பக்கம் எண் :

402சத்திய சோதனை

Untitled Document
வேலைக்குச்       சோம்பியதும் உண்டு. சில சமயங்களில் இதைப்
பார்க்காதது போல       இருந்து விடுவேன். ஆனால், அநேகமாக
அவர்களிடம் நான் கண்டிப்பாகவே இருப்பேன். இந்தக் கண்டிப்பை
அவர்கள் விரும்புவதில்லை என்றே சொல்லுவேன். என்றாலும், என்
கண்டிப்பை அவர்கள்       ஒரு சமயமாவது எதிர்த்ததாக எனக்கு
ஞாபகமில்லை. நான் அவர்களிடம் கண்டிப்பாக இருந்த சமயங்களில்
ஒருவர் செய்ய வேண்டிய     வேலை விஷயத்தில் விளையாட்டாக
இருந்துவிடக் கூடாது என்று எடுத்துக்காட்டி, அவர்கள் உணரும்படி
செய்வேன். ஆனால்,          அந்த உறுதி அவர்களிடம் கொஞ்ச
நேரத்திற்குத்தான் இருக்கும். அடுத்த கணம் அவர்கள் வேலையைப்
போட்டுவிட்டு விளையாடப் போய்விடுவார்கள். என்றாலும்,  நாங்கள்
சமாளித்துக் கொண்டு வந்தோம். அவர்கள்      நல்ல உடற்கட்டும்
அடைந்து வந்தார்கள்.      பண்ணையில் நோய் என்பதே இல்லை.
இதற்கு நல்ல காற்றும், நீரும்,      உரிய வேலையில் சாப்பிடுவதும்
காரணங்களாகும் என்றும் சொல்லவேண்டும்.

     கைத்தொழில் பயிற்சியைப்          பற்றியும் கூற வேண்டும்.
சிறுவர்களில்          ஒவ்வொருவருக்கும் பயனுள்ள ஏதாவது ஒரு
கைத்தொழிலைச் சொல்லிக்       கொடுக்க வேண்டும் என்பது என்
நோக்கம். ஸ்ரீ கால்லென்பாக்       செருப்புத் தைக்கும் தொழிலைக்
கற்றுக்கொண்டு வந்தார்.   இந்த வித்தையை நானும் கற்றுக்கொண்டு,
அதைக்            கற்றுக்கொள்ள        விரும்பியவர்களுக்கும்
சொல்லிக்கொடுத்தேன். ஸ்ரீ கால்லென்பாக்குக்குத்   தச்சுவேலையிலும்
கொஞ்சம் அனுபவம் உண்டு. அத் தொழிலறிந்த      மற்றொருவரும்
பண்ணையில் இருந்தார். ஆகவே, தச்சுத் தொழில் கற்றுக்கொடுக்கவும்
ஒரு சிறு வகுப்பு ஆரம்பித்தோம். சமையல் வேலையோ அநேகமாக
எல்லாச் சிறுவர்களுக்குமே தெரியும்.

     இவை யாவும் அவர்களுக்குப் புதியவை.      ஒரு நாளைக்கு
இவைகளையெல்லாம் தாங்கள்    கற்றுக்கொள்ள வேண்டி இருக்கும்
என்று அவர்கள்         கனவு கண்டதுகூட இல்லை. பொதுவாகத்
தென்னாப்பிரிக்காவில்      இந்தியச் சிறுவர்கள் பெற்று வந்த ஒரே
பயிற்சி, படிப்பதும், எழுதுவதும்,        கணக்குப் போடுவதும்தான்.

     டால்ஸ்டாய் பண்ணையில்     உபாத்தியாயர்கள் எதைத் தாம்
செய்யவில்லையோ,         அவற்றைச் செய்யுமாறு சிறுவர்களிடம்
சொல்லக்கூடாது என்பதை ஒரு விதியாக்கி  விட்டோம். ஆகையால்,
ஒரு வேலையைச் செய்யுமாறு      குழந்தைகளிடம் கூறினால், ஓர்
உபாத்தியாயரும் அவர்களுடன் இருந்து        அந்த வேலையைச்
செய்துகொண்டிருப்பார்.              எனவே, சிறுவர்கள் எதைக்
கற்றுக்கொண்டாலும் அதை மகிழ்ச்சியுடன்   கற்றுக் கொண்டார்கள்.