32. கர்ணனும் கும்பகர்ணனும் தொன்று தொட்டுச் செய்ந்நன்றி யறிந்து ஒழுகு தலைச் சிறந்த அறமெனக் கடைப்பிடித்த நாடுகளில் தலைசிறந்தது தமிழ்நாடு. நன்றி மறப்பது நன்றன்று என்றும், நன்றல்லதை அன்றே மறப்பது நன்று என்றும் தமிழ் மறையாகிய திருக்குறள் கூறுகின்றது. இன்னும், காலத்தினாற் செய்த நன்மை சிறிதாயினும் அது ஞாலத்தின் மாணப் பெரிது என்றும், ஒருவன் துணை நன்மை செய்யினும் அதைப் பனைத்துணையாய்க் கொள்ளுதலே பண்புடைமையாகும் என்றும் அறநூல்கள் நன்றியின் பெருமையை நயம்படக் கூறுகின்றன. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்று நாயனார் கூறிய அறிவுரையைப் பொன்போல் போற்றினர் தமிழ் மக்கள். இக் குறளில் அடங்கிய கருத்தை விரித்துரைக்கப்போந்த கம்பர், “சிதைவகல் காதல் தாயைத் தந்தையை, குருவை, தெய்வப் பதவிஅந் தணரை, ஆவைப் பாலரைப் பாவை மாரை |