பக்கம் எண் :

234என் சரித்திரம்

உமியையும் கல்லையும் மெல்லுவதற்கு அந்த இரவு முழுவதும்
வேண்டியிருக்குமென்பது எனக்கல்லவா தெரியும்?

“எப்படி இருந்தன?”

“இந்த மாதிரி எங்கும் கண்டதில்லை.”

“எல்லோரும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். இதற்கு முன்
ஒழுங்கீனமாக இருந்தது. நாம் வந்த பிறகு திருத்தங்கள் செய்ய
ஆரம்பித்தோம். எல்லாம் கவனிப்பவர் கவனித்தால் நன்றாகத் தானிருக்கும்,
நிர்வாகமென்றால் லேசானதா?”

தம்பிரான் தம்மைப் புகழ்ந்து கொண்டபோது, “இன்னும் இவர் தம்
பிரதாபத்தை விவரிக்கத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது!” என்ற பயமும்,
மெல்ல முடியாமல் வாயில் அடக்கி வைத்துக்கொண்டிருந்த கற்களை
ஆலயத்துக்கு வெளியே துப்ப வேண்டுமென்ற வேகமும் என்னை உந்தின.

“பிள்ளையவர்கள் நான் வரவில்லையென்று காத்திருப்பார்கள். போய்
வருகிறேன். விடை தரவேண்டும்” என்று நான் சொல்ல, “சரி,
பிள்ளையவர்களிடம் போய் எல்லாவற்றையும் சொல்லும். அவர்களுக்கும் ஒரு
நாள் பிரசாதங்களை அனுப்புவதாக எண்ணியிருக்கிறோம்” என்று அவர்
கூறினார்.

“இந்தத் தண்டனை அவர்களுக்கு வேண்டாமே” என்று மனத்துக்குள்
சொல்லிக்கொண்டு நான் வந்துவிட்டேன். தம்பிரானிடம் நான் பேசியதைக்
கவனித்த காரியஸ்தர் மீண்டும் உயிர் பெற்றவர் போலவே மகிழ்ச்சியுற்றார்.

பிள்ளையவர்களிடம் வந்தவுடன் “சாப்பிட்டீரா? இங்கெல்லாம் உமக்கு
ஆகாரம் திருப்தியாக இராது” என்று அவர் சொன்னார். நான் நிகழ்ந்ததைச்
சொல்லாமல், “போதுமானது கிடைத்தது” என்று சொல்லி விட்டுப் பாடம்
கேட்கத் தொடங்கினேன்.

அத்தியாயம்-39

யான் பெற்ற நல்லுரை

மறுநாள் காலையில் நாங்கள் திருவிடைமருதூரை விட்டுப்
புறப்பட்டோம். பட்டீச்சுரத்திற்குக் கும்பகோணத்தின் வழியாகவே