மேதினிக்குச்
சேசு நாதர் எதற்கடி தோழி -- முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா--அவர்
காதினிக்கும்படி சொன்னசொல் ஏதடி? தோழி -- அந்தக்
கர்த்தர் உரைத்தது புத்தமுது என்றறி தோழா -- அந்தப்
பாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி -- இந்தப்
பாரதநாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா -- இவர்
ஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை தோழி -- இங்கு
ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா.
ஏசுமதத்தினில் இந்துக்கள் ஏனடி? தோழி -- அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா -- மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி -- அட
முன் -- மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா -- அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி -- சட்டம்
நால் வருணத்த்ினில் நாலாயிரம் சாதி தோழா -- ஏசின்
ஆசை மதம்புகப் பேதம் அகன்றதோ? தோழி -- அவர்க்கு
அங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள் தோழா.
ஃ
ஃ ஃ
சொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி? தோழி -- அந்தத்
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா -- அந்தப்
புல்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்? தோழி -- அதைப்
போதாக் குறைக்குமுப் போகம் விளைத்தனர் தோழா -- அடி
எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர்? தோழி -- அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா -- முன்பு
வல்லவர் சேசு வகுத்ததுதான் என்ன? தோழி -- புவி
'மக்கள் எல்லாம் சமம்' என்று முழக்கினர் தோழா.
ஈண்டுள்ள தொண்டர்கள் என்னசெய்கின்றனர்தோழி -- அவர்
ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர் தோழா -- அடி
வேண்டவரும் திருக் கோயில் வழக்கென்ன? தோழி -- அட
மேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர் தோழா -- விரல்
தீண்டப்படாதவர் என்பவர் யாரடி? தோழி -- இங்குச் சேசு மதத்தினை தாபித்த பேர்கள் என் தோழா -- உளம்
தூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி? தோழி -- அவர்
'சோதரர் யாவரும்' என்று முழங்கினர் தோழா.
பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன? தோழி -- இவை
பாரதநாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா -- இங்குக்
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி -- ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளிமுளைத்திடும் தோழா -- இங்கு
நெஞ்சினிற்சேசுவின்தொண்டர்நினைப்பென்ன தோழா -- தினம்
நேர்மையில் கோயில்வி யாபாரம் செய்வது தோழா -- இந்த
வஞ்சகர்க்கென்ன வழுத்தினர் சேசு நல் தோழி -- இன்ப
வாழ்க்கையடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார்
நாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு? தோழி -- அங்கு
நல்ல மரத்தினிற் பொம்மை அமைத்தனர் தோழா -- அந்த
ஆலயம் சாமி அமைத்தவர் யாரடி? தோழி -- மக்கள்
அறிவை இருட்டாக்கி ஆளநினைப்பவர் தோழா -- மக்கள்
மாலைத் தவிர்த்து வழிசெய்வரோ இனித் தோழி -- செக்கு
மாடுகளாக்கித்தம் காலைச்சுற்றச் செய்வர் தோழா -- அந்தக்
கோலநற் சேசு குறுத்துதா னென்ன? தோழி -- ஆஹா
கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா.
ஃ
ஃ ஃ
ஆண்மைகொள் சேசு புவிக்குப் புரிந்ததென்? தோழி -- அவர்
அன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர் தோழா -- அந்தக்
கேண்மைகொள் சேசுவின்கீர்த்தி யுரைத்திடு தோழி -- அவர்
கீர்த்தியுரைத்திட வார்த்தை கிடைக்கிலை தோழா -- நலம்
தாண்டவம் ஆடிடச் செய்தவரோ அவர்? தோழி -- அன்று
தன்னைப் புவிக்குத் தரும் பெருமானவர் தோழா -- அந்த
ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத்தக்கவர் யாவர் -- எனில்
'அன்னியர்' 'தான்' என்ற பேதமிலாதவர் தோழா. |
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 ) |