பக்கம் எண் :

52தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

தலைநகராக விளங்கியது. சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னன்
(கி.பி. 575 - 600) களப்பிரர்களைத் தோற்கடித்துக் காவிரி நதி
வரை தமது ஆட்சியை நிறுவினார். சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து
ஆட்சிக்கு வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம்
நரசிம்மவர்மன்
ஆகியோரின் ஆட்சி பெருமைமிக்கதாகும்.
தனது தந்தையையும் (மகேந்திரவர்மன்) வட இந்தியப் பேரரசர்
(கி.பி. 607-647) ஹர்சரையும் தோற்கடித்த மேலைச்சாளுக்கிய
மன்னனான இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து ‘வாதாபி
கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரை முதலாம் நரசிம்மவர்மன்
பெற்றார்.

சாளுக்கியர்களுடன் நடந்த போரில் காஞ்சி பெரிதும்
அழிவுற்றது. இரண்டாம் நரசிம்மன் என்ற இராஜசிம்மன்
ஆட்சிக் காலத்தில் காஞ்சி புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
முதலாம் பரமேஸ்வரன்
என்ற பல்லவ மன்னன் காலத்தில்
சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தன் பல்லவர் தலைநகரான
காஞ்சியைப் பிடித்தார் (கி.பி. 740). ஆனால், பரமேஸ்வரன்
தமது தலைநகரை விரைவில் மீட்டினார்.

பல்லவ மன்னர்கள் பலத்தக் கோட்டைகள் கட்டித்
தலைநகரான காஞ்சியைப் பாதுகாத்தனர். சமண சமயத்தைத்
தழுவி, இச்சமயத்திற்கு ஆதரவு கொடுத்தனர். பல அழகிய
ஆலயங்கள் கட்டி இந்து சமயத்திற்கும் கலைக்கும் பெருமை
தேடித் தந்தனர். முதலாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ
மன்னன் ஆட்சிக் காலத்தில் யுவான் சுவாங் என்ற சீன
யாத்ரீகர் இந்தியாவின் பல இடங்களுக்கு விஜயம் செய்தபொழுது
(629-644) காஞ்சிபுரத்திற்கும் வந்தார். இவர் தமது குறிப்புகளில்
காஞ்சிபுரத்தின் பெருமைபற்றிக் கூறியிருக்கிறார். காஞ்சிபுரம்
சுமார் 10 கி.மீ சுற்றளவினைக்கொண்ட சிறந்த நகரமாக இருந்தது
என்றும், மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள் என்றும், நம்பிக்கைக்கு
உரியவர்கள் என்றும், கல்வி கற்பதில் ஆர்வமுள்ளவர்கள் என்றும்
புகழ்ந்து கூறியிருக்கிறார். காசிக்கு அடுத்துக் காஞ்சி ஒரு சிறந்த
கல்வி ஸ்தலமாக விளங்கிற்று. காஞ்சி ‘கடிகா’வில் பயின்ற
தர்மபாலர்
நாளந்தாப் பல்கலைக் கழகத்தின்
துணைவேந்தராகப் பணியாற்றினார்.