பக்கம் எண் :

கற்பனை இன்பம்129

மாலையில்    அவள்     சங்கிலிப்     பூதத்தான்     சரித்திரத்தைச்
சொன்னாள். அன்றிரவு  சலசல  என்ற ஓசையும், கலகல என்ற சிரிப்பும்
பையன்  செவியில்   விழுந்துகொண்டே   இருந்தன.  அக் கதைகளைக்
கேட்டதன்  பயனாகப்  பொன்னப்பன்  இருட்டிவிட்டால் வீட்டை விட்டு
வெளியே   போகமாட்டான்.  அந்திசந்தியில் ஆற்றுக்குத் தனியே போக
நேர்ந்தால்,   ஒரு    வேப்பங்கொம்பைக்   கையில்  எடுத்துக்கொண்டு
போவான்.  வேப்பந்  தடியிருந்தால்   பேய்   அணுகாது என்று அவன்
தாய் சொல்லி வைத்திருந்தாள்.

பள்ளிக்கூடப்    படிப்பில்   பொன்னப்பன்    தந்தைக்குச்  சிறிதும்
நம்பிக்கையில்லை.  ‘பள்ளிக்  கல்வி புள்ளிக்குதவாது’   என்று அடிக்கடி
அவர்  சொல்வார்.   அந்த   வசனம்  தினந்தோறும் செவியில் விழும்.
ஆயினும், பையனுக்கு அதன் பொருள் தெரியவில்லை.

ஒரு  நாள்  அமாவாசைச்  சாப்பாடு முடித்துத் தந்தை திண்ணையில்
சாய்ந்திருக்கையில் அவரைப் பார்த்து.

பையன்:-  அப்பா!   “பள்ளிக்   கல்வி   புள்ளிக்குதவாது”  என்று
தினந்தோறும் சொல்கிறாயே! புள்ளி என்றால் என்ன?

தந்தை:-  அப்படிக்  கேளப்பா!  பிழைக்கிற  பிள்ளை அப்படித்தான்
கேட்பான்.  இந்த   வசனத்தை  எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால்,
ஒருவருக்கும் உண்மைப் பொருள் தெரியாது.

பையன்:-  அப்படியானால்  உனக்கு   மட்டும் எப்படித்  தெரிந்தது,
அப்பா? யார் சொல்லிக் கொடுத்தார்?