பக்கம் எண் :

ஆறு

நீரற்ற ஆற்றுப் பாதை

இருபக்கம் மண்மேடிட்டும்,
இடைஆழ்ந்தும், நீள மான
ஒருபாதை கண்டேன், அந்தப்
பாதையின் உள்இடத்தில்
உரிந்தநல்தாழம் பூவின்
நறும் பொடி உதிர்ந்த தைப்போல்
பெருமணல், அதன்மேலெல்லாம்
கதிரொளிப் பெருக்கம், கண்டேன்!





( 5 )



வழிப்போக்கு

மணல்சுடும்; வழிச்செல் வோர்கள்,
இறங்கியும் ஏறியும் போய்
அணைக்கரை மேட்டின் அண்டை
அடர்மர நிழலில் நின்று
தணலேறும் தம்கால் ஆற்றிக்
சாலைகண்டுஊரைக் காண்பார்.
அணிநிலம் நடுவில் ஆற்றப்
பாதை "வான் வில போல் தோன்றும்.


( 10 )




( 15 )

வெள்ளம் வருமுன்

வெப்பத்தால் வெதும்புகின்ற
வெளியெலாம் குளிர்காற்றொன்று
தொப்பென்று குதிக்க, அங்கே
துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.
எப்பக்கம் இருந்தோ கூட்டப்
பறவைகள் இப்பக்கத்துக்
குப்பத்து மரத்தில் வந்து
குந்திய புதுமை கண்டேன்.




( 20 )




வெள்ளத்தின் தோற்றம்

ஒலிஒன்று கேட்டேன், ஓஓ
புதுப்புனல்! பெரிய வெள்ளம்,
சலசல என்று பாய்ந்து
வரக்கண்டேன், தணல் நிறத்தில்
நிலவொத்த நிறம்கலந்து
நெடுவானின் சுடரும் வாங்கிப்
பொலிந்தது! கோடை யாட்சி
மாற்றிற்றுப் புரட்சி வெள்ளம்.

( 25 )




( 30 )


வெள்ளப் பாய்ச்சல்

பெருஞ்சிங்கம் அறைய வீழும்
யானைபோல் பெருகிப் பாய்ந்து
வரும்வெள்ளம், மோதலாலே
மணற்கரை இடிந்து வீழும்!
மருங்கினில் இருந்த ஆலும்
மல்லாந்து வீழும் ஆற்றில்!
பருந்து, மேற்பறக்கும்! நீரில்,
பட்டாவைச் சுழற்றும் வாளை!



( 35 )




( 40 )

வெள்ளத்தின் வரவறிதல்

கரையோரப் புலத்தில் மேயும்
காலிகள் கடமை எண்ணும்!
தரையினில் காதை ஊன்றிச்
சரிசரி புதுவெள்ளத்தின்
திரைமோதும் ஒலிதான் என்று
சிறுவர்கள் செங்கைகாட்டிப்
பெரியோரைக் கூவுகின்றார்;
பேச்சொன்றே ஒலியோ நீளம்!





( 45 )



வெள்ளத்தின் ஒளி அழகு!

இருகரை ததும்பும் வெள்ள
நெளிவினில் எறியும் தங்கச்
சரிவுகள்! நுரையோ முத்துத்
தடுக்குகள்! சுழல் மீன்கொத்தி
மரகத வீச்சு நீரில்
மிதக்கின்ற மரங்களின் மேல்
ஒருநாரை வெண்தா ழம்பூ!
உவப்புக்கோ உவமை இல்லை.


( 50 )




( 55 )

வெள்ளம் எனும் படைக்கு மரங்களின்
வாழ்த்து

ஒரேவகை ஆடை பூண்ட
பெரும்படை, ஒழுங்காய் நின்று
சரேலெனப் பகைமேல் பாயும்
தன்மைபோல் ஆற்று வெள்ளம்,
இராவெலாம் நடத்தல் கண்ட
இருகரை மரங்கள், தோல்வி
வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி
மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி!




( 60 )




உழவர் முயற்சி

ஆற்றுவெள்ளத்தைக் காணச்
சிற்றூரார் அங்கு வந்தார்!
போற்றினார் புதுவெள்ளத்தை!
புகன்றனர் வாழ்த்துரைகள்!
காற்றாகப் பறந்து சென்று
கழனிகள் மடைதிறந்து
மாற்றினார் வாய்க்காதீ! மற்றும்
வடிகாலை மறித்தார் நன்றே.

( 65 )




( 70 )


ஆற்று நடை

நோய்தீர்ந்தார்; வறுமை தீர்ந்தார்
நூற்றுக்கு நூறு பேரும்!
ஓயவின்றிக் கலப்பை தூக்கி
உழவுப்பண் பாடலானார்!
சேய்களின் மகிழ்ச்சி கண்டு
சிலம்படி குலுங்க ஆற்றுத்
தாய்நடக்கின்றாள் வையம்
தழைகவே தழைக என்றே!



( 75 )




( 80 )