| ‘‘பயலுக்கு என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் காரிலிருந்து இறக்கி விட்டுடணும்னு ஆசை. முடியல்லே...’’ கோபத்தோட சிரித்துக் கொண்டே சொன்னான் முத்துக்குமரன். நல்ல வேளையாக அப்போது மாதவியே காரை ஓட்டிக் கொண்டு வந்ததனால் அவர்கள் இருவரும் சுதந்திரமாகப் பேசிக் கொண்டு போக முடிந்தது. பினாங்கு அப்துல்லாவின் அறையில் இவர்கள் போகிற போது நாலைந்து விசிட்டர்கள் இருந்தார்கள். இவர்களையும் வரவேற்று உள்ளே அமரச் செய்து கொண்டார் அவர். ‘‘கோபால் என்னை நைட் டின்னருக்குத்தானே ‘இன்வைட்’ பண்ணினாரு! எட்டரை மணிக்கு வந்தாப் போதாது? இப்ப ஆறரை மணிதானே ஆகுது?’’ என்று கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே பேச்சை இழுத்தார் அப்துல்லா. மாதவி அவருக்கு மறுமொழி கூறினாள்: ‘‘இப்பவே வந்திட்டீங்கன்னாக் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்திட்டு அப்புறம் சாப்பிடலாம்னு பார்க்கிறார். பேசிக்கிட்டிருந்தா நேரம் போறதே தெரியாது. நிமிஷமா மணி எட்டரை ஆயிடும்.’’ ‘‘ரியலி அன்னிக்கி உங்க நடிப்பு பிரமாதமா இருந்திச்சு. மலேயாவிலே உங்களுக்கு ரொம்ப நல்ல பேரு கிடைக்கும்’’ என்று மாதவியை அவள் வெட்கப்படுகிற அளவுக்கு நேரே முகத்துக்கு எதிரே புகழத் தொடங்கினார் அப்துல்லா. ஏற்கனவே இருந்த விசிட்டர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுச் சென்றனர். முத்துக்குமரனை அருகில் வைத்துக் கொண்டே தன்னை மட்டும் அவர் புகழ்வதை விரும்பாமல் கூச்சமடைந்த மாதவி, |