பக்கம் எண் :

420என் சரித்திரம்

களிற் சொல்லும் ஒருவிதமான ஓசையுடன் பாடலைச் சொல்லிக் காட்டி,
“இப்படியல்லவா படிக்க வேண்டும்? உமக்குப் படிக்கத் தெரியவில்லையே!”
என்று கூறினார். எனக்கு உள்ளுக்குள்ளே சிரிப்பு உண்டாயிற்று.
“பிள்ளையவர்கள் ஒருவரே இசை விரோதி என்று எண்ணியிருந்தோம். இவர்
கூட அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே” என்று எண்ணினேன்.
அவர் சொன்ன இசையும் எனக்குத் தெரியும். பிள்ளையவர்களும் தியாகராச
செட்டியாரும் அந்த ஓசையோடுதான் பாடல் சொல்வார்களாதலால் எனக்கும்
அந்தப் பழக்கம் இருந்தது. ஆதலால் கோவிந்த பிள்ளை சொன்ன இசையிலே
நான் பாடலைப் படித்துக் காட்டினேன். “இப்படியல்லவா படிக்க வேண்டும்!”
என்று அவர் பாராட்டினார். தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த ராகம்கூட
வரும்போல் இருக்கிறதே!” என்று சொல்லி நகைத்தார்.

“இதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்வதில்லை; இப்போது
நேர்ந்திருக்கிறது” என்று சொன்னேன். ‘ராகம்’ என்று அவர் பரிகாசத்
தொனியோடு கூறினாரென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

கோவிந்த பிள்ளையின் காதிலே படும்படி படித்துப் படித்து ஒரே
நாளில் தொண்டை கட்டிவிட்டது. அவர் தொடர்ச்சியாகக் கம்ப
ராமாயணத்திற்குப் பொருள் சொல்லி வந்தார். இடையிடையே அவர்
திவ்யப்பிரபந்த வியாக்கியானங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டினார்.
மணிப்பிரவாள நடையிலுள்ள அவற்றைக் கேட்டுச் சுப்பிரமணிய தேசிகர் மிக்க
சந்தோஷத்தை அடைந்தார். அந்த வியாக்கியானங்களில் அவருக்கு விருப்பம்
உண்டு. வைஷ்ணவ நூல்களில் பயிற்சியுடையவர் யாரேனும் வந்தால் அவரிடம்
அவ்வியாக்கியானங்களிலிருந்து சில பகுதிகளைச் சொல்லச் செய்து கேட்டு
மகிழ்ந்து சம்மானம் வழங்குவார்.

‘இருதலை மாணிக்கம்’

ஒரு நாள் சுப்பிரமணிய தேசிகர் எங்களையெல்லாம் பரீட்சிக்கும் படி
கோவிந்த பிள்ளையிடம் சொன்னார். அவர் அப்படியே இலக்கண
இலக்கியங்களில் ஒவ்வொருவரையும் சில சில கேள்விகள் கேட்டார். என்னைப்
பரீட்சிக்கையில் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் “ஓதக்கே ணெஞ்சே”
என்னும் பாட்டைக் கூறிப் பொருள் சொல்லும்படி ஏவினார். நான் சொல்லி
வரும்போது அதில் வரும் ‘அஞ்சை மாமணியைப் போற்று’ என்பதற்கு
‘அஞ்சை-பஞ்சா யுதத்தை, மாமணியை-திரு மார்பில் அணிந்த சௌஸ்துபத்தை,