பக்கம் எண் :

சிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம் 579

எப்பொழுதும் சிந்தாமணியின் ஞாபகமாகவே நான் இருந்து வந்தேன்.
அப்பதிப்பு நன்கு நிறைவேற வேண்டுமென்று எல்லாத்தெய்வங்களையும்
வேண்டினேன். 1886-ஆம் வருஷம் காலேஜ் கோடை விடுமுறையில்
சென்னைக்குச் சென்று சிந்தாமணிப் பதிப்பை ஆரம்பித்து விடவேண்டுமென்று
நிச்சயம் செய்தேன். ஆதலால் அதற்கேற்றபடி கைப் பிரதியை ஸித்தம்
செய்தேன்.

சென்னைப் பிரயாணம்

இறைவன் திருவருளைச் சிந்தித்துக் கொண்டு சென்னைக்குப்
புறப்பட்டேன். இராமசுவாமி முதலியார் அப்பொழுது சென்னையில்
இல்லாமையால் அவருடைய பங்களாவுக்குச் செல்லாமல் சோடசாவதானம்
சுப்பராய செட்டியார் வீட்டிற்குச் சென்று தங்கினேன். நான் கொண்டு சென்ற
கையெழுத்துப் பிரதிகளையும் ஆராய்ச்சிக்கு வேண்டிய கருவிகளையும்
வேறுசாமான்களையும் அங்கே வைத்துக்கொண்டு புரசபாக்கத்திலுள்ள ஒரு
போஜன விடுதியில் ஆகாரம் செய்துவந்தேன். என் பெட்டியில் பூர்த்தியும்
அபூர்த்தியுமான சிந்தாமணி ஏட்டுப் பிரதிகள் 24 இருந்தன. சுப்பராய
செட்டியார் பல காலமாக நூற்பதிப்பு விஷயத்தில் ஈடுபட்டவராதலால் அவர்
மூலமாகவே அச்சுக்கூடத்தைத் திட்டம் செய்து பதிப்பிக்கலாமென்று
கருதினேன்.

ராஜகோபாலாச்சாரியர்

நான் சென்னை சென்ற மறுநாட் காலையில் ஸ்ரீவைஷ்ணவரொருவர்
சுப்பராய செட்டியார் வீட்டில் என் வரவை எதிர் பார்த்திருந்தார். என்னைக்
கண்டு அவர் பராமுகமாகவே இருந்தார். செட்டியாரை நோக்கி, “இவர்கள்
யார்?” என்று கேட்டேன். “இவர் எஸ்.பி.ஸி.கே. அச்சுக்கூடத்தில் இங்கிலீஷ்
பகுதியில் மேல் விசாரணைக்காரர். தமிழிலும் நல்ல பயிற்சியுள்ளவர். பல
பாஷைகள் இவருக்கு வரும். அச்சிடும் விஷயத்தில் ஆதியோடந்தமாக
எல்லாவற்றையும் நன்றாக அறிந்தவர். உங்களைப் பார்க்கத்தான்
வந்திருக்கிறார்” என்றார்.

எனக்கு அளவற்ற மகிழ்ச்சியுண்டாயிற்று. பதிப்பு விஷயத்தில்
அவருடைய துணை கிடைக்குமென்ற நம்பிக்கையினால். “ஸ்வாமி உங்களைத்
தெரிந்து கொண்டது பரம சந்தோஷம். உங்களுடைய பழக்கமும் ஆசீர்வாதமும்
உதவியும் எனக்கு வேண்டும். அச்சிடும் வேலையில் எனக்கு அதிகப்
பழக்கமில்லை. ஆதலால் உடனிருந்து பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று
கேட்டுக் கொண்டேன். அவர் ஊர் தேரழுந்தூரென்றும் அவருடைய பெயர்
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியரென்றும் அறிந்தேன்.