பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
33

5

யொன்றும் அதற்கெதிராகிய தழாத்தொடரென்பது அறியப்படும், மெய்ம் மயக்குச்   சூத்திரத்தில் ஒன்றை உடனிலை என்றதினால் இன்னொன்று வேற்றுநிலை யென்றறியப்பட்டாற்போல. இது சூத்திரமாதலின் சொற் சுருங்கற்கு இங்ஙனம் யாக்கப்பட்டது.

    வேற்றுமைத்தொகை முதலிய ஆறு தொகைகளும், எழுவாய்த் தொடர் முதலிய எட்டுத் தொடர்களும், நிலைமொழியும் வருமொழியும் இலக்கணத்திற் சம்பந்தப்பட்டிருப்பதும், அடுக்குத்தொடர் ஒன்றுமட்டும் சம்பந்தப்படாது நிலைமொழி வருமொழிகள் தனித்தனி நிற்பதும் எடுத்துக்காட்டு வாயிலாய்க் கண்டுகொள்க.

     எ-டு : சோறுண்டான் - வேற்றுமைத் தொகை - தழுவுதொடர்
இராமன் வந்தான் - எழுவாய்த் தொடர் - தழுவுதொடர்
  பாம்பு பாம்பு - தழாத்தொடர்.    

    நீர்க்குடம் என்பது நீரையுடைய குடம் என்று விரியும்போது, நீரை என்பது உடைய என்பதையும், உடைய என்பது குடம் என்பதையும்  தழுவுகின்றமை காண்க. நீர்க்குடம் என்று தொகையாய் நிற்கும் போதும்,  நீர் என்பது (தொக்குநிற்கும்) உடைய என்னுஞ் சொல்லையே அவாய் நிலையால் தழுவும். அல்லாக்கால், வந்தேன் என்னும் தொகை வாக்கியத்தில் நான் என்னும் எழுவாய் அவாய்நிலையால் வருவிக்கப்படாமை காண்க. சாத்தன் மரத்தை வெட்டினான் என்பதே இயல்பான தமிழுரை முறையாதலின், மரத்தைச் சாத்தன் என்பது ஒரு பயன் நோக்கிய   முறை மாற்றாகும். சாத்தன் மரத்தை என்பதில் சாத்தன் என்பது எழுவாயும், மரத்தை என்பது எழுவாயின் தொழிலை யடைகின்ற செயப்படுபொருளாயும் எங்ஙனம் இயையுமோ,  அங்ஙனமே மரத்தைச் சாத்தன் என்பதிலும் இயையும்.

    வந்த சாத்தன் மகன் என்னுந் தொடரில் வந்த என்பது மகனைத் தழுவுமாயின், அஃது இடைப்பிறவரல் எனப் பொதுவியலில் வேறிலக் கணமாகக் கூறப்படுதலின் ஈண்டைக் கேலாதாகும். ஏற்பின், பொதுவியலின் கூறும் இடைப்பிறவரல் கூறியது கூறலாய்க் குற்றந் தங்கும்.

    'சுரை யாழ அம்மி மிதப்ப' என்பது செய்யுட்குரிய மொழிமாற்றுப் பொருள்கோளாதலின், அதுவும் ஈண்டைக் கேலாது.

    ஆங்கிலத்திலும் தழுவுதொடர் தழாத்தொடர்கட்கு இலக்கணப் பொருத்த முண்மை யின்மைகளையே இலக்கணமாகக் கொள்வர்.

    Compound words (தொடர்மொழிகள்) are subdivided into two classes:

    I. Unrelated (தழாத்தொடர்) or those in which the simple words are not connected together by any grammatical relation. (These have been also called Juxta-positional).