பக்கம் எண் :

202என் சரித்திரம்

“என்னவோ, அநாதையைப்போலத் தனியே விட்டுவிட்டோம்.
ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தழுதழுத்த குரலில் என்
அன்னையார் கூறினபோது அவருடைய ஹிருதயத்திலிருந்த துக்கத்தின் வேகம்
என்னையும் தாக்கியது; என் கண்களில் அதன் அடையாளம் தோற்றியது.

அன்புப் பிணைப்பு

புண்ணியாஹவாசனம் நடைபெற்றது. அதன் பின்பும் சில நாட்கள்
அங்கே இருந்தேன். “குழந்தை அங்கே தனியாக இருக்கிறான். வாய்க்கு
வேண்டியதைத் தருவதற்கு யார் இருக்கிறார்கள்? ஏதாவது பக்ஷணம்
பண்ணிக்கொடுங்கள்” என்று என் தாயார் கூற, அங்கிருந்த ஒவ்வொரு நாளும்
விதவிதமான சிற்றுண்டிகளை வீட்டிலுள்ளவர்கள் செய்து கொடுத்தார்கள். நான்
உண்டேன். என்னிடம் பிள்ளையவர்கள் வைத்துள்ள அன்பைக் குறித்து நான்
விரிவாகச் சொன்னேன். அதைக் கேட்டபோது என் தாயாருக்கும்
மற்றவர்களுக்கும் ஆறுதல் உண்டாயிற்று.

என் பாட்டனார் பிள்ளையவர்களைப்பற்றி விசாரித்தார். அவருடைய
சிவ பக்தியையும் பாடம் சொல்லும் ஆற்றலையும் அவர் கேட்டு மகிழ்ந்தார்.
அவரியற்றிய சிவோத்கர்ஷத்தை விளக்கும் பாடல்களைச் சொல்லிக்
காட்டினேன். நான் சொன்ன விஷயங்களெல்லாம் பாட்டனாருக்கு மிக்க
ஆச்சரியத்தை விளைவித்தன.

சூரிய மூலைக்குச் சென்றபோது என் தாயாரையும் தந்தையார்
முதலியோரையும் குழந்தையையும் பார்த்த மகிழ்ச்சியிலே சில நாட்கள்
பதிந்திருந்தேன். தினந்தோறும் தவறாமல் தமிழ்ப்பாடம் கேட்டு வரும்
பழக்கத்தில் ஊறியிருந்தவனாகிய எனக்கு அப்பழக்கம் விட்டுப் போனதனால்
ஒருவிதமான குறை சிறிது சிறிதாக உறைக்கத் தொடங்கியது. தமிழ்ப்பாடம்
ஒருபுறம் இருக்க, பிள்ளையவர்களைப் பிரிந்திருப்பதில் என் உள்ளத்துக்குள்
ஒரு விதமான துன்பம் உண்டாகியிருப்பதை உணர்ந்தேன். தாயார் தகப்பனார்
முதலியவர்களோடு சேர்ந்திருப்பதனால் உண்டாகிய சந்தோஷ உணர்ச்சியி
னூடே அந்தத் துன்ப உணர்ச்சி தலைகாட்டியது. இப்புதிய அனுபவத்தில்
எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது: “ஆண்டவன் என் ஆசிரியர்
உள்ளத்திற்கும் என் உள்ளத்திற்கும் மிகவும் நுண்மையான பிணைப்பை
அன்பினால் உண்டாக்கிவிட்டான். அப்பிணைப்பு என்னை அறியாமலே
என்னைக் கட்டுப்படுத்திவிட்டது! அவர் எனக்காகப் பிரார்த்திக்கிறார். நான்
என் தாயார் அருகிலிருந்தும் அவரருகில் இல்லாத குறையை உணர்கிறேன்”
என்பதுதான் அது. “இந்த அன்பு நிலைத்திருக்க வேண்டும்” என்று அந்தரங்க
சுத்தியோடு நான் பிரார்த்தித்தேன்.