பக்கம் எண் :

572என் சரித்திரம்

நான் :- இதற்கு முன்பு சென்னையில் கும்பகோண புராணம் முதலிய
சில நூல்களை அச்சிட்டதுண்டு. சேலம் இராமசுவாமி முதலியார் வேண்டிய
உபகாரங்களைச் செய்வதாக வாக்களித்திருக்கிறார்.

தாமோ:- அவர் என்ன உபகாரம் செய்வார்? பணம் வேண்டுமனால்
சிறிது கொடுப்பார். ‘புரூப்’ பார்ப்பாரா? பதிப்புக்கு வேண்டிய அமைப்புக்களைச்
சொல்லித் தருவாரா? நீங்கள் முன்னமே பதிப்பித்த கும்பகோண புராணம்
போன்றதன்று இந்த நூல். இதைப் பதிப்பிக்க வேண்டிய முறையே வேறு.
சென்னைக்கே போய் அங்கே நேரில் இருந்து காரியத்தை முடிக்க வேண்டும்.
அங்குள்ள ஸ்காட்டிஷ் அச்சுக்கூடத் தலைவர் எனக்கு மிக வேண்டியவர். நான்
எது சொன்னாலும் நிறைவேற்றித் தருவார். இந்த விஷயத்தில் காலேஜ் வேலை
வேறு உங்களுக்கு ஒரு தடையாக இருக்கும்.

நான்:- காலேஜ் வேலை எனக்கு ஒரு தடையாயிராது. ஒழிந்த
நேரத்தில்தானே நான் இந்த வேலையைக் கவனிப்பேன்? அவசியமானால் லீவு
வாங்கிக் கொள்ளுகிறேன். நான் எழுத்தெழுத்தாக ஆராய்ந்து வைத்திருக்கும்
நூலை உங்களிடம் விடுவதானால் என் உழைப்பு வீணாக அன்றோ போய்
விடும்?

தாமோ:- ஏன் வீணாகும்? அவ்வளவு நன்றாக உபயோகப்படுமே!
நீங்கள் ஆராய்ந்து கண்ட விஷயங்களை என் பதிப்பில் சேர்த்துக்
கொள்ளுகிறேன். உங்கள் பெயரையும் வெளிப்படுத்துகிறேன். நீங்கள்
பதிப்பிப்பதாக இருந்தால் உங்கள் உழைப்பைப் பற்றி நீங்களே பாராட்டிக்
கொள்ள முடியாது. நான் பதிப்பித்தால் உங்களைச் சிறப்பித்து நன்றாக
எழுதுவேன்.

புகழ் வேண்டாம்

நான்:- எனக்குப் புகழ் வேண்டு மென்றும் பிறர் என்னைப் பாராட்ட
வேண்டுமென்றும் நான் எதிர் பார்க்கவில்லை. நான் பதிப்பிப்பதாகச் செய்து
கொண்ட சங்கற்பமும், அதன் பொருட்டு மேற்கொண்ட சிரமங்களும் வீணாகி
விடுமேயென்று யோசிக்கிறேன்.

தாமோ:- இதுவரையில் நீங்கள் பட்ட சிரமம் பெரிதன்று. இதைப்
பதிப்பிப்பதிலேதான் உண்மையான சிரமம் இருக்கிறது. அந்தச் சிரமம்
உங்களுக்கு ஏற்பட வேண்டாமே யென்றுதான் சொல்லுகிறேன். நான் அந்தத்
துறையில் உழைக்க வேண்டு