பக்கம் எண் :

438சத்திய சோதனை

Untitled Document
நீதிபதிகளில் ஒருவர், “இது      மோசடியான வேலையல்லவா, ஸ்ரீ
காந்தி?” என்று கேட்டார்.

     அவர் இவ்வாறு கூறக் கேட்டதும்    என் உள்ளம் கொதித்து
விட்டது. காரணம் எதுவுமே இல்லாதபோது,    மோசடியான வேலை
செய்திருப்பதாகக் குற்றம்        சாட்டப்படுவது சகிக்க முடியாதது.
‘இவ்விதம் ஆரம்பத்திலேயே              ஒரு நீதிபதி துவேஷம்
கொண்டிருக்கும்போது இந்தக்        கஷ்டமான வழக்கில் வெற்றி
பெறுவதற்குச் சந்தர்ப்பமே         இல்லை’ என்று எனக்கு நானே
சொல்லிக்கொண்டேன். என்றாலும், மனத்தைச்      சாந்தப்படுத்திக்
கொண்டு, “நான் கூறுவதை முழுவதும் கேட்டுக்  கொள்ளாமலேயே
இதில்           மோசடியான வேலை இருப்பதாக நீதிபதியவர்கள்
சந்தேகிப்பதைக் குறித்து ஆச்சரியமடைகிறேன்” என்றேன்.

     “அப்படி நான் குற்றம் சாட்டவில்லை. அது மாதிரி இருக்குமா
என்ற யோசனைதான்” என்றார் நீதிபதி.

     “அப்படி யோசிப்பது இந்த இடத்தில்       குற்றச்சாட்டுக்கே
சமமானதாகும் என்று எனக்குத் தோன்றுகிறது.      நான் சொல்லப்
போவது முழுவதையும் கேட்டுவிட்டு அதன்        பிறகு காரணம்
இருந்தால் என் மீது குற்றம் சாட்டும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்”
என்றேன்.

     அதற்கு நீதிபதி, “இடையில் குறுக்கிட்டதற்காக வருந்துகிறேன்.
கணக்கில் ஏற்பட்டிருக்கும் தவறைக் குறித்து உங்கள் சமாதானத்தைத்
தொடர்ந்து சொல்லுங்கள்” என்றார்.

     நான் கூறவேண்டிய சமாதானத்திற்குப் போதுமான ஆதாரங்கள்
என்னிடம் இருந்தன. நீதிபதி இந்தப்    பிரச்சனையைக் கிளப்பியது
நல்லதாயிற்று. ஆரம்பம் முதலே என்னுடைய வாதங்களை நீதிபதிகள்
கவனிக்கும்படி செய்வதும் எனக்குச் சாத்தியமாயிற்று.   நான் அதிக
உற்சாகமடைந்ததோடு என்னுடைய        சமாதானத்தை விவரமாக
எடுத்துக் கூற இந்தச் சந்தர்ப்பத்தைப்   பயன்படுத்திக் கொண்டேன்.
நீதிபதிகளும் நான் கூறியதைக் கவனமாகக்   கேட்டுக்கொண்டார்கள்.
கணக்கில் ஏற்பட்ட  தவறு, கவனக் குறைவினால் ஏற்பட்டதே அன்றி
வேறல்ல என்பதை நீதிபதிகள்      ஒப்புக்கொள்ளும்படி செய்வதும்
என்னால் முடிந்தது. ஆகையால், அதிகச் சிரமப்பட்டுச் செய்யப்பட்ட
மத்தியஸ்தர் தீர்ப்பு முழுவதையுமே     தள்ளிவிட வேண்டும் என்று
அவர்கள் கருதவில்லை.

     தவறு ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டபடியால்     தாம் அதிகமாக
வாதம் செய்யவேண்டிய அவசியமில்லை என்ற நம்பிக்கையில் எதிர்த்
தரப்பு வக்கீல் இருந்தார் என்று தோன்றியது. ஆனால், நேர்ந்துவிட்ட
கணக்குத் தவறு கைத்தவறே என்றும்,          அதைச் சுலபத்தில்
திருத்திக்கொண்டு விடலாம் என்றும் நீதிபதிகள் கருதினர்.  இதனால்
எதிர்த் தரப்பு வக்கீலை அடிக்கடி