13, சிலம்பின் காலம்* தமிழ் நாட்டார் போற்றும் ஐம்பெருங்காவியங்களுள் தலைசிறந்தது சிலப்பதிகாரம். பழந்தமிழ் நாட்டின் சீர்மைக்கும் செம்மைக்கும் சான்றாக நிற்பது அப் பெருங்காவியம். சோழ நாட்டின் செழுமையும் பாண்டிய அரசாட்சியின் சிறப்பும், சேர நாட்டரசனது வீரமும் அக் காவியத்திலே விளங்கக் காணலாம். இத்தகைய சிலப்பதிகாரம் எப்பொழுது தமிழ் நாட்டில் எழுந்தது? அதைப் பாடிய இளங்கோவடிகள் எப்பொழுது தமிழ் நாட்டில் வாழ்ந்தார்? அவருடன் பிறந்த செங்குட்டுவன் எப்பொழுது அரசு வீற்றிருந்தான்? இவற்றைச் சிறிது பார்ப்போம். சிலப்பதிகாரத்தைப் பொது நோக்காகப் பார்க்கும் பொழுது தமிழ் நாடு சிறந்த நிலையில் இருந்த காலமே சிலப்பதிகாரக் காலம் என்று தோன்றுகின்றது. சேர சோழ பாண்டியர்கள் தமிழ்நாட்டை யாண்ட காலம் அது. இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழும் செழித்து வளர்ந்த காலம் அது. கடல் வழியாக நிகழ்ந்த வாணிகத்தால் தமிழ் நாட்டிலே செல்வம் பெருகி நின்ற காலம் அது. அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் சிறந்த துறைமுக நகரமாகத் திகழ்ந்தது. * சென்னை வானொலி நிலையத்திலே பேசியது. நிலையத்தார் இசைவு பெற்றுச் சேர்க்கப்பட்டது. |