பக்கம் எண் :

754என் சரித்திரம்

சுந்தரம் பிள்ளை கடிதங்கள்

1896-ஆம் வருஷ ஆரம்பத்தில் திருவனந்தபுரத்தில் இருந்த புரொபஸர்
பி. சுந்தரம் பிள்ளை, தாமுள்ள காலேஜில் தமிழாசிரியர் வேலைக்குத் தக்க
ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களென்று தெரிவித்தார். அன்றியும், நான்
அவ்வேலையை ஏற்றுக்கொண்டால் ஆரம்பத்தில் ரூபாய் அறுபத்தைந்து
கிடைக்குமென்றும், படிப்படியாக உயருமென்றும் எழுதினார். எனக்கு அது
சம்மதமாக இல்லை. பிறகு ஆங்கிலம் தெரிந்த ஒருவரை அந்த ஸ்தானத்தில்
நியமித்து விட்டார்கள்.

அக்காலத்தில் சுந்தரம் பிள்ளை இயற்றிய மனோன்மணீய நாடகத்தின்
சில பகுதிகள் காலேஜ் வகுப்புகளுக்குப் பாடமாக இருந்தன. அவற்றை நான்
பாடம் சொல்லி வரும்போது பாராட்ட வேண்டிய இடத்திற் பாராட்டி விட்டுப்
பிழையாகத் தோற்றிய சிலவற்றைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னேன்.
இவ்விஷயத்தை யார் மூலமாகவோ அறிந்த சுந்தரம் பிள்ளை அக்குற்றங்கள்
இன்னவையென்று தெரிவிக்கும்படி எனக்குக் கடிதம் எழுதினார். நான்
அங்கங்கே கண்டவற்றைத் தொகுத்து எழுதியனுப்பவே அவர் உசிதமான
திருத்தங்களை ஏற்றுக் கொண்டு தம் நன்றியறிவைத் தெரிவித்தார். அது முதல்
அடிக்கடி அவர் அன்போடு எனக்குக் கடிதங்கள் எழுதி வந்தார்.

காதையும் பாட்டும்

மணிமேகலையை விரைவில் அச்சுக்குக் கொடுக்கும் பொருட்டு உரிய
ஏற்பாடுகளைச் செய்து வந்தேன். மிதிலைப் பட்டியில் கிடைத்த பிரதி தான்
எனக்குப் பெருந்துணையாக இருந்தது. மற்றப் பிரதிகளில் ஒவ்வொரு பகுதியும்
காதையென்ற பெயருடையதாக இருந்தது. மிதிலைப் பட்டிப் பிரதியில் பாட்டு
என்று இருந்தது. முதலில் பதிகமென்பது கதை பொதி பாட்டு என்றும்,
விழாவறை காதை யென்பது விழா வறைந்த பாட்டு என்றும், இவ்வாறே
மற்றவற்றின் பெயர்களும் மாறிக் காணப்பட்டன. அந்தத் தலைப்புக்களிலிருந்து
காதை யென்பதற்குப் பாட்டென்னும் பொருள் கொள்ளலாமென்று தெரிய
வந்தது. மற்ற ஆதாரங்களைக் கொண்டும் அப்பொருளே உறுதியாயிற்று.

மணிமேகலை மூலம்

மணிமேகலையின் மூலம் மாத்திரம் 1891-ஆம் வருஷம் திருமயிலை
வித்துவான் சண்முகம் பிள்ளையால் அச்சிடப்பெற்றது. பொருள்