பக்கம் எண் :

ஆன்ம சோதனையின் பலன் 315

Untitled Document
தெரியாது என்றும்,     ஹிந்து சமய நூல்களை நான் மூலமொழியில்
படித்ததில்லை என்றும், மொழிபெயர்ப்புக்களை   நான் படித்ததுகூட
மிகக்குறைவே என்றும்       அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்.
ஆனால், சமஸ்காரம் அல்லது      பூர்வஜன்ம வாசனை, மறுபிறப்பு
ஆகியவைகளில் அவர்கள்   நம்பிக்கையுள்ளவர்களாகையால், நான்
கொஞ்சமாவது தங்களுக்கு       உதவியாக இருக்க முடியும் என்று
அவர்கள் எண்ணினார்கள்.       ஆகவே, ‘ஆலையில்லா ஊருக்கு
இலுப்பைப்பூ சர்க்கரை’ என்பது போலானேன். இந்த    நண்பர்கள்
சிலருடன் சேர்ந்து சுவாமி விவேகானந்தரின்   ‘ராஜ யோகம்’ என்ற
நூலைப் படிக்க ஆரம்பித்தேன். எம்.என்.       துவிவேதி எழுதிய
’ராஜயோகம்’ என்ற நூலை,             வேறு சிலருடன் சேர்ந்து
படித்தேன்.ஒரு நண்பருடன் பதஞ்சலியின் யோக சூத்திரங்களையும்,
மற்றும் பலருடன்              பகவத் கீதையையும் நான் படிக்க
வேண்டியதாயிற்று. ஒருவகையான      மெய் நாடுவோர் சங்கத்தை
நாங்கள் அமைத்துக்கொண்டு       ஒழுங்காக நூல்களைப் படித்து
வந்தோம். கீதையினிடம் இதற்கு முன்பே  எனக்குப் பக்தி இருந்தது;
அது என் உள்ளத்தைக்      கவர்ந்தும் இருந்தது. அதை ஆழ்ந்து
படிக்க வேண்டியதன்      அவசியத்தை இப்பொழுது உணர்ந்தேன்.
என்னிடம்   கீதையின் இரண்டொரு மொழிபெயர்ப்புக்கள் இருந்தன.
அவற்றைக் கொண்டு சமஸ்கிருத      மூலநூலைப் புரிந்து கொள்ள
முயன்றேன். தினம் இரண்டொரு சுலோகத்தை         மனப்பாடம்
செய்துவிடுவது என்றும்         தீர்மானித்தேன்.   எனது காலைக்
கடன்களைச் செய்யும் நேரத்தை          இதற்குப் பயன்படுத்திக்
கொண்டேன். இவ்வேலைகளை முடிப்பதற்கு எனக்கு முப்பத்தைந்து
நிமிடங்களாகும். பல் துலக்குவதற்குப்      பதினைந்து நிமிடங்கள்;
குளிக்க இருபது நிமிடங்கள். மேனாட்டு வழக்கத்தை   அனுசரித்து,
நின்றுகொண்டே பல் துலக்குவேன். அப்போது எதிரேயுள்ள சுவரில்
கீதையின் சுலோகங்களை    எழுதிய காகிதத்தை ஒட்டி விடுவேன்.
நினைவுபடுத்திக்கொள்ள        அவ்வப்போது அதைப்  பார்த்துக்
கொள்ளுவேன். அன்றாடம் மனப்பாடம் செய்துகொள்ள  வேண்டிய
சுலோகங்களை மனப்பாடம்       செய்துகொள்வதற்கும், முன்னால்
மனப்பாடம் செய்திருந்த          சுலோகங்களை நினைவுபடுத்திக்
கொள்ளுவதற்கும் எனக்கு அந்த   நேரம் போதுமானதாக இருந்தது.
இவ்வாறு             பதின்மூன்று அத்தியாயங்களை மனப்பாடம்
செய்துவிட்டதாக எனக்கு ஞாபகம். ஆனால்,     வேறு வேலைகள்
அதிகமாகிவிட்டபோது கீதையை மனப்பாடம் செய்வதை  விட்டுவிட
வேண்டியதாயிற்று.             சிந்திப்பதற்கு    எனக்கு இருந்த
நேரத்தையெல்லாம், சத்தியாகிரகத்தின் பிறப்பும் அதன் வளர்ச்சியும்
கிரகித்துக் கொண்டு    விட்டன. இன்றுவரை நிலைமை அவ்வாறே
இருந்து வருகிறது எனலாம்.