் மொழிகளைப் பேசவும் சொல்லும்
நாக்கையும் பல்லால் நறுக்கவும் சொல்லும்
சினத்தை அடக்குதல் வேண்டும்!
அடங்கா வெகுளிமண் மேலே, -காட்
டாறுபோய்ச் சீறுதல் போலே,
தொடர்ந்தின்னல் செய்யுமத னாலே-அதைத்
தோன்றாமலேசெய் உன்பாலே!
கடிதில் சுடுமிரும்பைத் தூக்கவும் வைக்கும்
கண்ணாடி மேசையைத் தூளாய் உடைக்கும்
சினத்தை அடக்குதல் வேண்டும்!
|
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
|
மழையே மழையே வா வா!-நல்ல
வானப் புனலே வா வாழ1-இவ்
தழையா வாழ்வு தழைக்கவும்-மெய்
தாங்கா வெப்பமும் நீங்கவும்
உழுவா ரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே...
தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப் பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன மழையே...
ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி மழையே...
இல்லாருக்கும், செல்லவர்கள் தாமே
என்பாருக்கும், தீயவர் மற்றும்
நல்லாருக்கும் முதுகிலே சமமாய்
நல்கும் செல்வம் நீயே அன்றோ? மழையே...
|
( 120 )
( 125 )
( 130 ) |
-
முழுமை நிலா! அழகு நிலா!
முளைத்தது விண் மேலே-அது
பழைமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போல!
அழுதமுகம் சிரித்ததுபோல
அல்லிவிரித் தாற்போல்,-மேல்
சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத்
தொத்திக் கிடந்தாற்போல்
முழுமை நிலா! அழகு நிலா!
குருட்டு விழியும் திறந்ததுபோல்
இருட்டில் வான விளக்கு!-நம்
பொருட்டு வந்தது பாடிஆடிப்
பொழுது போக்கத் துவங்கு;
மரத்தின் அடியில் நிலவுவெளிச்சம்
மயிலின் தோகை விழிகள்!-பிற
தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும்
சேர்த்து மெழுகும் வழிகள்!
முழுமை நிலா! அழகு நிலா!
|
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
|
நிறையப் பால்தரும் கறவை-நீ
மறவேல் அதன் உறவை!
குறைவிலாது வைத்திடுக தீனியைக்
குளிப் பாட்டிவா நாளும் மேனியை!
நிறையப் பால்தரும் கறவை!
நோய் மிகுத்து மாளும்-கொட்டில்
தூய்மைசெய் எந்நாளும்!
தோய்வு குப்பை கூளம்-இன்றித்
துடைக்க ஏன் ஒக்காளம்?
வாய் மணக்கவே, உடல் மணக்வே,
வட்டில் நெய்யோடு கட்டித் தயிர்ஏடு
நிறையப் பால்தரும் கறவை;
ஈக்கள் மொய்த்தல் தீது!-கூடவே
எருமை கட்டொ ணாது!
மேய்க்கப் போகும் போது-மேய்ப்போன்
விடுக பசும்புல் மீது!
நோக்கும் கன்றினும் நமது நன்மையைக்
காக்கும் தாயடா! காக்கும் தாயடா!
நிறையப் பால்தரும் கறவை!
|
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
|
இத்தனைச் சிறிய சிட்டு!-நீ பார்!
எத்தனைச் சுறுசுறுப்பு!-தம்பி
இத்தனைச் சிறிய சிட்டு!
குத்தின் நெல்லைத் தின்று நம் வீட்டுக்
கூரையில் குந்தி நடந்திடும் பாட்டு
இத்தனைச் சிறிய சிட்டு!
கொத்தும் அதன்மூக்கு முல்லை அரும்பு
கொட்டை பிளந்திடத் தக்க இரும்பு!
தொத்தி இறைப்பினில் கூடொன்று கட்டும்
கூட்டை நீ கலைத்தால்அது திட்டும்
இத்தனைச் சிறிய சிட்டு!
மல்லி பிளந்தது போன்ற தன் கண்ணை
வளைத்துப் பார்த்தளாவிடும் விண்ணைக்
கொல்லையில் தன்பெட்டை அண்டையில் செல்லும்
குதித்துக் கொண்டது நன்மொழி சொல்லும்
இத்தனைச் சிறிய சிட்டு!
|
( 175 )
( 180 )
( 185 )
|
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு-நீ
வாழ்க்கை நடத்தினால் நன்மை உண்டு-
ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக்கிடக்கும்!-காக்கை
அழைத்துத்தன் இனத்தோடு குந்திப் பொறுக்கும்
காக்கை இடத்திலுள்ள ஒற்றுமை...
காக்கையை ஒருபையன் கொன்றுவிட்டதால்-அதைமக்
காக்கைகள் அத்தனையும் கண்டுவிட்டதால்
கூக்குரல் இட்டபடி ருந்திவருந்தும்!-அதைக்
கொன்றபையன் கண்டுதன் நெஞ்சு வருந்தும்...
காக்கை இடத்திலுள்ள ஒற்றுமை...
வரிசையில் குந்தியந்தக் காக்கைகள் எலாம்-நல்ல
வரிசைகெட்ட மக்களின் வாழ்க்கை நிலையைப்
பெருங்கேலி யாய்மிகவும் பேசியிருக்கும்-அதன்
பின்பவைகள் தத்தமிடம் நோக்கிப் பறக்கும்...
காக்கை இடத்திலுள்ள ஒற்றுமை...
|
( 190 )
( 195 )
( 200 ) |
என்றன் நாயின் பேர் அப்பாய்! அது
முன்றில் காக்கும் சிப்பாய்
ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்
கொன்று போடும்; குலைக்கும் எதிராளிளை!
என்றன் நாயின் பேர் அப்பாய்...
அதன் இனத்தை அதுவே பகைக்கும்! எனில்
அதுதான் மிகவும் கெட்டவழக்கம்!-அது
முதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;
மூன்றாண் டாயினும் செய்த நன்றி மறவாது
என்றன் நாயின் பேர் அப்பாய்...
நாய் எனக்கு நல்லதோர் நண்பன்-அது
நான்அளித்ததை அன்புடன் உண்ணும்-என்
வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்
வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்
என்றன் நாயின் பேர் அப்பாய்...
|
( 205 )
( 210 )
( 215 ) |
பூனை வந்தது பூனை!-இனிக்
போனது தயிர்ப் பானை!
தேனின் கிண்ணத்தைத் துடைக்கும்-நெய்யைத்
திருடி உண்டபின் நக்குந்தன் கையைப்
பூனை வந்தது!
பட்டப் பகல்தான் இருட்டும், -அது
பானை சட்டியை உருட்டும்!
சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும்
சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும்
பூனை வந்தது!
எலிகொல்லப் பூனை, தோது;-மெய்தான்
எங்கள் வீட்டில் எலி ஏது?
தலைதெரியாத குப்பை இருட்டறை
தன்னிலன்றோ எலிக்குண்டு திருட்டறை
பூனை வந்தது!
|
( 220 )
( 225 )
( 230 ) |
காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?
கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?
தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இனிப்புக்கு
வாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டில்
காப்பி எதற்காக?
ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கே
அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப்
பூப்போட்ட மேல்நாட்டு சிப்பம் வியந்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?
திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து விளைந்தும்
கரும்பு விளைந்திடும் இந்நாட்டு மண்ணும்
கசப்பேறச் செய்திடும் சுவையே இலாத
காப்பி எதற்காக?
|
( 235 )
( 240 )
( 245 ) |
புகைச் சுருட்டால் இளமை பறிபோகும்
பொல்லாங் குண்டாகும்
புகைச் சுருட்டால்...
முகமும் உதடும் கரிந்துபோகும்
முறுக்கு மீசையும் எரிந்துபோகும்
புகைச் சுருட்டால்...
மூச்சுக் கருவிகள் முற்றும் நோய் ஏறும்-பிள்ளை
முத்தம் தருநேரத்தில் வாய் நாறும்
ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல் சீறும்-நம்
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
பேச்சுச் கிடையில் பிடிக்கச் சொல்லும்
பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும்
புகைச் சுருட்டால்...
காசு பணத்தால் தீச்செயலை வாங்கிப்-பின்
ஏசிக்கொண்டே விரவிடையில் தாங்கி-நீ
எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி
மாசில்லாத செந்தமிழ் நாடு
வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
புகைச் சுருட்டால்...
|
( 250 )
( 255 )
( 260 )
( 265 ) |
சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டுமென்றேன்-நல்ல
சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!
பார்த்துப் பறித்த தாமரைப்பூத்
தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்
பூத்தமுகத் தாமரையால்
புதுமை காட்டி மயக்கி நின்றாள் (சேர்த்து)
தேவையடி தாமரை இதழ் என்றேன்
தேனொழுகும் வாயிதழ் மலர்கின்றாள்-ஒரு
பூவைக் காட்டிப் பேர் சொல் என்றேன்
பூவை "என் பேர் பூவை" என்றாள்
ஆவல் அற்றவன் போல் நடந்தேன்
அவள் விழிதனில் அலரி கண்டேன் (சேர்த்து)
காவல் மீறிக் கடைக்கு வந்துவிழுந்து- பலர்
கண்பட வாடிய மருக்கொழுந்து நீ!
மேவாதடி என்று சொன்னேன்
வேங்கையில் ஈ மொய்க்காது என்றாள்
தேவைக்கு மணம் வேண்டும் என்றேன்
திருமணம் என்று தழுவி நின்றாள் (சேர்த்து)
|
( 270 )
( 275 )
( 280 )
( 285 ) |
காடைக்காரக் குறவன் வந்து
பாடப் பாடக் குறத்தி தான்
கூடக் கூடப் பாடி ஆடிக்
குலுங்கக் குலுங்கச் சிரித்தனள்
சாடச் சாட ஒருபுறப் பறை
தகதக வென றாடினாள்
போடப் போடப் புதுப்புதுக் கை
புதுப்புதுக்கண் காட்டினாள்.
ஓடிச்சென்று மயிலைப் போல
ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே
மூடி மலர்க்கை திறந்து வாங்கி
முறிப்பும் முத்தமும் குறித்தனள்
தேடத் தேடக் கிடைப்ப துண்டோ
சிறுத்த இடுப்பில் நொடிப்புகள்
ஈடுபட்டது நேரில் முத்தழிழ்
ஏழை மக்களில் வாழ்விலே!
|
( 290 )
( 295 )
( 300 ) |
வருகின்றார் தபால்காரர்-கடிதம்
தருகின்றாரோ இல்லையோ-
வருகின்றார் தபால்காரர்!
தருகிறார் கடிதம் எனினும் அது எனக்கு
உரியதோ என் தந்தைக் குரியதோ!
வருகின்றார் தபால்காரர்!
வரும் அக் கடிதம் அவர் வரைந்ததோ
மாமியார் வரைந்த தாயினும்
திருமணாளர் வரைந்த தாயினும்
வருவதாய் இருக்குமோ இராதோ!
வருகின்றார் தபால்காரர்!
அன்பர் அவர் வருவதாயினும்
ஆடி போக்கியோ, விரைவிலோ
இன்று போதல்நூறாண்டு போகலே
அன்றி நாளைஎன்பது என் சாதலே
வருகின்றார் தபால்காரர்!
|
( 305 )
( 310 )
( 315 ) |
சுண்ணாம்பிடிக்கும்
பெண்கள்
|
மந்தையின் மாடு திரும்பையிலே-அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தி இருந்தவள் வீடு சென்றாள்-அவள்
கூட இருந்தாமரையும் மறந்தாள்!
தொந்தி மறைந்திட வேட்டி கட்டி-அவன்
தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி
இந்தா எனக்கொடுத் திட்டாண்டி-அவன்
எட்டி ஒரே முத்தம் இட்டாண்டி!
கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்-அவன்
கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்
தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னான்-அவன்
தோளை அவள்ஓடித் தேய்த்து நின்றாள்!
"கொட்டியநீரில் குளிர்ச்சி உண்டோ!-இந்தக்
கோடை படுத்திடும் நாளில்?" என்றாள்
"தொட்டியின் தண்ணீர் கொதிக்கு" தென்றான்-"நீ
தொட்ட இடத்தில் சிலிர்க்கு" தென்றான்!
|
( 320 )
( 325 )
( 330 ) |
ஓவியம் வரைந்தான்-அவன் தன்
உள்ளத்தினை வரைந்தான்!
ஒல்லிஇடை எழில் முல்லைநகை இரு
வில்லை நிகர்நுதல் செல்வியை வைத்தே
ஓவியம் வரைந்தான்!
கூவும் குயில்தனைக் கூவா திருத்திக்
கூந்தல் சரிந்தது என்றேந்தித் தருத்தி
மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி
வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித்
தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே
தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே
ஓவியம் வரைந்தான்!
|
( 335 )
( 340 )
( 345 ) |
காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான்
கணவனாக என்னை எண்ணென்று சொல்வான்
ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான்
இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான்
கோதை அடியில்தன் கை கூப்புதல் போலவும்
கொள்கை மகிழ்ந்தவள் காப்பது போலவும்
ஓவியம் வரைந்தான்!
|
( 350 ) |
|
|
|