பக்கம் எண் :

138கவிமணியின் கவிதைகள்

Untitled Document
கோதிலாச் சுதந்தி ரத்தால்
     குணம்பெறா தென்றும் நாட்டில்
வாதினைப் பெருக்கிச் சண்டை
     வளர்ப்பவர் செய்கை, அம்மா!

112. உழைக்க வேண்டும்
903 மன்னும் சுதந்திரத்தை - நாட்டில்
     மக்கள் அடைந்தவுடன்
பொன்னை மழையாக - வானம்
     பொழிந்து கொட்டிடுமோ?

904 பாலை சோலையாகிக் - கனிகள்
     பழுத்து தீர்ந்திடுமோ?
சேலை சேலையாகப் - பருத்திச்
     செடிகள் காய்த்திடுமோ?

905 ஆக்கம் வேண்டு மெனில் - நன்மை
     அடைய வேண்டுமெனில்
ஊக்கம் வேண்டுமப்பா! - ஓயாது
     உழைக்க வேண்டுமப்பா!

906 உண்ணும் உணவுக்கும் - இடுப்பில்
     உடுக்கும் ஆடைக்கும்
மண்ணில் அந்நியரை - நம்பி
     வாழ்தல் வாழ்வாமோ?

907 நெற்றியின் வியர்வை - நிதமும்
     நிலத்தில் வீழ்ந்திடிலே
சற்றும் வாடாமல் - சுதந்திரம்
     தழைத்து வருமப்பா!

908 ஜாதிச் சண்டையெலாம் - ஓய்ந்து
     தணிய வேண்டுமப்பா!
நீதி நாடெங்கும் - நிலைத்து
     நிற்க வேண்டுமப்பா!

909 உலக மக்களெல்லாம் - அன்போடு
     ஒரு தாய் மக்களைப் போல்
கலக மின்றிவாழும் - காலம்
     காண வேண்டுமப்பா!