பக்கம் எண் :

வான்

விண்மீன் நிறைந்த வான்

மண்மீதில் உழைப்பாரெல்லாம்
வறியராம்! உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்இ தைத், தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண்டு அந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்பளித்த
விரிவானம் பாராய் தம்பி!





( 5 )




நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை

பால்புகை முகிலைச் சீய்த்திப்
பளிச்சென்று 'திங்கட் சேவல்'
நால்திக்கும் குரல்எடுத்து
நல்லொளி பாய்ச்சிப், பெட்டை
ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப்
பொடி விண்மீன் குஞ்சுகட்கும்
மேற்பார்வை செலுத்திப், 'பூனை
இருட்டையும்' வெளுத்துத் தள்ளும்.


( 10 )




( 15 )


பகல் வானில் முகிலோவியங்கள்

பகல்வானில் கதிரின் வீச்சுப்
பரந்தது! முகிலினங்கள்
வகைவகை ஓவியங்கள்
வழங்கின: யானைக் கூட்டம்!
தகதக எனும்மாணிக்க
அருவிகள்! நீலச் சாரல்!
புகைக்கூட்டம்! எரிமலைகள்!
பொன் வேங்கை! மணிப்பூஞ்சோலை!




( 20 )




இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்

கிழக்குப்பெண் விட்டெறிந்த
கிளிச்சிறைப் பரிதிப் பந்து
செழித்தமேற் றிசைவா னத்தின்
செம்பருத்திப் பூங்காவில்
விழுந்தது! விரிவி ளக்கின்
கொழுந் தினால் மங்கை மார்கள்
இழந்ததைத் தேடிக் கொள்ள
இருள்மாற்றிக் கொடுக்கின்றார்கள்!

( 25 )




( 30 )


காலை வானம்

கோழிகூ விற்று! வையம்,
கொண்டதோர் இருளைத், தங்க
மேழியால் உழுதான் அந்த
விரிகதிர்ச் செல்வன்; பின்னர்
ஆழிசூழ் உலகின் காட்சி
அரும்பிற்று! முனைய விழ்ந்து
வாழிய வைய மென்று
மலர்ந்தது காலை வானம்!



( 35 )




( 40 )

வானவில்

அதிர்ந்தது காற்று! நீளப்
பூங்கிளை அசைந்தாடிற்று!
முதிர்ந்திட்ட முகிலின் சேறு
மூடிற்றுச் சேற்றுக் குள்ளே
புதைந்திட்ட கதிரில் பூத்த
புதுப்புது வண்ண மெல்லாம்
ததும்பிற்றே வான வில்லாய்ப்
பாரடி அழகின் தன்மை!





( 45 )



-

மழைவான்

பகல்வான்மேல் கருமுகில்கள்
படைஎடுத் தன! வில்லோடு
துகளற்ற வாளும், வேலும்
சுழன்றன மின்னி மின்னி!
நகைத்தது கலகலென்று
நல்ல கார்முகில்தான்! நெற்றி
அகத்துற்ற இயற்கைப் பெண்ணாள்
இறைத்தாள் பூ மழையை அள்ளி!


( 50 )





( 55 )


எரிகின்ற வானம்

தேன்செய்யும் மலரும் தீயும்!
செந்தீவும் நீறாய்ப் போகும்!
கான், செய், ஊர், மலை, காடு, ஆறு
கடலெல்லாம் எரிவதோடு
தான் செய்த தணலில் தானும்
எரிகின்றான் பகலோன்! அங்கு
வான்செய்த வெப்பத்தால்இவ்
வையத்தின் அடியும் வேகும்!




( 60 )




உச்சிப் போதுக்கும் மாலைப் போதுக்கும்
இடைநேரம்

உச்சியில் இருந்த வெய்யோன்,
ஓரடி மேற்கில் வைத்தான்,
நொச்சியின் நிழல்கிழக்கில்
சாய்ந்தது! நுரையும், நீரும்,
பச்சையும், பழுப்புமான
பலவண்ண முகில்கள் கூடிப்
பொய்ச்சான்று போல, யானை
புகலும்; பின் மலையைக் காட்டும்.

( 65 )




( 70 )


வான் தந்த பாடம்

எத்தனை பெரிய வானம்!
எண்ணிப்பார் உனையும் நீயே;
இத்தரை, கொய்யாப் பிஞ்சு;
நீஅதில் சிற்றெறும்பே
அத்தனை பேரும் மெய்யாய்
அப்படித்தானே மானே?
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள்தாம் பேசல் என்னே!



( 75 )




( 80 )