கண்ணன் பாட்டு
கண்ணம்மா -- என் காதலி
பின்னே வந்து நின்று கண் மறைத்தல்
(நாதநாமக்கிரியை-ஆதிதாளம். சிருங்கார ரசம்.)
|
மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே
வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வானவளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல்கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சுசெலுத்தி,
நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.
|
1
|
ஆங்கப்
பொழுதிலென் பின்புறத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்மறைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டியறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன்,
ஓங்கி வருமுவகை யூற்றிலறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டிலறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடிகண்ணம்மா,
மாய மெவரிடத்தில்?’ என்றுமொழிந்தேன்.
|
2
|
சிரித்த
ஒலியிலவள் கைவிலக்கியே,
திருமித் தழுவி, “என்ன செய்திசொல்” என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்னகண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்னகண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்னகண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்னகண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி” என்றாள்.
|
3
|
“நெரித்த
திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.” |
4 |