பக்கம் எண் :

என்ன புண்ணியம் செய்தேனோ 187

சம்பந்தமான வரலாறுகளையும் சொல்வார். பல தனிப் பாடல்களைச்
சொல்வார். இன்னும் சந்தர்ப்பத்திற்கேற்ற பல விஷயங்களை இடையிடையே
எடுத்துரைப்பார். அவைகளெல்லாம் மிகவும் உபயோகமுள்ள செய்திகளாகவே
இருக்கும். நாங்கள் கேட்ட பாடங்களைச் சிந்திக்கும்போதுகூட அவர்
அருகிலேயே இருப்போம். அவர் எங்களிடம் அன்போடு பேசுவதும் எங்கள்
சௌகரியங்களை அடிக்கடி விசாரிப்பதும் எங்கள் உள்ளத்தைப் பிணித்தன.

உள்ளன்பு

ஒவ்வொரு நாளும் நான் சாப்பிட்டு வந்தவுடன், “சாப்பிட்டாயிற்றா?
ஆகாரம் சௌகரியமாக இருந்ததா?” என்று விசாரிப்பார். எண்ணெய்
தேய்த்துக் கொள்ளும்படி வற்புறுத்துவார். ஒரு நாள் பிள்ளையவர்கள் தாம்
எண்ணெய் தேய்த்துக் கொள்ள எண்ணி எண்ணெயை வருவித்தார். அப்போது
அருகிலிருந்த என்னைப் பார்த்தார். “உமது முகம் தெளிவாக இல்லையே; கண்
சிவந்திருக்கிறதே. எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்” என்று எண்ணெயும்
கொடுத்தார். உடனே நான் சென்று எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம்
செய்து போஜனம் பண்ணிவிட்டு வந்தேன். பிள்ளையவர்கள் அப்போது
என்னைப் பார்த்தவுடனே அருகிலிருந்த ஒருவரிடம் “இப்போது எப்படி
இருக்கிறது இவர் முகம்? தெளிவாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டனர். என்
முகத்தில் இருந்த தெளிவு என்னைக் காட்டிலும் அவருக்கு அதிகமான
மகிழ்ச்சியை உண்டாக்கியது.

எனக்கு ஏதேனும் வேண்டுமென்று தெரிந்தால், உடனே அவர் வாங்கிக்
கொடுப்பார். நான் சாப்பிட்டு வருவதற்கு நேரமானால், “இன்னும்
வரவில்லையே?” என்று கவலையோடு இருப்பார். இராத்திரி வேளைகளில்
அக்கவலை அதிகமாக இருக்கும்; தெருத் திண்ணையில் அமர்ந்தபடியே என்
வரவை எதிர்பார்த்திருப்பார். “ஏன் இவ்வளவு நேரம்? கவலையாக இருந்தது”
என்று உள்ளன்போடு விசாரிப்பார். இத்தகைய செயல்களால் நான் அவரது
அன்பை அறிந்து உருகினேன். அந்த அன்பிலே நனைந்து தமிழமுதத்தை
உண்டு வந்தமையால் என் தாய் தந்தையரைப் பிரிந்திருப்பதனால் உண்டான
துயரம் நீடிக்கவில்லை. பிள்ளையவர்களைப் பிரிந்திருக்க நேருமாயின் அதுவே
கஷ்டமாக இருக்குமென்று தோன்றியது.

கோபால கிருஷ்ண பாரதியாரிடம் சென்று சங்கீத அப்பியாசம் செய்யும்
நேரம், உணவு கொள்ளும் நேரம் ஆகிய சமயங்கள் தவிர