பக்கம் எண் :

தமிழ்

முதலில் உண்டானது தழிழ்

புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே "புதிய நாளை"
மனிதப் பைங்கூழ்முளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற்மிழே நீதான்
எழுப்பினை! தழிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்ததன்றோ?






( 5 )



இசை, கூத்தின் முளை

பழந்தழிழ் மக்கள் அந்நாள்
பறவைகள் விலங்கு, வண்டு,
தழைமூங்கில் இசைத்ததைத், தாம்
தழுவியே இசைத்ததாலே
எழும்இசைத் தழிழே! இன்பம்
எய்தியேகுதித்த தாலே
விழியுண்ணப் பிறந்த கூத்துத்
தமிழே!என் வியப்பின் வைப்பே!



( 10 )




( 15 )

இயற்றமிழ் எழில்

அம்மாஎன்றழைத்தல், காகா
எனச்சொல்லல், அஃகென்று ஒன்றைச்
செம்மையிற் சுட்டல் என்னும்
இயற்கையின் செறிவினாலே
இம்மாநிலத்தை ஆண்ட
இயற்றமிழோன் அன்பே!
சும்மாதான் சொன்னார் உன்னை
ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே





( 20 )




தமிழர்க்கும் தமிழ், உயிர்

வளர்பிறை போல் வளர்ந்த
தமிழரில் அறிஞர் தங்கள்,
உளத்தையும், உலகின் ஆர்ந்த
வளத்தையும் எழுத்துச் சொல்லால்,
விளக்கிடும் இயல்முதிர்ந்தும்,
வீறுகொள் இசை யடைந்தும்,
அளப்யிலா உவகை ஆடல்
தமிழேநீ என்றன் ஆவி!


( 25 )




( 30 )


சாகாத்தமிழ்

படுப்பினும் படாது, தீயர்
பன்னாளும் முன்னேற்றத்தைத்
தடுப்பினும், தமிழர் தங்கள்
தலைமுறை தலைமுறைவந்து
அடுக்கின்ற தமிழே! பின்னர்
அகத்தியர் காப்பியர்கள்
கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக்
கிளைதொத்தும் கிளியே வாழி!



( 35 )




( 40 )

கலைகள் தந்த தமிழ்

இசையினைக் காணு கின்றேன்;
எண் நுட்பம் காணு கின்றேன்
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க்கின்றேன்; ஓவியங்கள்
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண்கின்றேன்.





( 45 )



முன்னூலில் அயலார் நஞ்சம்

பன்னூறு நூற்றாண்டாகப்
பழந்தமிழ் மலையின் ஊற்றாய்
மன்னரின் காப்பினாலே,
வழிவழி வழாது வந்த
அன்னவை காணுகின்றேன்
ஆயினும் அவற்றைத் தந்த
முன்னூலை, அயலான், நஞ்சால்
முறித்ததும் காணுகின்றேன்!


( 50 )




( 55 )

பகைக்கஞ்சாத் தமிழ்

வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப்,பின் தெற்கில் வந்தே
இடக்கினைச் செயநினைத்த
எதிரியை, அந்நாள் தொட்டே
"அடக்கடா" என்றுரைத்த
அறங்காக்கும் தமிழே! இங்குத்
தடைக்கற்கள் உண்டென்றாலும்
தடந்தோளுண்டெனச் சிரித்தாய்!



( 60 )





( 65 )

வெற்றித் தமிழ்

ஆளுவோர்க் காட்பட் டேனும்,
அரசியல் தலைமை கொள்ள
நாளுமே முயன்றார் தீயோர் :
தமிழேநீ நடுங்க வில்லை!
"வாளினை எடுங்கள் சாதி
மதம்இல்லை! தமிழர் பெற்ற
காளைகாள என்றாய்; காதில்
கடல்முழக்கத்தைக் கேட்டாய்!





( 70 )



படைத் தமிழ்

இருளினை வறுமை நோயை
இடறுவேன்: என்னுடல்மேல்
உருள்கின்ற பகைக்குன்றைநான்
ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ
கருமான்செய் படையின் வீடு!
நான்அங்கோர் மறவன்! கன்னற்
பொருள்தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு; நானோர் தும்பி!


( 75 )




( 80 )