பக்கம் எண் :

19

முன்னுரை

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்.

இலக்குமி அம்மாளும் எஸ்.மீனாட்சி சுந்தரமும் என் மாதா
பிதாக்கள்.

புரட்சிக் கவிஞர்பாவேந்தர் பாரதிதாசன் என்குரு. மகாகவி பாரதி
என் தெய்வம்.

என் குருவின் மூலமே என் தெய்வத்தை தரிசித்தேன்.
பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசன்
ஆனேன்.

பாவேந்தரை ஒரே ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன். சிவகங்கை
அரசர் பள்ளிக்குதிரு. நாராயணன் சேர்வை தலைமை ஆசிரியராய்
இருந்தபோது வந்திருந்தார். நான் அப்போது மன்னர் கல்லூரி
மாணவன்.

பாவேந்தர் பேச்சைக் கேட்கப் பள்ளிக்குப் போனேன். பாவேந்தர்
பேசினார். இராசகம்பீரத்தோடு பேசினார். தமிழ் உணர்ச்சி பொங்கி
வழிந்தது. மொழிப் பற்றும் இனப்பற்றும் மேலோங்க முரசறைந்தது
போல் இருந்தது.

இராமநாதபுரத்தில் பள்ளியில் படிக்கும் போதே அவரைப் படித்து
மயங்கி நான் அவர் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டிருக்கிறேன்.
அந்த வாய்ப்பு சிவகங்கையில் கிடைத்தது. கூட்டம் முடிந்ததும்
அவரை உணவுண்ண அழைத்துச் சென்றார்கள். அவருக்கு வணக்கம்
தெரிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசவேண்டும் என்ற எண்ணம்
எழுந்தது. ஆனால் என் கூச்ச சுபாவம் அவரை நெருங்கவிடவில்லை.