பக்கம் எண் :

எனக்குக் கிடைத்த பரிசு 225

மகிழ்ந்த தேசிகர் ஆசிரியரை நோக்கி, “இவரைச் சங்கீத அப்பியாசமும்
பண்ணிக் கொண்டு வரும்படி சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

இவ்வாறு சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் அன்பு வைத்துப்
பேசியதையும் புஸ்தகங்களைக் கொடுத்ததையும் கண்ட என் ஆசிரியருக்கு
அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. அதனை அவர் முகம் நன்கு
புலப்படுத்தியது.

‘இங்கே வந்து விடவேண்டும்’

அப்பால் தேசிகர் பிள்ளையவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி,
“இன்று நீங்கள் வந்தமையால் காலை முதல் தமிழ் சம்பந்தமான
சம்பாஷணையிலேயே பொழுது போயிற்று. நமக்கு மிகவும் திருப்தியாக
இருக்கிறது. தம்பிரான்களுக்கும் அளவற்ற சந்தோஷம். அவர்களெல்லோரும்
தொடர்ந்து தமிழ் நூல்களைப் பாடங் கேட்க வேண்டுமென்ற
ஆவலுடையவர்களாக இருக்கிறார்கள். வேறு சிலரும் பாடங் கேட்கச் சித்தமாக
இருக்கின்றனர் ஏதோ நமக்குத் தெரிந்ததை நாம் சொல்லி வருகிறோம்.
அதுவும் எப்போதும் செய்ய முடிவதில்லை. ஆதீன காரியங்களைக் கவனிக்க
வேண்டியிருக்கிறது. பிரபுக்களும் வித்துவான்களும் அடிக்கடி வருகிறார்கள்;
அவர்களோடு சம்பாஷணை செய்து வேண்டியவற்றை விசாரித்து
அனுப்புவதற்கே பொழுது சரியாகப் போய்விடுகிறது. ஆதலால் இவர்களுடைய
தாகத்தைத் தணிப்பதற்கு நம்மால் முடிவதில்லை. நீங்கள் இங்கே வந்திருந்து
பாடம் சொல்ல ஆரம்பித்தால் எல்லோருக்கும் திருப்தியாக இருக்கும்.
உங்களுடைய சல்லாபத்தால் நமக்கும் சந்தோஷமுண்டாகும். தவிர இவ்விடம்
வருவோர்களிற் பலர். ‘பிள்ளையவர்கள் எங்கே யிருக்கிறார்கள்?” என்று
விசாரிக்கிறார்கள். நீங்கள் மாயூரத்தில் இருப்பதாகச் சொல்லுவதற்கு நமக்கு
வாய் வருவதில்லை. இந்த ஆதீனத்துக்கே சிறப்பாக இருக்கும் உங்களை
இங்கே இருந்து பாடஞ் சொல்லும்படி செய்வது நமது கடமையாக இருக்க.
மாயூரத்திலிருக்கிறார்களென்று சொல்வது உசிதமாகத் தோற்றவில்லை.
வருகிறவர்களில் மாயூரம் வரக் கூடியவர்கள் வந்து உங்களைப் பார்த்துச்
செல்லுகிறார்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்கவில்லையே என்ற குறையுடன்
சென்று விடுகிறார்கள். ஆகையால் நீங்கள் இனிமேல் உங்கள் மாணாக்கர்
களுடன் இங்கேயே வந்துவிட வேண்டியது தான்” என்றார்.

பிள்ளையவர்கள், “சந்நிதானத்தின் திருவுளப் பாங்கின்படியே
நடப்பதுதான் அடியேனுடைய கடமை” என்று கூறினார்.