பக்கம் எண் :

=காகிதங்கள்

நான் துயில்கிறேன்.

நீ வருகிறாய்; வாரி அணைக்கிறேன்
ஒரு மல்லிகை மாலையைப் போல்
உன்னை எடுத்துப் படுக்கையில் வைக்கிறேன்.
உன் பக்கம் வந்து அமர்கிறேன்.
அப்போது
யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்கிறது.
விழித்து விடுகிறேன்..
என் இனிய கனவு கலைந்து விட்டதே
என்று கோபம் கொள்கிறேன்.
வேண்டுமென்றே
கதவைத் திறக்காமல் இருக்கிறேன்.
இரண்டு மூன்று முறை வெளியே
முயற்சி நடக்கிறது;
தோல்வியில் முடிகிறது.

சிறிது நேரம் சென்று
சாளரத்தின் வழியாகப் பார்க்கிறேன்;
தூரத்தில் போய்க்கொண்டிருக்கும் உருவம்,
உன்னுருவமாக இருக்கக்கண்டு
அதிர்ச்சியடைகிறேன்.

கனவில் வந்த நீ
கனவு கலைந்ததால்
போய்க் கொண்டிருக்கிறாயா?
அல்லது
நான் கனவில் மூழ்கியிருக்கிறேன் என்று
நனவில் வந்த நீ திரும்பிப் போகிறாயா?

நான் குழப்பமடைகிறேன்.

71