பக்கம் எண் :

576என் சரித்திரம்

டுள்ள புத்தகத்தில் ‘மேம்படுத்தின’ என்று இருக்கிறது.இதை விளங்கச்
செய்ய வேண்டும்” என்று கேட்டார். விளக்கினேன். “வென்றிக் களிற்றை
விரிதாரவன் வென்றவாறும்’ என்பதற்கு, ’பிறரை முன்பு வென்ற
வெற்றியையுடைய களிறு’ என்று உரை எழுதியிருக்கிறதே. என்ன விஷயம்?”
என்று கேட்டார்: அதையும் விளக்கமாகச் சொன்னேன்.

அப்பால் இவற்றைப் போன்ற வேறு சில ஐயங்களை வினாவினார்.
விளக்கமாகச் சொன்னேன். எல்லாவற்றையும் அம்பிகை பாக உபாத்தியாயர்
கவனித்து வந்தார். அப்பால் நான் தாமோதரம் பிள்ளையைப் பார்த்து, “நீங்கள்
இப்போது கேட்ட கேள்விகள் மிகவும் சாதாரணமானவை. கடினமான பாகங்கள்
இந்நூலில் எவ்வளவோ உண்டு. அவை விளங்குவதற்கு ஏற்ற சௌகரியம்
உங்களுக்கில்லை. ஆதலால் இம்முயற்சியை நீங்கள் நிறுத்திவிடுங்கள். நானே
பதிப்பித்தலை மேற்கொள்வேன். பொருள் விளங்காமல் நீங்கள் எங்ஙனம்
பதிப்பிக்க முடியும்?” என்றேன். அவர், “நூல் இறவாமல்
இருக்கவேண்டுமென்பது என் கருத்து. பொருளுதவி கிடைக்கும்போது நூலைப்
பதிப்பித்து விட்டால் படிப்பவர்கள் பொருள் செய்து கொள்வார்கள்” என்று
சொன்னார். “விஷயம் தெரியாமல் வெளியிட்டால் படிப்பவர்கள் எவ்வாறு
தெரிந்து கொள்வார்கள்? நான் ஒரு வகையாக வரையறை செய்து
வைத்திருக்கிறேன். ஆதலால் இந்தக் காரியத்தை நானே செய்வேன். நீங்கள்
பதிப்பித்தாலும் பதிப்பிக்கலாம். ஆனாலும் என் முயற்சியை நான் விடப்
போவதில்லை” என்று சொல்லி, என் கையிலிருந்த என் பிரதி இரண்டு
பாகங்களையும், அவரிடம் தெரிவித்துவிட்டு, என் தம்பி வசம் கொடுத்து,
“இவற்றை ஜாக்கிரதையாக வீட்டிற்கு எடுத்துப்போய் வைத்திரு. அப்பாவிடமும்
சொல்லு. நான் பின்னால் வருகிறேன்” என்று சொல்லி யனுப்பி விட்டு
அவரிடம் சிறிது நேரம் பேசினேன். எங்கள் சம்பாஷணைகளைக் கவனித்த
அம்பிகைபாக உபாத்தியாயர் அவரை நோக்கி, “ஐயா, இந்த ஐயர் பலமுறை
ஆராய்ந்து ஆழ்ந்து படித்தவரென்றும் நீங்கள் ஒரு முறையேனும் இந்நூலைப்
படித்துப் பார்க்கவில்லை யென்றும் நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த
சம்பாஷணையிலிருந்து நான் அறிந்தேன். ஆதலால் இந்த நூற்பதிப்பு
வேலையை இவரிடமே விட்டு விடுங்கள். நீங்கள் மேற்கொள்ள வேண்டாம்”
என்று கண்டிப்பாகச் சொன்னார். பிள்ளை ஒன்றும் சொல்லாமல் மௌனமாக
இருந்தார். அப்பால் அவ்விருவரிடமும் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன்.
மிக்க கவலையோடிருந்த என் தந்தையார் சிந்தாமணிப் பிரதியைப் பார்த்து
ஆறுதலுற்றார். “வென்றிக் களிற்றை” என்ற தொடரையும், அம்பிகைபாக
உபாத்தியாயரையும் நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்.