சரட்டுக் கருணீகர், கைகாட்டிக் கருணீகர், மற்றவழிக் கருணீகர் என்பன அப் பிரிவுகள். இவற்றுள் சரட்டுக் கருணீகர் என்பார் வைணவ மரபைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இந் நான்கு பிரிவுகளும் ஒன்றோடொன்று கலப்பதில்லை. வேளாளர்களுள் பல பிரிவுகள் உண்டு. அவர்களுள் பலர் ஊன் உணவு கொள்ளுகின்றனர். பல குலத்தினர் தம் நிலையில் மேம்பாடு உற்றவுடனே தம்மை வேளாளர் என்று கூறிக்கொள்வதுமுண்டு. வேளாளர்களுள் கார்காத்த வேளாளர், தொண்டை மண்டல வேளாளர், கொங்கு நாட்டு வேளாளர் எனச் சில பிரிவுகள் இருக்கின்றன. திருநெல்வேலிக் கோட்டைப் பிள்ளைமார் என்றொரு வேளாளர் வகுப்பும் உண்டு. பேரி செட்டிகளுள் ஆயிரத்தான் செட்டி, ஐந்நூற்றான் செட்டி எனப் பிரிவுகள் உண்டு. இக் குலத்தினருள்ளும் ஊன் உண்பவர்கள் உண்டு. சங்க காலத்தில் சைவக் கம்மியரெனவும், சோழர் காலத்திலும் பிறகும் கண்மாளர் எனவும் பெயர் பெற்றுத் தமிழகத்தின் சிற்பக் கலை, கட்டடக் கலை, பொன் அணிகலன்கள் செய்யும் கலை, உலோகக் கலங்கள் செய்யும் கலை ஆகியவற்றில் தனிச் சிறப்பும் தனியுரிமையும் கொண்டாடி வரும் விசுவப் பிராமணர்கள் தனிப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வேறு எந்தக் குலத்துடனும், பிராமணருடனும் கலப்புகள் கொள்ளுவதில்லை. அவர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே உரிமைப் பூசல்கள் ஏற்பட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புக்குச் சென்றன என்று கூறுவர். விசுவப் பிராமணர் தம் குலத்திலேயே புரோகிதர்களை நியமித்துக்கொள்ளுகின்றனர்; பிராமணரைப் புரோகிதத்துக்கு அழைப்பதில்லை. தமிழகத்தில் பல குலத்தினரிடையே பெண்கள் மறுமணம் செய்து கொள்ளல், கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளுதல் ஆகிய பழக்கங்கள் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரையிலும் அதன் பின்பு சில ஆண்டுகள் வரையிலும் நிலவி வந்தன. சாரதா சட்டம் நிறைவேற்றப்படும் வரையில் தேவாங்கச் செட்டிகள் சிறு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வந்தனர்; இவ் வழக்கம் கோமுட்டிகளிடமும் காணப்பட்டது. பெண்கள் வயது வருவதற்குள் அவர்களுக்கு மணம் முடிப்பதில் பிராமணரும் கண்ணுங்கருத்துமாக இருந்தனர். இருபதாம் நூற்றாண்டிலே அண்மையில் எல்லாக் குலங்களிலும் ‘பருவத்துக்கு முற்பட்ட மணம்’ நின்று போய்விட்டது. ஆங்கிலேயர் வரவுக்குப் பிறகு பறையர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட குலத்தினருக்கு விடிவு காலம் தோன்றிற்று. அவர்களுள் |