பக்கம் எண் :

214என் சரித்திரம்

பெருமையின் விரிவு

பிள்ளையவர்களின் பெருமையை நான் முன்பு கேள்வியால்
உணர்ந்திருந்தேன். அவரிடம் வந்து சேர்ந்தபின், அவரது பெருமையை நன்கு
உணர்ந்தேன்; முற்றும் உணர்ந்துவிட்டதாக ஓர் எண்ணம் இருந்தது. அது
பிழை என்று அப்போது என் மனத்திற் பட்டது. திருவாவடுதுறையில் அந்தத்
துறவரசாகிய சுப்பிரமணிய தேசிகர் அவ்வளவு வித்துவான்களுக்கிடையில் என்
ஆசிரியர் இல்லாததை ஒரு பெருங்குறையாக எண்ணினார். மகா
வைத்தியநாதையர் தேவார திருவாசகங்களோடு என் ஆசிரியர் வாக்கையும்
மேற்கோளாகக் காட்டிப் பொருள் கூறினார் என்ற இச்செய்திகளும்,
பிள்ளையவர்களிடத்தில் தேசிகர் அன்பு காட்டிய முறையும், “நான்
பிள்ளையவர்கள் பெருமையை இன்னும் நன்றாக உணர்ந்துகொள்ளவில்லை”
என்பதைப் புலப்படுத்தின.

வித்துவான்களுக்கிடையே கம்பீரமாக வீற்றிருந்து இன்மொழிகளால் என்
ஆசிரியரைப் பாராட்டும் தேசிகருடைய தோற்றத்தில் நான் ஈடுபட்டேன்.
அவருடைய பாராட்டுக்கு உரிய என் ஆசிரியரது பெருமையைப் பின்னும்
விரிவாக உணர்ந்து வியந்தேன்; அவ்விருவருடைய பழக்கமும் பெறும்படி
வாய்த்த என் நல்வினையை நினைந்து உள்ளம் குளிர்ந்தேன்.

அத்தியாயம்-36

எல்லாம் புதுமை

நான் சுப்பிரமணிய தேசிகரது தோற்றத்திலும் பேச்சிலும் ஈடுபட்டு
இன்பமயமான எண்ணங்களில் ஒன்றியிருந்தபோது தேசிகர் என்னை நோக்கி
அன்புடன், “இப்படி முன்னே வாரும்” என்று அழைத்தார். நான் அச்சத்துடன்
சிறிது முன்னே நகர்ந்தேன். “சந்நிதானம் உம்மைப் பரீக்ஷை செய்யவும் கூடும்”
என்று ஆசிரியர் மாயூரத்திலிருந்து புறப்படும்போது சொன்னது ஞாபகத்திற்கு
வந்தது. “சிறந்த அறிவாளியும் உபகாரியும் எல்லா வகையிலும் பெரு
மதிப்புடையவருமாகிய சுப்பிரமணிய தேசிகர் நம்மைப் பரீக்ஷித்தால் நாம்
தக்கவாறு பதிலுரைப்போம்” என்ற தைரியம் இருந்தது; அவருடைய மனத்தில்
நல்ல அபிப்பிராயத்தை உண்டு பண்ண வேண்டுமென்ற ஆவலும் இருந்தது.
அதனால் தேசிகர் என்னை முன்னுக்கு வரச்சொன்னபோது உண்மையில் நான்
‘முன்னுக்கு வந்த’ தாகவே எண்ணினேன்.