தென்றல்
மென்காற்றும் வன்காற்றும்
|
அண்டங்கள் கோடி கோடி
அனைத்தையும் தன்ன கத்தே
கொண்டஓர் பெரும் புறத்தில்
கூத்திடுகின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச்
செய்யினும் செய்வாய்; நீஓர்
நுண்துளி அனிச்சம் பூவும்
நோகாது நுழைந்தும் செல்வாய்!
|
( 5 )
|
உன்னிடம் அமைந்திருக்கும்
உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும்
தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத்
தென்றலே உன்இன்பத்தைத்
தென்னாட்டுக் கல்லால் வேறே
எந்நாட்டில் தெரியச் செய்தாய்?
|
( 10 )
( 15 )
|
குளிர் நறுஞ் சந்தனஞ்
சார்
பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர் நறு மலரின் ஊடே
மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல
கேள்வியை அடைந்தும் நாளும்.
வளர்கின்றாய் தென்றலேஉன்
வரவினை வாழ்த்தாருண்டா?
|
( 20 )
|
உன் அரும் உருவம் காணேன்
ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச்
சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோர், அன்னை
அன்பினைக் கண்ணில் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை
இணைத்திடல் அன்பே அன்றோ?
|
( 25 )
( 30 )
|
உலைத்தீயை ஊது கின்றாய்;
உலைத்தீயீல் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும்,
மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்த
குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீபோய்
விலக்கினும், விலக்கார் உன்னை!
|
( 35 )
( 40 )
|
இழந்திட்டால் உயிர்
வாழாத
என்னாசை மலர்முகத்துக்
குழந்தையின் நெற்றி மீது
குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினைத்துக், கண்ணில்
குளிர் செய்து, மேனி எங்கும்
வழிந்தோடிக், கிலு கிலுப்பை
தன்னையும் அசைப்பாய் வாழி!
|
( 45 )
|
இருந்தஓர் மணமும், மிக்க
இனியதோர் குளிரும், கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும்
கோடையின் வெப்பத்திற்கு
மருந்தாகி அயர்வினுக்கு
மாற்றாகிப், பின்னர் வானில்
பருந்தாகி, இளங்கிளைமேல்
பறந்தோடிப் பாடு கின்றாய்!
|
( 50 )
( 55 )
|
எழுதிக் கொண்டிருந்தேன்,
அங்கே
எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ
வழக்கம் போல் இன்பம் தந்தாய்
'எழிதிய தாளை நீஏன்
கிளப்பினை' என்று கேட்டேன்
புழுதியைத் துடைத்தேன் என்றாய்
மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை!
|
( 60 )
|
கமுகொடு, நெடிய
தென்னை,
கமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை,
உனைத்தந்தாள்; தமிழைத் தந்தாள்;
தமிழ் எனக் ககத்தும், தக்க
தென்றலேநீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வதைநான்
கனவிலும் மறவேன் அன்றோ?
|
( 65 )
( 70 )
|
களிச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர்இதழ்மேல்
கூத்தாடித் துளித்தேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளையாடும்
பந்தோடு விளையாடிப், போய்க்,
கிளிச்சிறகு ஆடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்றலேநீ!
|
( 75 )
( 80 )
|
|
|
|