பக்கம் எண் :

124என் சரித்திரம்

மென்றால் சம்பந்திச் சண்டையும் ஒரு நிகழ்ச்சியாக ஏற்பட்டு விட்டது.

கிராமத்தாருடைய ஒற்றுமையும் உபகார சிந்தையும் கல்யாணத்தைப்
போன்ற விசேஷ காலங்களில் நன்றாக வெளிப்படும். பணச் செலவு இந்தக்
காலத்திற்போல அவ்வளவு அதிகம் இராது. இக்காலத்திற் செலவுகளுக்குப்
புதிய புதிய துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவு வகைகளில் இப்போது
நடைபெறும் செலவைக் கொண்டு அக்காலத்திலும் கல்யாணங்கள் பலவற்றை
நடத்தி விடலாம். கிராமங்களில் விளையும் காய்கறிகளும், பழவகைகளும்
விருந்துக்கு அக்காலத்தில் உபயோகப்பட்டன. இப்போதோ, இங்கிலீஷ்
பெயரால் வழங்கும் காய்கறிகளும், ஹிந்துஸ்தானிப் பெயரால் வழங்கும் பக்ஷிய
வகைகளும் மேல் நாட்டிலிருந்து தகரப் பெட்டிகளில் அடைத்து வரும்
பழங்களும் கல்யாண விருந்துக்கு இன்றியமையாத பொருள்களாகி விட்டன.
மற்ற விஷயங்களில் பல தேச ஒற்றுமை தெரியாவிட்டாலும் பணம் செலவிட்டு
வாங்கும் பொருள்களில் பல நாடுகளும் சம்பந்தப்படுகின்றன.

ஊர்வலம் நடத்துவதில் எத்தனை செலவு! மோட்டார் வாகனத்தையே
புஷ்ப வாகனமாக மாற்றி விடுகின்றனர்! சில மணி நேரம் புறத் தோற்றத்தை
மாத்திரம் தரும் அந்த வாகனத்திற்கு எவ்வளவு அலங்காரங்கள்! எவ்வளவு
பேருடைய உழைப்பு! கோவில்களில் உத்ஸவ மூர்த்திகளுக்குச் செய்யும்
புஷ்பாலங்காரம் கல்யாணத்திற் செய்யப்படுகின்றது! அதற்கு மேலும்
செய்கிறார்கள்.

இவ்வளவு செலவு செய்து நடைபெறும் கல்யாணத்தில் விருந்தினர்கள்
வருவதும் போவதும் வெறும் சம்பிரதாயமாகி விட்டன. கல்யாணம் எல்லாம்
நிறைவேறிய பிறகு கணக்குப் பார்க்கும்போது தான் வயிறு பகீரென்கிறது.
சந்தோஷத்தை மேலும் மேலும் உண்டாக்க வேண்டிய கல்யாணமானது சில
இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு செய்யும் பணச் செலவு காரணமாகக்
கடனையும் அதனால் துன்பங்களையும் விளைவிக்கின்றது. கல்யாணத்தாற்
கஷ்டத்தை விலைக்கு வாங்கிக் கொண்ட குடும்பங்கள் இத்தமிழ் நாட்டில்
எவ்வளவோ இருக்கின்றன.

அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள்
நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும்.
மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும்
பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தக்ஷணை, மேளம்
முதலிய செலவுகளில்