பக்கம் எண் :

240என் சரித்திரம்

என்பதே அச்செய்யுள். அதில் யமகம் இல்லை; திரிபு இல்லை; அரிய
சைவ சித்தாந்த சாஸ்திரக் கருத்தும் இல்லை. ஆனாலும் எளிய நடையும்,
அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் பொருளும் உள்ளன.
செட்டியார் அதைக் குறை கூறியது எனக்கு அப்பொழுது பொருத்தமாகத்
தோற்றவில்லை. அதோடு அவர் முன்னுக்குப் பின் முரண்பாடாகவே
பேசுபவரென்றுகூட நினைத்தேன். துறைசை யமக அந்தாதி முதலியவற்றிற்கு
எளிதில் பொருள் விளங்கவில்லை என்று அவர் முதலில் கூறினார். எளிதில்
பொருள் விளங்கும் இந்தப் பாடலில் அழகில்லை என்றார்.

ஆறுமுகத்தா பிள்ளைக்குப் பாடல்களின் உயர்வு தாழ்வைப் பற்றிய
கவலை உண்டாகவில்லை. தங்கள் ஊர் விஷயமாகப் பிள்ளையவர்கள் செய்த
நூலை, அவர் அருமையாகப் பாராட்டுபவர். அதைச் செட்டியார் குறை
கூறியபொழுது அவருக்குச் சிறிது வருத்தமுண்டாயிற்று.

“ஐயாவையே கேட்டுப் பாருங்கள். இந்த அந்தாதி அவர்கள்
பாடியதுதான் என்று தெரிய வரும். ஐயா அவர்கள் வாக்கை நீங்கள் தூஷிப்பது
நன்றாக இல்லை” என்று ஆறுமுகத்தா பிள்ளை செட்டியாரிடம் சொன்னார்.

“ஐயாவைத் தான் கேட்கலாமே” என்று சொல்லிக் கொண்டே
செட்டியார் ஆசிரியரைப் பார்த்து, “இவர் ஏதோ சொல்கிறாரே; இது
நிஜந்தானா? இந்த மாதியும் நீங்கள் ஒரு நூல் இயற்றியதுண்டா? இவருக்காகச்
சொல்ல வேண்டாம். ஞாபகப் படுத்திக் கொண்டு சொல்லுங்கள். இத்தகைய
நூலை நீங்கள் எதற்காகச் செய்தீர்கள்?” என்பன போன்ற கேள்விகளைக்
கேட்க ஆரம்பித்து விட்டார்.

எல்லாவற்றையும் மிக்க பொறுமையுடனே கேட்டுக் கொண்டிருந்த
பிள்ளையவர்கள், “என்னப்பா தியாகராசு, மேலே மேலே ஓடுகிறாயே; இந்த
மாதிரியான பிரபந்தத்தை நான் செய்திருக்கக் கூடாதா? இதிலே ஏதாவது பிழை
இருக்கிறதா? எளிய நடையில் பாடல் செய்வது தவறா? சாதாரண ஜனங்களும்
படித்துப் பொருளறியும்படி இருந்தால் நல்லதுதானே? கடினமாக இருந்தால்
கஷ்டமல்லவா?” என்று கூறினர்.

கேட்ட செட்டியார், “அப்பாடியானல் சரி; உங்களுக்கு இதனால்
அகௌரவம் வரக்கூடாதென்பதுதான் என் விருப்பம். சரி; நேரமாகி விட்டது;
புறப்படலாமே” என்றார்.